Type Here to Get Search Results !

நாக்கில் அடிக்கடி கொப்புளங்கள் போல் வருகிறதா ??? இதோ உங்களுக்கான சில குறிப்புகள் !!!!



வாழ்வின் சுகமே ரசித்து, ருசித்து பிடித்த உணவை சாப்பிடுவது தான். அதனை கெடுக்கும் வகையில் நாக்கில் புண் அல்லது கொப்புளம் வரும் போது ஏற்படும் வேதனை யாராலும் சொல்லி புரிய வைக்க முடியாது. வாழ்வில் ஒரு முறையாவது நாக்கில் கொப்புளம் என்பது ஏற்பட தான் செய்யும். அவை ஒன்றாக இருக்கலாம் அல்லது நிறைய கொப்புளங்களாக இருக்கலாம். எப்படி இருந்தால் அவை ஏற்படும் போதெல்லாம், எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ முடியாமல் வலி எடுக்கும். இவை அவ்வளவு பெரிய பிரச்சனையெல்லாம் கிடையாது என்றாலும், அவை ஏதோ ஒரு நோய்தொற்றினால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

இத்தகைய கொப்புளங்கள் வேறு எத்தகைய பிரச்சனையையும் ஏற்படுத்துவதற்கு முன்பு அதனை சரி செய்தே ஆக வேண்டும். பொதுவாக, இது போன்ற கொப்புளங்கள் சில நாட்களில் தானாகவே மறைந்துவிடும். சில நாட்களில் அவை போகாமல் அப்படியே இருந்தால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். அப்படி மருத்துவரை அணுகுவதற்கு முன்பு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களை முயற்சித்து பாருங்கள்.

நாக்கில் கொப்புளங்கள் வருவதற்கான காரணங்கள்: 

நாக்கில் கொப்புளங்கள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை ஏற்படுவதற்கான பொதுவாக காரணங்கள் இவை தான்,

 * தவறுதலாக நாக்கை கடித்துக் கொள்ளுதல்

* ஈஸ்ட் தொற்று

* புற்றுநோய் புண்கள் அல்லது வாய்ப்புண்கள்

* மருக்கள் மற்றும் அழற்சி

* வீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சரும எரிச்சல்

* அதிகமாக புகைப்பிடித்தல்

* புற்றுநோய், லுகோபிளாக்கியா மற்றும் ஸ்டோமாடிடிஸ் போன்ற மருத்துவ நிலைகள்

கொப்புளங்களைப் போக்க என்ன செய்வது? 

தேங்காய் எண்ணெய் பொதுவாகவே எண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளிப்பது என்பது பண்டைய காலங்களில் இருந்தே பின்பற்றப்பட்டு வரும் பழக்கம். சமீபத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா கூட காலை எழுந்தவுடன் எண்ணெய் ஊற்றி வாய் கொப்பளிப்பது சிறந்தது என கருத்து தெரிவித்திருந்தார். இது செய்வதால் வாய் கொப்புளங்கள் நீங்குவதோடு, ஏராளமான ஆரோக்கிய பலன்களும் கிடைக்கும். ஏனென்றால், தேங்காய் எண்ணெயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வலி நிவாரணி பண்புகள் கொப்புளங்களை விரைந்து குணப்படுத்த உதவுகிறது. வாய் கொப்புளம் உள்ளவர்கள், தேங்காய் எண்ணெய் ஊற்றி வாய் கொப்பளிக்கலாம் அல்லது சிறிது பஞ்சில் தேங்காய் எண்ணெய் தொட்டு கொப்புளத்தின் மீது தடவி வரலாம். இரண்டொரு நாட்களிலேயே நல்ல பலன் கிடைக்கும்.

கிராம்பு எண்ணெய் :

வாய்வழி பிரச்சனைகளுக்கு முக்கிய மருத்துவ குறிப்புகளில் ஒன்று கிராம்பு. பல் வலி அல்லது சொத்தைப்பல் என்றாலும், இந்த வீட்டு வைத்தியம் ஒருபோதும் தோல்வியடையாது. கிராம்பில் ‘யூஜெனோல்' உள்ளது, இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட இயற்கை மயக்க மருந்து ஆகும். இது கொப்புளங்களைக் குறைக்க உதவும். கிராம்பு எண்ணெயில் சில துளிகளை தண்ணீரில் கலந்து வாயை கழுவவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வரவும்.

டீ ட்ரீ எண்ணெய் :

டீ ட்ரீ எண்ணெயில் ‘டெர்பினீன் -4-ஓல்' என்ற அழற்சி எதிர்ப்பு கலவை உள்ளது. இது வாய்வழி கேண்டிடியாஸிஸைத் தடுக்கிறது. நாக்கில் ஏற்படக்கூடிய கொப்புளங்களுக்கும் இது உதவும். டீ ட்ரீ எண்ணெயை 3-4 சொட்டு தண்ணீரில் கலந்து வாயை கழுவவும். தினமும் இரண்டு முறை இதைச் செய்து வந்தால் ஒரு வாரத்திற்குள் கொப்புளம் மறைந்துவிடும்.

உப்பு நீர் :

வாய்வழி பிரச்சனைகளுக்கு மிகவும் மதிப்பிடப்பட்ட தீர்வுகளில் இதுவும் ஒன்றாகும். உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது, கொப்புளங்களை மட்டுமல்ல, வாய் புண், தொண்டை புண் போன்ற பல பிரச்சனைகளுக்கும் நிரூபிக்கப்பட்ட தீர்வாகும். உப்பில், சோடியம் மற்றும் குளோரின் உள்ளது. அவை கொப்புளங்களைக் குறைப்பதோடு, அதனால் உண்டாகும் வலியையும் குறைத்திடும்.

வைட்டமின் பி :

சப்ளிமெண்ட் பலருக்குத் தெரியாத ஒரு உண்மை என்னவென்றால் உடலில் வைட்டமின் பி குறைபாடு காரணமாக கொப்புளங்கள் ஏற்படக்கூடும். உங்கள் நாக்கில் பல கொப்புளங்கள் ஏற்பட்டால், அதற்கு சால்மன், முட்டை, முழு தானியங்கள், ஓட்ஸ், சீஸ் போன்ற வைட்டமின் பி நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணுங்கள். இதனை சாப்பிட்ட பிறகு கொப்புளங்கள் மறைவதை கண்டால், இவை அனைத்தும், வைட்டமின் பி குறைபாட்டினால் தான் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். நாக்கில் கொப்புளங்கள் ஏற்படுவது எல்லாம் ஒரு பொதுவான பிரச்சனை தான். இது போன்ற பிரச்சனைகளை இயற்கை தீர்வுகள் மூலமே குறைத்திட முடியும். எனவே, அடுத்த முறை, நாக்கில் கொப்புளம் ஏற்படும்போது, உடனடி நிவாரணம் பெற வேண்டுமென்றால், மேலே கூறப்பட்டுள்ள சில வழிமுறைகளை முயற்சிக்கவும்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad