Type Here to Get Search Results !

அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிக்கும் - டொனால்டு டிரம்ப்; இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னேற்றம்

அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிக்கும்; பிரதமர் மோடிக்கு துணை நிற்போம் - டொனால்டு டிரம்ப்
கொரோனாவுக்கு  எதிரான போராட்டத்தில் தனது நாடு இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை டுவீட் செய்துள்ளார். "இந்த தொற்றுநோய்களின் போது நாங்கள் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு துணை நிற்கிறோம்" என்று அவர் கூறி உள்ளார்.
கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது.  ஒன்றாக இணைந்து நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியை வெல்வோம்! என கூறி உள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னேற்றம்
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதித்து, 3 லட்சம் பேரை பலி கொண்டுள்ள இந்த தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.  அதே நேரத்தில் உலகமெங்கும் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் மட்டும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

அந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி கண்டுபிடிக்கும் மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இந்த பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை குரங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்த்துள்ளனர். அதில் கொரோனா வைரசை தடுப்பதற்கான அறிகுறிகள் தெரிய வந்துள்ளன. அத்துடன் பாதகமான விளைவுகளின் அறிகுறிகள் எதுவும் தெரியவரவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசால் நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சேதம் அடைவதை இந்த தடுப்பூசி தடுக்கக்கூடியதாக அமையும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட குரங்குகளின் மூச்சுக்குழாய் அழற்சி திரவம் மற்றும் சுவாசக்குழாய் திசுக்களில் கொரோனா வைரஸ் குறைந்ததை காண முடிந்தது.  மேலும் நிமோனியாவும் வரவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அதிகளவிலான கொரோனா வைரஸ் தொற்று வெளிப்பாடுக்கு ஆளான பின்னர் 6 குரங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில், அந்த குரங்குகளுக்கு வைரஸ் இல்லை என தெரிய வந்தது. அவற்றுக்கு தடுப்பூசியால் பாதிப்பு ஏற்பட்டதற்கு அறிகுறி எதுவும் இல்லை.

தற்போது மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்படுகிற தடுப்பூசிக்கான ஊக்கம் அளிக்கிற அறிகுறிகளாக இது பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி பயனுள்ளதாக இருக்குமா? என்பதை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும், “குரங்குகளுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி ஆராய்ந்திருப்பது, மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு சோதித்து வருகிற தடுப்பூசி பரிசோதனைக்கு துணையாக அமைந்துள்ளது. இந்த முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று லண்டன் கிங் கல்லூரியின் மருந்து மருத்துவ பேராசிரியர் டாக்டர் பென்னி வார்ட் குறிப்பிட்டார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனத்தின் தடுப்பூசி துறை பேராசிரியை சாரா கில்பர்ட் கூறும்போது, “தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.

அத்துடன், “நிச்சயமாக இதை மனிதர்களுக்கு செலுத்தி தரவை பெற வேண்டும். இந்த தடுப்பூசியை பரவலாக பயன்படுத்துவதற்கு முன்பாக, இது வேலை செய்கிறது, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை தடுத்து நிறுத்துகிறது என்பதை நாங்கள் நிரூபித்தாக வேண்டும்” என்று கூறினார்.

இதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும், இங்கிலாந்தின் மருந்துத்துறை ஜாம்பவான் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இதுபற்றி குறிப்பிடுகையில், “நாங்கள் ஆக்ஸ்போர்டு குழுவுடன் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் போட்டுள்ளோம். சோதனைகள் வெற்றி பெற்று விட்டால், இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி பேருக்கு செலுத்தத்தக்க அளவு தடுப்பூசி மருந்தினை உற்பத்தி செய்து விடலாம்” என கூறியது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருந்துத்துறை பேராசிரியர் ஜான் பெல் கூறும்போது, “தடுப்பூசி செலுத்தப்படுகிறவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்ற சமிக்ஞைக்காக காத்து இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

இந்த தடுப்பூசி சோதனை இங்கிலாந்தில் வெற்றி பெறுகிறபோது, மதிப்பீடு செய்வதற்கு அடுத்த கட்டமாக கென்யா மருத்துவ ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளையும், அந்த நாட்டு அரசையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு நாடும் என தகவல்கள் கூறுகின்றன.

பேராசிரியர் ஜான் பெல் தொடர்ந்து கூறுகையில், “இந்த தடுப்பூசியை பெரிய அளவில் தயாரிக்க உலகின் பிற நாடுகளும் தயாராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். உதாரணமாக வளரும் நாடுகளில் தேவை அதிகமாக இருக்கும்” என தெரிவித்தார்.

இங்கிலாந்தில் மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்தி பார்க்கப்படுகிற சோதனைகளின் முடிவு அடுத்த மாதத்திற்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad