Type Here to Get Search Results !

குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றிய வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது; ஆன்லைனில் நடத்தப்பட்ட மாதிரி ‘நீட்’ தேர்வு: மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றிய வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது
நாடு முழுவதும் இணையதளங்களில் குழுந்தைகளின் ஆபாச படங்கள் அதிகளவு பதிவேற்றம் செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தமிழக போலீசார் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள், பதிவேற்றம் செய்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வளையபாளையத்தை சேர்ந்த சந்திரன் மகன் ரங்கநாதன் (வயது 29). இவர் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ததாக சென்னை சைபர் கிரைம் போலீசார் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கைது

தகவலின் பேரில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று ரங்கநாதனை கைது செய்தனர் அவர்மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, குழந்தைகளின் ஆபாச படங்களை அதிகமாக பார்ப்பதால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதன்படி குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடர்ந்து இணையதளத்தை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

எனவே யாரும் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்யவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ கூடாது. மீறினால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் நடத்தப்பட்ட மாதிரி ‘நீட்’ தேர்வு: மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கரிக்காலி ராணி மெய்யம்மை நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 49). இவர், கரிக்காலியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி சிவகாமிசுந்தரி. இவர் கரூரில் உள்ள இந்தியன் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு நரேந்திரன் என்ற மகனும், சாய்பாலா (20) என்ற மகளும் உள்ளனர். சாய்பாலா ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக, சென்னையில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் ‘நீட்’ பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்தநிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சாய்பாலா கரிக்காலியில் உள்ள தனது வீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் வந்தார்.

தற்கொலை

பின்னர் வீட்டில் இருந்தவாறே ஆன்லைனில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையம் சார்பாக ஆன்லைனில் மாதிரி ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் சாய்பாலா குறைவான மதிப்பெண் பெற்றார்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே சாய்பாலா மனமுடைந்த நிலையிலேயே இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அவரது பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே வீட்டுக்கு வந்த வேல்முருகன் தனது மகள் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சாய்பாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad