Type Here to Get Search Results !

பொள்ளாச்சியில், ரேஷன் கடைகளில் சப்-கலெக்டர் ஆய்வு; அரசின் விதிமுறைகளை மீறிய 5 கடைகளுக்கு சீல் வைப்பு: கலெக்டர்

பொள்ளாச்சியில், ரேஷன் கடைகளில் சப்-கலெக்டர் ஆய்வு
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்க உத்தரவிட்டது.

மேலும் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிப்பதில்லை என்றும், பொருட்கள் முறையாக வினியோகம் செய்யவில்லை என்றும் புகார் எழுந்தது.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் உள்ள ரேஷன் கடைகளில் சப்-கலெக்டர் வைத்திநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம் மற்றும் எடை குறித்து ஆய்வு செய்தார். மேலும் ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின்போது குடிமைப்பொருள் அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து குடிமைப் பொருள் அதிகாரிகள் கூறியதாவது:-

ஊரடங்கு காரணமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்தும், எடை குறித்தும் சப்-கலெக்டர் ஆய்வு செய்தார். ரேஷன் கடைக்கு முகக்கவசம் இல்லாமல் செல்லும் நபர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கூட்டம், கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடை ஊழியர்களும் முகக்கவசம், கையுறை அணிந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அரசின் விதிமுறைகளை மீறிய 5 கடைகளுக்கு சீல் வைப்பு: கலெக்டர் கதிரவன் அதிரடி நடவடிக்கை
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சி.கதிரவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் ஒரு நகைக்கடை, ஒரு பேக்கரி மற்றும் பெருந்துறை ரோட்டில் 2 துணிக்கடைகள், பார்க் ரோட்டில் ஒரு டீக்கடை ஆகியவை அரசின் விதிமுறைகளை மீறி இயங்கி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு சீல் வைக்க கலெக்டர் சி.கதிரவன் அதிரடி உத்தரவிட்டார். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட 5 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக கலெக்டர் சி.கதிவரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஈரோடு மாநகர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளும் விடுவிக்கப்பட்டு உள்ளன. கடந்த 31 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த 60 நாட்களாக கடைகள் அடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் கடைகளை திறக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த நிபந்தனைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா?, சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒருவர் இறந்துவிட்டார். மீதமுள்ள 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 80 சதவீத தொழிற்சாலைகள் இயங்க தொடங்கி உள்ளன. இதில் 60 சதவீதம் பேர் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டால் தொழிற்சாலைகளை இயக்குவதில் சிக்கல் ஏற்படும். மேலும் இங்குள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். அதனால் வெளிமாநில தொழிலாளர்களுடன் தொழிற்சாலை உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 9 ஆயிரம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டி விண்ணப்பித்து உள்ளனர். அவர்களது பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவர்கள் சிறப்பு ரெயில் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இன்னும் ஒருவாரம் ஆகும்.

வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வருபவர்கள் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தற்போது 1,067 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

வெளிமாநிலத்தை சேர்ந்த 474 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இவர்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் 452 போருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 22 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. ஜவுளி சந்தை, மால்கள், ஸ்பா, தியேட்டர்கள், கிளப், நீச்சல்குளம் செயல்படுவது குறித்து அரசுதான் முடிவு செய்யும். ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் இதர வகை கடைகள் முறையாக அனுமதி பெறாமலும், அரசின் விதிமுறைகளை மீறி திறந்திருப்பதும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

இந்த ஆய்வின்போது அவருடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணிக்கடைகள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - கலெக்டர் அறிக்கை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் அமைந்துள்ள துணிக்கடைகள் நிபந்தனைகளை கடைபிடித்து விற்பனையை தொடங்கி கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. துணிக்கடைகளில் பணியாளர்கள் அனைவரும் முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும், முக கவசம், கையுறையுடன் வருவோரை மட்டுமே கடை ஊழியர்கள் கடைக்குள் அனுமதிக்க வேண்டும், கடை நிர்வாகத்தினர் 33 சதவீத ஊழியர்களை கொண்டு மட்டுமே கடையை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் கடைக்குள் சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கடைக்குள் வரும்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின் அனுமதிக்க வேண்டும்.

குளிர்சாதன வசதி இருந்தால், அதனை நிறுத்திவிட்டு மின்விசிறியுடன் மட்டுமே செயல்பட வேண்டும். கடைக்கு வரும் நுகர்வோர்கள் விவரம் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்களை கடை உரிமையாளர்கள் பெற்று பதிவு செய்து கொள்ள வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமழிசை காய்கறி சந்தையில் முக கவசம் அணியாத வியாபாரிகளுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் - மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு காய்கறி சந்தையானது திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை துணைக்கோள் நகரப்பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, சரக்கு வாகனங்கள் வந்து செல்ல சாலை வசதிகள், குடிநீர் வசதி, கழிவறைகள் வசதி, வாகனம் நிறுத்துமிடம், சூரிய சக்தியால் இயங்கும் மின் விளக்குகள், உயர் கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது.

இந்நிலையில், முதல்-அமைச் சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கடந்த 9-ந் தேதியன்று திருமழிசைக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பி.நாகராஜ் ஆகியோர் திருமழிசைக்கு சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

உறுதி செய்தனர்

இந்த ஆய்வின்போது, சந்தைக்கு வரும் அனைத்து வாகனங்களும் முழுமையாக கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவதையும், வியாபாரிகள் முக கவசம் அணிந்து பணிபுரிவதையும் உறுதி செய்தனர்.

மேலும் நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் ஆகியவை வியாபாரிகளுக்கு வழங்கப்படுகிறதா? சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா? கழிவறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகின்றதா? எனவும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து, சந்தைக்கு வரும் வாகனங்கள் பொருட்களை இறக்கியதும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த தவறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். சமூக இடைவெளியை முழுமையாக கடைப்பிடிக்காத உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் அபராதங்கள் விதிக்கப்படும்.

அபராதம் விதிக்க முடிவு

இதுவரை திருமழிசை காய்கறி சந்தையில் முக கவசம் அணியாமல் திரிந்த 62 நபர்களிடம் இதுவரை ரூ.6,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் முக கவசம் அணியாமல் சந்தையில் சுற்றித்திரியும் வியாபாரிகளிடம் தலா ரூ.200 வீதம் அபராதம் வசூலிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் எச்சரிக்கை தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, காஞ்சீபுரம் மண்டல டி.ஐ.ஜி.தேன்மொழி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், சிறப்பு வருவாய் அலுவலர்கள் தர்பகராஜ், கோவிந்தராஜ், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. வித்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad