Type Here to Get Search Results !

பல பெண்களை ஏமாற்றிய வாலிபரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டில் இன்று மனு தாக்கல்; திருப்பூரில் அடுத்தடுத்து 4 கடைகளில் தீ - பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
பல பெண்களை ஏமாற்றிய வாலிபரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டில் இன்று மனு தாக்கல்
பல பெண்களை ஏமாற்றிய வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் இன்று (சனிக்கிழமை) மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

பாலியல் தொல்லை

நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26). பட்டதாரியான இவர் சென்னை, நாகர்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களுடன் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளம் மூலமாக பழக்கத்தை ஏற்படுத்தி நெருங்கியதாக தெரிகிறது.

மேலும் அவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து, அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பல பெண்களிடம் பணம் பறித்துள்ளார். மேலும் அந்த பெண்களுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

குண்டர் சட்டத்தில் கைது

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்தனர். பின்னர் அவரை நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவரும், காசி தன்னிடம் நெருங்கி பழகி ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கந்துவட்டி கேட்டு மிரட்டி மோசடி செய்ததாகவும் அவர் மீது வழக்கு போடப்பட்டது. இதற்கிடையே காசி மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

இன்று மனு தாக்கல்

இந்த நிலையில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக நாகர்கோவில் உதவி சூப்பிரண்டு ஜவகர் கூறியதாவது:-

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காசி மீது இதுவரை வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள காசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் பல திடுக்கிடும் தகவலும், ஆதாரமும் வெளியே வர வாய்ப்பு உள்ளது. எனவே, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக இன்று (சனிக்கிழமை) நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். கோர்ட்டு அனுமதித்தால் காசியை இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வோம். அதில் கிடைக்கும் தகவல்கள், ஆதாரங்களை கொண்டு வெளி மாவட்டங்களில் விசாரணை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.

திருப்பூரில் அடுத்தடுத்து 4 கடைகளில் தீ - பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
திருப்பூர் பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூரில் சிவாச்சலம் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் உள்ள 4 கடைகளை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். அங்குள்ள 2 கடைகளில் அமிர்தலிங்கம் என்பவர் பழைய பேப்பர், இரும்பு மற்றும் வேஸ்ட் குடோனும், சிவராஜ் என்பவர் கார் ஒர்க்‌ஷாப்பும், கந்தசாமி என்பவர் வெல்டிங் ஒர்க்‌ஷாப்பும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமிர்தலிங்கம் என்பவருக்கு சொந்தமான வேஸ்ட் குடோனில் இருந்து திடீரென கரும்புகை எழுந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பிடித்து அருகில் உள்ள 3 கடைகளுக்கும் பற்றியது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வணிக வளாகத்திற்குள் செல்ல சரியான வழி இல்லாததால் தீயை கட்டுக்குள் கொண்டு வர சிரமம் ஏற்பட்டது. 2 மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 4 கடைகளிலும் இருந்த பல லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகியது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் தற்கொலை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை
கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் அஞ்சுகம்நகரை சேர்ந்த தம்பதியர் கண்ணப்பசெட்டியார்-பத்மாவதி. இவர்களின் மகன் சங்கர் (வயது 45), வியாபாரி. இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.

அதேபகுதியில் உள்ள இ.பி.காலனியைச் சேர்ந்த தம்பதியர் சாந்தகுமார்-சம்பூர்ணம். இவர்களின் மகள் மகாலட்சுமி (20). இவரும், சங்கரும் 2 ஆண்டுகளாக காதலித்தனர். ஊரடங்கையொட்டி இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் எளிய முறையில் திருமணம் நடந்தது.

நேற்று மதியம் 2.30 மணியளவில் கணவரின் வீட்டில் இருந்த மகாலட்சுமி, குளிப்பதற்காக துணியை எடுத்து வருவதாகக் கூறி விட்டு, ஒரு அறைக்குள் சென்று கதவை மூடி உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். பின்னர் வெகுநேரம் ஆகியும் அவர் கதவைத் திறக்கவில்லை.

தற்கொலை

சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்காததால் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மகாலட்சுமி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை தூக்கில் இருந்து மீட்டு மோட்டார்சைக்கிளில் வடுகந்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மகாலட்சுமி இறந்து விட்டதாகக் கூறினர்.

இதுகுறித்து மகாலட்சுமியின் தங்கை விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மகாலட்சுமியின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால், வருவாய் கோட்டாட்சியரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad