Type Here to Get Search Results !

மதுரை அருகே லாரி கிளனர் வெட்டிக்கொலை; கள்ளக்காதல் ஜோடி கொலை வழக்கில் கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

மதுரை அருகே லாரி கிளனர் வெட்டிக்கொலை மது போதையில் நண்பர் வெறிச்செயல்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பழைய சுக்காம்பட்டியை சேர்ந்தவர் பிரபு. அதே பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 46). லாரி கிளனர். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு பழையசுக்காம்பட்டி அருகே உள்ள மாத்திக்கண்மாய் கரையோரம் அமர்ந்து மதுகுடித்ததாக கூறப்படுகிறது.

மதுபோதையில் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிதுநேரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த பிரபு அரிவாளால் சிவக்குமாரை சரமாரியாக வெட்டியதாக தெரியவருகிறது.

கழுத்து உள்பட பல இடங்களில் சிவக்குமாருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைதொடர்ந்து பிரபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சிவக்குமாரின் உடலை பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர் .

கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நண்பர்கள் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டபோது பிரபு கழுத்தில் அணிந்து இருந்த தங்கச்சங்கிலியை சிவக்குமார் பறித்ததாக தெரிகிறது. இதனால் போதையில் இருந்த பிரபு ஆத்திரத்தில் அரிவாளால் சிவக்குமாரை வெட்டிக் கொன்றதாக தெரியவந்தது. போலீசார் பிரபுவை கைது செய்தனர்.

கடந்த 8 நாட்களில் மேலூர் பகுதியில் 4 கொலைகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்காதல் ஜோடி கொலை வழக்கில் கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது
மேலூர் அருகே கடந்த 17-ம் தேதி காலையில் திருவாதவூர் பெரிய கண்மாய் மடை பகுதியில் ஆண் மற்றும் பெண் ஒருவர் கழுத்தில் வெட்டு காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக மேலூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் மேலூர் தெற்குதெருவை சேர்ந்த விமல் மனைவி ஆயம்மாள், அதே ஊரை சேர்ந்த அன்புநாதன் என போலீசாருக்கு தெரியவந்தது.

மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், சண்முகபாண்டியன் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து அன்புநாதனின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அவருடன் கடைசியாக பேசியவர்களையும், அவ்வாறு பேசியவர்கள் பிறருடன் தொடர்பு கொண்ட விவரங்களையும் சேகரித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கொலையான ஆயம்மாளின் அண்ணன் தமிழ்மாறன்(வயது 30), தெற்குதெரு கிராமத்தை சேர்ந்த சதீஷ்(25), ராஜா(30) மற்றும் ஆயம்மாளின் கணவன் விமல் ஆகிய 4 பேர் இந்த இரட்டை கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஆயம்மாளின் அண்ணன் தமிழ்மாறன், சதீஷ், ராஜா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருமணம் ஆகி 3 குழந்தைகளுக்கு தாயான ஆயம்மாள் அவரது கணவர் விமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஆயம்மாளின் அண்ணன் தமிழ்மாறன், மேலூர் யூனியன் தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். அவர் நடத்திய டீக்கடையில் அன்புநாதன் வேலைபார்த்து வந்துள்ளார்.

தெற்குதெரு அருகே உள்ள டி.வெள்ளாலபட்டியில் இருக்கும் அரசு ஆரம்ப பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் சார்பில் தற்காலிக ஆசிரியையாக ஆயம்மாள் வேலைபார்த்து வந்துள்ளார். அந்த பள்ளிக்கு வேலைக்கு செல்ல அன்புநாதன் மோட்டார் சைக்கிளில் ஆயம்மாளை அழைத்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அப்போது அன்புநாதனுக்கும், ஆயம்மாளுக்கும் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை கண்டித்தும் கள்ளக்காதல் தொடரவே அவர்கள் 2 பேரையும் தமிழ்மாறன் உள்பட 3 பேரும் சேர்ந்து தீர்த்து கட்டியது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவர் விமல் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இருதரப்பினரிடையே மோதல்: மதுரையில் முன்னாள் எம்.எல்.ஏ. கைது
மதுரை கருவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சரத் (வயது 30). இவர் சம்பவத்தன்று கருவனூர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் இவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கைகலப்பு ஏற்பட்டு, அடிதடியாக மாறியது. இரு கோஷ்டிகளும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

அப்போது கற்களாலும், கம்பியாலும் மாறி மாறி தாக்கினர். இதில் அங்கிருந்த வாகனங்களும், சில வீடுகளும் சேதமடைந்தன. இதுபற்றி தகவல் அறிந்ததும் சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரு தரப்பினரையும் விசாரித்த போலீசார், காயம்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த மோதல் குறித்து கருவனூரை சேர்ந்த புவியரசன் அளித்த புகாரின்பேரில் போலீசார் 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இதில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருவனூரை சேர்ந்த பொன்னம்பலம் (72), அவரது மகன் திருச்சிற்றம்பலம், சண்முகசுந்தரம் (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பொன்னம்பலம் மகன் திருச்சிற்றம்பலம் கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு தரப்பைச் சேர்ந்த புவியரசன் (23), பாண்டி (19), ராஜதுரை (25) உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இருதரப்பு மோதல் தொடர்பாக மொத்தம் 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad