Type Here to Get Search Results !

தமிழ்நாட்டில் அதிக ஆக்டிவ் கொரோனா பாதிப்புகளைக் கொண்ட ஐந்து மாவட்டங்கள்; கொரோனா பாதிப்புக்கு ஆர்செனிகம் ஆல்பம் - 30 மருந்தை வழங்க நடவடிக்கை -உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு

தமிழ்நாட்டில் அதிக ஆக்டிவ் கொரோனா பாதிப்புகளைக் கொண்ட ஐந்து மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் 100-க்கு அதிகமான ஆக்டிவ் பாதிப்பு கொண்ட ஐந்து மாவட்டங்கள்- சென்னை , செங்கல்பட்டு , திருவள்ளூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகும்.

கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 28 மாவட்டங்களில் 100-க்கும் குறைவான கொரோனா நோயாளிகளே மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 5691 பேர், செங்கல்பட்டில் 365, திருவள்ளூரில் 380, திருநெல்வேலியில் 155 பேர் , திருவண்ணாமலையில் 114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மே 1-ஆம் தேதி சென்னையை தவிர மற்ற நான்கு மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. செங்கல்பட்டில் 38 பேர், திருநெல்வேலியில் 7பேர், திருவண்ணாமலையில் 5 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். சென்னையில் அப்போது 1082 கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்தனர்.

கோயம்பேடு தொற்று பரவல் காரணமாக செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது. மகாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் அதிகமாக இருப்பதால் நெல்லை மாவட்டத்தில் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளன.

ஆரம்பத்தில் தொற்று இல்லாத மாவட்டங்களாக இருந்த தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மீண்டும் அதே நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. தருமபுரியில் ஒருவர், கிருஷ்ணகிரியில் இருவர், புதுக்கோட்டையில் 5 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு ஆர்செனிகம் ஆல்பம் - 30 மருந்தை வழங்க நடவடிக்கை -உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு
கொரோனா தொற்றுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்செனிகம் ஆல்பம் – 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்துவது தொடர்பான அரசாணை அமல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், சிகிச்சை வழங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம் – 30 என்ற ஹோமியோபதி மருந்தை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் எனவும், ஒரு மாதத்திற்கு பின் இதே முறையில் மருந்து சாப்பிட வேண்டும் எனவும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரையை ஏற்று தமிழக அரசு, இந்த மருந்தை பயன்படுத்தும்படி, கடந்த ஏப்ரல் 23 ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. ஆர்செனிகம் ஆல்பம் – 30 என்ற இந்த ஹோமியோபதி மருந்தை அனைத்து மக்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், தொற்று பாதித்தவர்களுக்கும் இலவசமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, சென்னை பாடியைச் சேர்ந்த ஜேசய்யா அன்டோ பூவேந்தன் என்ற ஹோமியோபதி மருத்துவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அவர் தன் மனுவில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, குஜராத் மாநிலங்களில் இந்த மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் மருந்துக்கு ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பித்தும் அது அமல்படுத்தப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆர்செனிகம் ஆல்பம் – 30 மருந்துக்கு ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை ஏற்று, அதை பயன்படுத்த தமிழக அரசும் அரசாணை பிறப்பித்து, அமல்படுத்தி வருவதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும் இந்த மருந்து கிடைப்பதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad