Type Here to Get Search Results !

1957-ம் ஆண்டு உலகை கதிகலங்க செய்த ‘ஆசிய காய்ச்சல்’ நோய்; மதுபிரியர்கள் குடையுடன் வர அறிவுறுத்த வேண்டும் - டாஸ்மாக் ஊழியர்களுக்கு போலீசார் வேண்டுகோள்; பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் தஞ்சம்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
1957-ம் ஆண்டு உலகை கதிகலங்க செய்த ‘ஆசிய காய்ச்சல்’ நோய் - போலீசாரின் சேவையை பாராட்டி உயர் அதிகாரி
உலக அளவில் பெரும் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது. இந்த கொரோனா தொற்று நோயை போல மனித வரலாற்றில் பலவித வைரஸ் நோய்கள் மக்களை பலிவாங்கி உள்ளன. ஸ்பானீஷ் காய்ச்சல், ஹாங்காங் காய்ச்சல், பன்றி காய்ச்சல், பிளேக், காலரா, அம்மை என பல்வேறு வகையான நோய்கள் மக்களை கடுமையாக பாதித்துள்ளன. அந்த வகையில் கடந்த 1957-ம் ஆண்டு பரவிய ‘ஆசிய காய்ச்சல்’ நோயும் உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹாங்காங்கில் தொடங்கிய இந்த காய்ச்சல் சீனாவில் பரவி, அமெரிக்காவிலும், இந்தியாவிலும் தலை தூக்கியது. அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் பலியானதாக சோக வரலாற்று தகவல்கள் உள்ளன. இந்த ஆசிய காய்ச்சல் மீண்டும் 2-வது முறையாக 1958-ம் ஆண்டும் பரவி பல ஆயிரம் உயிர்களை பலிவாங்கியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இந்த ஆசிய காய்ச்சல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.

கடந்த 1957-ம் ஆண்டு வேகமாக பரவி பலரை பலி வாங்கிய ஆசிய காய்ச்சலில் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டு இருந்தனர். குறிப்பாக கமுதி சிறப்பு காவல்படையில் இருந்த 35 பேர், மக்கள் பணியாற்றியபோது இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் போலீசாரிடையே அச்சம் ஏற்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் கமுதி சிறப்பு காவல்படைக்கு கடந்த 1957-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி ஆய்வுக்கு வந்திருந்த தென்மண்டல டி.ஐ.ஜி. எம்.ஜே.ஹோல்ம்ஸ் ஒரு குறிப்பை எழுதி இருக்கிறார். அதில், “ஆசிய காய்ச்சல் பரவிவரும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இங்கு பணியாற்றிய 35 ஆண் காவலர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு விடுமுறையில் உள்ள நிலையிலும் காவலர்கள் கடமை தவறாது மக்களை காக்கும் பணியோடு, அதிகாலை கூட்டு கவாத்து அணிவகுப்பு மேற்கொண்டுள்ளர்கள். காவலர்களின் கடமை உணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இது உள்ளது” என்று வாழ்த்தி தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தற்போது வேகமாக பரவிவரும் கொரோனா வைரசால் காவலர்கள் பாதிக்கப்பட்டுவரும் நிலையிலும் நோய் தடுப்பு, மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழக போலீசாரின் பணி பாராட்டிற்குரியது.

இதற்காக தமிழக டி.ஜி.பி.திரிபாதி, “தமிழக மக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி மக்களின் உயிரை காப்பதில் தமிழக காவல்துறையினர் மீண்டும் தங்களது ஒருமித்த எழுச்சியை வெளிப்படுத்தி, முதன்மையான வெற்றியாளர்களாக திகழ்கிறீர்கள்” என்று அனைத்து போலீசாரையும் பாராட்டி வாழ்த்து கடிதம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுபிரியர்கள் குடையுடன் வர அறிவுறுத்த வேண்டும் - டாஸ்மாக் ஊழியர்களுக்கு போலீசார் வேண்டுகோள்

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) மது கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் ஈரோடு மாவட்டத்திலும் திறக்கப்படுகிறது. பவானி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று முதல் மதுக்கடைகள் செயல்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர்களை அழைத்து நேற்று கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட துணைபோலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

குடையுடன் வர வேண்டும்

மதுபிரியர்கள் முண்டியடித்துக்கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுபானம் வாங்க முற்படுவர். எனவே டாஸ்மாக் ஊழியர்கள் மதுபிரியர்கள் கைகளில் குடையோடு மது கடைக்கு வர அறிவுறுத்த வேண்டும். அதிக அளவில் கூட்டம் இருக்கும் என்பதால் மது பிரியர்கள் கட்டாயம் குடை கொண்டு வருவது அவசியம். மதுபாட்டில் வாங்க வரும் பொழுது சமூக இடைவெளி விட்டு நிற்கும் வகையில் 5 அடிக்கு ஒருவரை நிற்க வைக்க வேண்டும். ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவது இன்றியமையாதது. அதிகமான நபர் மதுக்கடையில் கூடக்கூடாது. தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக 5 பாட்டில்கள் வரை மட்டுமே வழங்கிட வேண்டும். பைகளை கொண்டு வரக்கூடாது. மது கடையில் பணிபுரியும் ஊழியர்கள் அணைவரும் கைகளை கழுவ கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் முகக் கவசம், கையுறை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

வயது அடிப்படையில்...

மேலும் 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் 40 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மதியம் 1 மணி முதல் 3 மணி வரையும் 40 வயதுக்கு குறைவாகவும் 18 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கும் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் மது வழங்கப்படும்.

பவானியில் உள்ள 2 மதுக்கடைகள் மற்றும் ஆப்பக்கூடல் மற்றும் அத்தாணியில் உள்ள ஒரு மதுக்கடையை திறக்க அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் கூறினார்.

கடலூர் தற்காலிக காவலர் பள்ளியில் 134 பெண் போலீசாருக்கு பயிற்சி
கடலூர் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 134 பெண் போலீசாருக்கு அடிப்படை பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் தொடங்கி வைத்து பேசுகையில், காவலர் குடும்பத்தில் புதிதாக சேர்ந்துள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாட்டுக்கு, நாடு காவல்துறையில் சீருடை மற்றும் பயிற்சிகள் மாறுபட்டு இருந்தாலும், அனைத்து நாட்டு காவல்துறையிலும் மிக முக்கியமாக கடைபிடிப்பது ஒழுக்கம் மட்டுமே.

ஆகவே பயிற்சி காவலர்கள் கட்டாயம் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். பயிற்சி பெறும் பெண் போலீசார் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும், கையுறை அணிந்தும் பயிற்சிகள் மேற்கொள்ள உள்ளனர். இதில் காவலர் பயிற்சி பள்ளியின் துணை முதல்வர் சுந்தரம், முதன்மை சட்ட போதகர் ஈஸ்வரி, முதன்மை கவாத்து போதகர் விஜயகுமார், உதவி சட்ட போதகர்கள், உதவி கவாத்து போதகர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்து வருகின்றனர்.

பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் தஞ்சம்
பாதுகாப்பு கேட்டு, காதல் கணவருடன் போலீஸ் நிலையத்தில் பட்டதாரி பெண் தஞ்சமடைந்தார்.

காதல் திருமணம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ரெங்காச்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இன்பரசு (வயது 23). இவர் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து கொண்டிருந்தார். அப்போது, அதே கல்லூரியில் படித்த தாந்தோன்றிமலை காமராஜர் தெரு பகுதியை சேர்ந்த பவித்ரா (22) என்பவருடன், இன்பரசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில், கல்லூரி படிப்பு முடிந்த பின்னர் தற்போது இன்பரசு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்கள் காதலுக்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அய்யர்மலையில் உள்ள கோவிலில் இன்பரசு மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

இதையடுத்து இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், பவித்ரா தனது காதல் கணவரான இன்பரசுவுடன் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் 2 தரப்பினரிடமும் எழுதி வாங்கி கொண்டு, பவித்ராவை, இன்பரசுவுடன் அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பட்டதாரி பெண் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad