Type Here to Get Search Results !

தமிழகத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று; பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர் உயிரிழப்பு; தமிழகத்தில் பேருந்து போக்குவரத்தை மேலும் ஒருமாதம் தடை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

தமிழகத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று: சென்னையில் புதிதாக 138 பேருக்கு உறுதி - புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஒரே நேரத்தில் தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழகத்தில் கொரோனா நோய்க்கிருமி பரவுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை.

நோய்த்தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பச்சிளம் குழந்தைகளும், சிறுவர்களும் இந்த நோய் தொற்றுக்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கர்ப்பிணிகளும், முதியவர்களும் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றால் தமிழகத்தில் சமூக பரவல் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களில் 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். அதாவது சென்னையில் நேற்று 2 மாத பெண் குழந்தை உள்பட 138 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 97 ஆண்கள், 64 பெண்கள் என 161 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்து இருக்கிறது.

தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 161 பேரில், 2 மாத குழந்தை உள்ளிட்ட 11 குழந்தைகள் உள்பட 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

செங்கல்பட்டு, மதுரையில் தலா 5 பேருக்கும், காஞ்சீபுரம், ராமநாதபுரத்தில் தலா 3 பேருக்கும், பெரம்பலூரில் 2 பேருக்கும், அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், சேலம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை, கோவை, காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிகம் தாக்கி உள்ளதால் அவை பாதிப்பு அதிகம் உள்ள ‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

மேலும் நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்கள் மிதமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா நோய் தொற்று இல்லாமல் பச்சை மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 11 குழந்தைகள், செங்கல்பட்டில் 2 குழந்தைகள் என 12 வயதுக்கு உட்பட்ட 13 குழந்தைகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

48 பேர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,258 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 1,035 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே கொரோனா பரவுவதை தடுக்க உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், மருத்துவ நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் பிரப்தீப் கவுர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இதனால் அதிக தொற்றும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சமநிலையில் இல்லை. சில மாவட்டங்களில் அதிகரித்து உள்ளது. பல மாவட்டங்களில் குறைந்து இருக்கிறது. இந்த அளவீடுகளை வைத்து பார்த்தால், மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஒரே நேரத்தில் தளர்த்த முடியாது. முழுவதுமாக ஊரடங்கை நீக்கும் சூழ்நிலை இப்போது எழவில்லை.

சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தலாம் அல்லது தொடரலாம். இதை அரசுதான் முடிவு செய்யும். ஆனால் ஊரடங்கை தளத்தினாலும் முழுமையாக தளர்த்த வாய்ப்பில்லை. படிப்படியாகத்தான் அதை தளர்த்த முடியும். அதோடு, சில தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டாக வேண்டும்.

பொது இடங்களுக்கு வரும்போது அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும், முககவசத்தை அணிவதும் மிகவும் அவசியம். கைகளை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற நடைமுறையையும் இனி தொடர்ந்தாக வேண்டும். மொத்தத்தில், நமது வாழ்க்கை முறையை இனி மாற்றியாக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் சுப்பிரமணியம் கூறுகையில், கொரோனா வந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இனி பழைய வாழ்க்கை முறையை எதிர்பார்ப்பது முடியாத காரியம் என்றும், அப்படி இருந்தால் அதன் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர் உயிரிழப்பு
மகாராஷ்டிராவில் முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். 53 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக மும்பை லீலாவதி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்த கரூரில் மீண்டும் ஒருவருக்கு தொற்று உறுதி
கரூரில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கரூர் இருந்த நிலையில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில் ஆம்பூலன்ஸ் டிரைவராக பணியாற்றி கரூரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் அரசு மருத்துவமனையில் கொரோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 42 பேரும் குணமடைந்து திரும்பினர்.

தொற்றில்லா மாவட்டமாக மாறியது தூத்துக்குடி: சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ்
தூத்துக்குடியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் 26 பேர் குணமடைந்த நிலையில் இறுதியாக சிகிச்சை பெற்ற நபரும் வீடு திரும்பினார். வைரசால் பாதிக்கப்பட்ட 27 பேரும் குணமடைந்ததால் தொற்றில்லா மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் மாறியது. தூத்துக்குடியில் ஒரு பெண் பலியான நிலையில் 2,364 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா பரவ அதிக வாய்ப்பு; தமிழகத்தில் பேருந்து போக்குவரத்தை மேலும் ஒருமாதம் தடை செய்க
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர  மற்ற அனைத்து கடைகளையும் மூடப்பட்டன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் 19 மருத்துவ நிபுணர்கள் கொண்ட சிறப்பு  குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கொரோனாவை கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கி வருகின்றனர். அவர்களின்  ஆலோசனையின் பேரில், தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் படிப்படியாக தளர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த நிலையில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 19 மருத்துவ நிபுணர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை 3 மணிக்கு நடந்தது. தமிழகம் முழுவதும் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது மாநகர் பகுதிகளில்  மட்டும் ஊரடங்கு நீட்டிக்கலாமா என்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடியுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, கிராமம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் அந்த பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தலாமா  என்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்பேரில் தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த மருத்துவ நிபுணர்கள் முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க பேருந்து போக்குவரத்தை தடை செய்ய வல்லுனர் குழு வலியுறுத்தியுள்ளது. தற்போது, தமிழகத்தில் தடையில் உள்ள பேருந்து போக்குவரத்தை மேலும் ஒரு மாதத்திற்கு தடை செய்ய பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது. இதனைபோல், சினிமா தியேட்டர், வழிபாட்டுதலங்களை இம்மாத இறுதி வரை திறக்க வேண்டாம் என்றும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு சாலை மார்க்கமாக  அழைத்து செல்ல மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதனை தொடர்பாக தமிழக அரசு பேருந்து மூலம் தொழிலாளிகளை அழைத்து செல்ல திட்டமிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வல்லுனர் குழு போக்குவரத்தை மேலும்  ஒருமாதத்திற்கு தடை செய்ய பரிந்துரை செய்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், நாளை மாலை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில், நிபுணர்கள் குழு வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டு  தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தப்படுவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad