Type Here to Get Search Results !

ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரியும் வாலிபர்கள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

போலீசார் சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்
மதுரை மாவட்டத்தில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட போலீசார் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலத்தில் இருந்து மதுரைக்கு வந்து வேலை செய்த ஏராளமான தொழிலாளர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீசார் மதுரை ஒத்தக்கடை, சிலைமான், சக்கிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க முடிவு செய்தனர். அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தலின் பேரில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் இந்த பகுதிகளில் உள்ள வடமாநில தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு அரிசி, பருப்பு, மைதா, 15 விதமான காய்கறி உள்ளிட்ட பல்வேறு விதமான நிவாரண பொருட்களை வழங்கினர்.

இதுபோல் ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கும் நிவாரண பொருட்களை வழங்கினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தலின் பேரில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு கடந்த சில தினங்களாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சாலையோரங்களில் தங்கி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை தயார் செய்து விற்பனை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் வேலை இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 130-க்கும் மேற்பட்டோருக்கு தினமும் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபோல் மதுரை கடச்சனேந்தல், சத்திரப்பட்டி பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கிருமிநாசினி, கை சுத்திகரிப்பான், முக கவசம் உள்ளிட்டவைகளை கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா வழங்கினார். மேலும் சமூக இடைவெளி, தன்சுத்தம் குறித்து காப்பகத்தில் தங்கியிருந்த குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டியராஜா, ஊமச்சிகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லு, பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரியும் வாலிபர்கள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தடையை மீறி மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரியும் வாலிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருவதால் அங்கு மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஆனால் தமிழகத்தில் தடை உத்தரவை மீறுவோரை போலீசார் எச்சரித்து மட்டும் அனுப்பி வைப்பதால் பொதுமக்கள் அலட்சியமாக சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தினந்தோறும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அந்த நேரத்தில் மட்டும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு விரைவில் வீடுகளுக்கு சென்றுவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாக காரைக்குடி பகுதியில் இளைஞர்கள் சிலர் எவ்வித காரணமும் இல்லாமல் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்து வருகின்றனர். இதில் பலரும் முக கவசத்தை அணியாமல் செல்கின்றனர். போலீசாரும் அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து மட்டுமே அனுப்பி வைக்கின்றனர். சில இடங்களில் போலீசார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தாலும் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிவது வாடிக்கையாகி வருகிறது. எனவே காரணமின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரியும் வாலிபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் கொரோனா நோய் பரவலை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:- பொதுமக்கள் நலன் கருதி மத்திய-மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதை இளைஞர்கள், பொதுமக்கள் புரிந்துகொண்டு போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு பொறுப்பில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிவதால் கொரோனா வைரஸ் பிறருக்கும் பரவி பாதிப்பு ஏற்படும் என்று அவர்களுக்கு தெரிந்தும் கூட அலட்சிய போக்கை கடைபிடித்து வருகின்றனர். இவ்வாறு கூறினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad