Type Here to Get Search Results !

கொரோனா குறிப்பிட்ட ரத்த பிரிவு கொண்டவர்களைத்தான் தாக்குமா? - மதுரை மருத்துவ நிபுணர் விளக்கம்

கொரோனா குறிப்பிட்ட ரத்த பிரிவு கொண்டவர்களைத்தான் தாக்குமா? - மதுரை மருத்துவ நிபுணர் விளக்கம்
கொரோனா குறிப்பிட்ட ரத்த பிரிவை கொண்டவர்களை மட்டும்தான் தாக்குமா? என்பது குறித்து மதுரை மருத்துவ நிபுணர் விளக்கம் அளித்தார்.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 24 பேர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் மதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறிப்பிட்ட சில ரத்த வகையை கொண்டவர்களையே கொரோனா தாக்குவதாக தகவல்கள், வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கொரோனா தடுப்பு பணிகளுக்கான மாவட்ட அலுவலர் டாக்டர் மருதுபாண்டி கூறியதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கும், இந்த நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்டவர்களுக்கும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான சிகிச்சைக்கு அதிக அளவு ரத்தம் தேவைப்பட வாய்ப்பில்லை.

ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை, நோய் பாதிப்பை பொறுத்து ரத்தம் செலுத்த வேண்டியதிருக்கும். அப்படி ரத்தம் தேவைப்பட்டால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் ரத்த வங்கியின் மூலம் தேவையான அளவு ரத்தம் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுவிடும்.

கொரோனா என்பது ஒரு பொதுவான நோய். அந்த நோய் எல்லா வகை ரத்தத்தை கொண்டவர்களையும் தாக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பிட்ட ரத்த வகை கொண்டவர்களை மட்டும் பாதிக்கும் என கூறுவது சாத்தியமில்லாத ஒன்று. அதற்கு அதிகாரபூர்வ தகவல்களும் இல்லை. மேலும் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி அதன் பின்னரே, எந்த ரத்த வகையை அதிகம் பாதிக்கிறது என்பதை உறுதிபடக் கூற முடியும். மதுரையை பொறுத்தமட்டில் கொரோனா அறிகுறிகளுடன் வரும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. முற்றிலும் குறைந்து விட்டது என்று கூற முடியாது. மக்கள் சமூக இடைவெளி, தன்சுத்தம் ஆகியவற்றை கடைபிடிப்பதன் மூலமே இந்த நோயில் இருந்து முழுவதுமாக தப்பிக்க முடியும். எனவே ஊரடங்கை மக்கள் அனைவரும் சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்கள் வரிசையாக செல்ல அனுமதி: காய்கறி மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் குறைந்தது
பொதுமக்கள் வரிசையாக செல்ல அனுமதிக்கப்படுவதால், காய்கறி மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் குறைந்தது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஈரோடு பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. அங்கு இரவு முழுவதும் மொத்த வியாபாரம் நடக்கிறது. காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை மட்டுமே பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள். சரியாக 9 மணிக்கு மார்க்கெட் மூடப்படுகிறது. இதனால் அதிகபட்சமாக 9.30 மணிக்குள் அனைவரும் வெளியேறி விடுகிறார்கள். காலை நேரத்தில் பொதுமக்கள் குவிந்ததால், மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்களால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பஸ் நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் மேட்டூர்ரோட்டின் நுழைவு வாயில் பகுதியிலேயே பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வரிசையாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கையின் எதிரொலியாக மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் குறைந்தது.

மேட்டூர்ரோட்டில் இருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நடந்து சென்றார்கள். அதன்பின்னர் தங்களுக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கிவிட்டு செல்கிறார்கள்.

இதேபோல் சத்திரோடு பகுதியில் உள்ள பஸ் நிலைய வளாகத்தில் பழக்கடைகள் போடப்படுகிறது. அங்கு முறையான வரிசை கடைபிடிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக செல்வதை நேற்றும் காணமுடிந்தது. கடைகளை சுற்றிலும் பொதுமக்கள் கூட்டமாக நின்றதால், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. எனவே பழ மார்க்கெட்டிலும் பொதுமக்கள் வரிசையாக செல்ல போலீசார் அனுமதிக்க வேண்டும்.

வங்கி, ஏ.டி.எம். மையத்துக்கு செல்லாமல் தபால் நிலையத்தில் பணம் எடுக்கலாம் - கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
ஊரடங்கால் மக்கள் வங்கி, ஏ.டி.எம். மையத்துக்கு செல்லாமல் தபால் நிலையத்தில் பணம் எடுக்கலாம் என்று அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- கொரோனாவைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால்நிலையங்களிலும் மக்கள் தங்களுடைய வங்கி கணக்குகள் மற்றும் இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை தபால்நிலைய வேலைநாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

அதாவது இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி தபால் நிலையங்களில் ஆதார் மூலமான பரிவர்த்தனைகள் வாயிலாக எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளரும் தங்களது ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து பணம்பெறுதல், பிறவங்கிகளுக்கு பணம் பரிமாற்றம் மற்றும் இருப்பு விசாரணை போன்ற அடிப்படை வங்கி சேவைகளை பெறலாம். இதன் மூலம் அனைவரும் எவ்வித தங்கு தடையின்றி வீட்டு வாசலிலேயே வங்கி சேவையினை பெறுவதற்கான திட்டத்தை அஞ்சல்துறை மக்களுக்காக அறிமுகப்படுத்தி நடைமுறையில் உள்ளது. இதன் மூலமாக மக்கள் யாரும் பணம் எடுக்க தொலைவில் உள்ள வங்கி கிளையையோ அல்லது ஏ.டி.எம். மையத்தையோ தேடாமல், தங்கள் ஊரில் உள்ள தபால்நிலையத்திலேயே தங்களுடைய வங்கிகணக்கில் இருந்து பணம் பெற்றுக்கொள்ளலாம்.

ஊரடங்கு காரணமாக மத்திய அரசு நிவாரணம் மற்றும் உதவித்தொகையினை நேரடி மானிய பரிமாற்றமாக 3 மாதங்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது.

இந்த உதவித்தொகையினை பெறும்பயனாளிகள், ஆதார் மூலமான பணபரிவர்த்தனைகள் வாயிலாக உயர்த்தப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஊதியம், சமூகபாதுகாப்பு நலத்திட்ட உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விவசாயிகளுக்கான மத்திய அரசின் நிவராணம் மற்றும் மீனவர்களுக்கான மீன் பிடி தடை கால உதவித் தொகை போன்ற மத்திய, மாநிலஅரசுகள் வழங்கும் உதவித்தொகைகளை ஆதார் எண்ணைக் கொண்டு எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளரும் தங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகத்திலேயே பெற முடியும்.

இந்த சேவைக்கு எவ்வித சேவை கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும் தபால் நிலையத்திற்கு நேரடியாக செல்லமுடியாதவர்கள் மேற்கண்ட வங்கி சேவையை தங்களது வீட்டு வாசலில் தபால்காரர்கள் மூலமும் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா - ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தப்படுத்த முடியவில்லை. நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா அறிகுறியுடன் வருபவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு கொரோனா வார்டில் வைத்து பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் முதன்முதலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். ஆனால், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் கொரோனா அறிகுறியுடன் தனிமை வார்டில் சிகிச்சை பெற்ற வந்த 5 வயது சிறுவன் உள்பட 4 பேர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. ரத்த மாதிரி பரிசோதனையில் அவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர்கள் தனிமை வார்டில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதுகாப்பு கவச உடை அணிந்த டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஏற்கனவே, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 36 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது
நெல்லை மாவட்டத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

ஒரு நாளைக்கு 100 அட்டைதாரர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2-ந் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு சில கடைகளில் சமூக இடைவெளி குறைந்தது.

கூட்டம் அலைமோதியது

இதனை அறிந்த முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீடு, வீடாக நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து கடந்த 5-ந் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று ரூ.1,000 நிவாரண உதவி வழங்கும் பணியை தொடங்கினர். அப்போது அவர்களுக்கு ஒரு டோக்கன் வழங்கப்பட்டது. அதில் எந்த தேதியில், எந்த நேரத்தில் நிவாரண பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்க வர வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் ரூ.1,000 வழங்கும் பணி நிறைவடைந்தது.

நேற்று முதல் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவைகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் சமூக விலகல் வட்டத்துக்குள் நின்று பொருட்களை வாங்கி சென்றனர். பல கடைகளில் கூட்டம் அலைமோதியது.

கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவன்- மாணவி
கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு மாணவனும், ஒருமாணவியும் விழிப்புணர்வு ஏற்படுதத்தி வருகிறார்கள்.

கொரோனாவில் இருந்து தப்பிக்க நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் ஊரடங்கு. இந்த ஊரடங்கு உத்தரவை கடை பிடித்தால் மட்டுமே கொரோனா வைரஸ் நம்மை நெருங்காது. ஆனால் ஊரடங்கு உத்தரவு ஆங்காங்கே மீறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவை மீறியும், சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும் இருந்தால் பாதிக்கப்படுவது நாம்தான். எனவே அனைவரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக சமூக ஆர்வலர்களும், பல்வேறு தரப்பினரும், குழந்தைகளும், கலைஞர்களும் விழிப்புணர்வை சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தி வருகிறார்கள்.இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார் என பலரும் தற்போது கடுமையாக பணியாற்றி வருகிறார்கள்.

மேலும், தற்போது உள்ள சூழலில் போலீசாரும் தொடர்ந்து தங்களது குடும்பத்தினரையும் பிரிந்து பல்வேறு பகுதிகளில் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் ஒருவரின் 11 வயது மகள் துவாரகா பொதுமக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுரை கூறும் வகையில் கைகளில் ஒரு விளம்பர பதாகையை ஏந்தியபடி ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளமான முகநூலில் அவரது தாயார் ஹேமா வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து ஹேமா கூறும்போது“எனது மகள் துவாரகா கூலிபாளையம் நால்ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். எனது கணவரும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் எனது கணவர் வீட்டில் இருக்கும் நேரம் குறைந்து விட்டது.

எனவே எனது மகள் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுரை கூறும் வகையில் ஒரு விளம்பர பதாகை தயார் செய்தார்.அந்த பதாகையில் எங்க அப்பா போலீஸ் ஆபிசர், நீங்க எல்லாம் வீட்டில் பத்திரமாக இருங்க!, அப்ப தான் எங்க அப்பா சீக்கிரமாக வீட்டுக்கு வருவாரு... எனவும், செல்போனில் எனது கணவரது புகைப்படத்தையும் கைகளில் ஏந்தியபடி உள்ளார். இந்த புகைப்படத்தை நான் எனது முகநூலில் வெளியிட்டேன். தற்போது எனது மகளின் அதீத பாசம் பலரையும் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக விளம்பர பதாகையுடன் கூடிய எனது மகளின் புகைப்படத்தை பலரும் முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்புகளில் ஷேர் செய்ய தொடங்கினார்கள். தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனது மகளின் இந்த செயல் எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இதே போல் கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் மாணவன், முகமது ஹர்சத், கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பது எப்படி என்று விளம்பர பதாகையை வைத்துள்ளான்.

குன்னத்தூர் பகுதி ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு பணி மும்முரம்
குன்னத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு பணி மும்முரமாக நடந்துவருகிறது.

குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிரவெளி, பாப்பா வலசு, தேவனம்பாளையம், மயிலம்பாளையம், நெசவாளர்காலனி, இந்திரா நகர், ரங்கநாயக்கனூர், குழியன்காடு, வடுகபாளையம், வடுகபாளையம் ஆதிதிராவிடர் காலனி ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் சிவன்மலை, துணை தலைவர் தங்கமுத்து, ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணி மற்றும் வார்டு உறுப்பினர்கள் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கணபதிபாளையம், மோளகுட்டை, அர்த்தநாரிபாளையம், கட்டையக்காடு, கொண்ணக்காடு காலனி, வேட்டகாடு ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் கவிதா துணை தலைவர் ராமசாமி, ஊராட்சி செயலர் ஆனந்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். நவக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நவக்காடு, சின்னகாட்டுவலவு, ஒருக்காம்பாளையம், கோவிந்தன்காடு, பெரியகாடு, நட்டுவன்காடு, ஆலாங்காடு பகுதியில் கொரோனோ வைரஸ் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு பவுடர் அடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் சென்னியப்பன், துணை தலைவர் முத்துச்சாமி, ஊராட்சி செயலர் பாஸ்கரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

குன்னத்தூர் அருகே காவுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கே.தொட்டிபாளையம், சுக்காகவுண்டன்புதூர், மேற்கு தச்சம்பாளையம், கிழக்கு தச்சம்பாளையம், வாமலைகவுண்டன் பாளையம், கந்தப்பகவுண்டன் புதூர், வேப்பம்பாளையம், செட்டியாகவுண்டன் புதூர், குமரிகல்பாளையம், செம்பூத்தாம்பாளையம், கரையான்புதூர், நாச்சிபாளையம், கூலபாளையம், வடக்கு தோட்டம், புலவன்தோட்டம் பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு கிருமி நாசினி பவுடர் தூவப்பட்டது.

மேலும் கே.தொட்டி பாளையம், சுக்காகவுண்டன் புதூர் ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 மற்றும் உணவு பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊத்துக்குளி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கல்பனா, யமுனாதேவி, காவுத்தாம்பாளையம் ஊராட்சி தலைவர் பவித்ரா, துணை தலைவர் வெள்ளைசாமி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

வெளியாட்கள் ஊருக்குள் வராதபடி ஆத்துப்பாளையம் எல்லையை மூடிய பொதுமக்கள்
திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊர் பொதுமக்கள் தங்களது ஊர் எல்லையை மூடினர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளிலேயே இருந்து தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் சாலைகளில் வாகனங்களில் சுற்றி திரிவது அரசின் உத்தரவை மீறுவது மட்டுமின்றி, கொரோனா வைரஸ் மேலும் பரவ வழிவகுப்பதாக அமைகிறது.

இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாளையம் பகுதியில் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளும் வகையில் தனிமைப்படுத்தி கொள்ள முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை முதல் அந்த பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாத வகையிலும், வெளிநபர்கள் யாரும் அங்கு நுழையாதபடிக்கும் ஆத்துப்பாளையத்திற்கு செல்லும் அனைத்து எல்லைகள் அனைத்தும் இரும்பு தடுப்பான்கள் மற்றும் கயிறுகளை கட்டி எல்லையை மூடினர்.

அப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர், பால், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அரசு உத்தரவின்படி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்த பகுதியிலேயே கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அந்த பகுதியை மாநகராட்சி, சுகாதாரத்துறை, போலீசார் இணைந்து சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சூழலில், ஆத்துப்பாளையத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற நிலையிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியே வராமல் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ள சம்பவம் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

கிராமங்களில் காட்சிகள் மாறின புத்துயிர் பெற்ற பாரம்பரிய விளையாட்டுகள்
ஊரடங்கினால் பெரியவர் முதல் சிறியவர் வரை வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட தொடங்கியுள்ளனர்.

உழைத்து முடித்து விட்ட முதியவர் முதல் வீதிகளில் ஓடி ஆடிய சிறுவர்-சிறுமியர் வரை அனைவரும் ஊரடங்கினால் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். 10 நாட்களை கடந்து விட்ட நிலையில் பொழுதுபோக்கு சாதனங்கள் போர் அடிக்க தொடங்கி விட்டன. செல்போன் பார்த்து பார்த்து அதுவும் புளித்துப்போய் விட்டது.

இந்த சூழ்நிலையில் கிராமப்பகுதிகளில் நமது பாரம்பரிய விளையாட்டுகளுக்கு மவுசு பிறந்து விட்டது. அனைவரது வீடுகளிலும் பெண்கள் தாயம், பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம் போன்றவற்றை விளையாடுகின்றனர். பல்லாங்குழி பலகைகள் எல்லாம் பரணி ஏறி ஓய்வு எடுத்து வந்த நிலையில் அவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இளம்தலைமுறையினருக்கு அதனை விளையாட தெரியாத நிலையில் பாட்டிமார்களும் அக்கம்பக்கத்தில் உள்ள முதியவர்களும் கற்றுக்கொடுத்துள்ளனர். வித்தியாசமான அனுபவமாக அதனை விளையாடி மகிழ்கின்றனர்.

வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் பெண்கள் மரத்தடியில் அமர்ந்து நீண்ட காலத்துக்கு பிறகு ஊர்கதை பேசியபடியே தாயம் விளையாடுவதையும் காண முடிகிறது.

மேலும், வெளியில் இருந்து தின்பண்டங்கள் கிடைக்காத நிலையில் பெண்கள் வித விதமாக பலகாரங்கள் செய்ய தொடங்கியுள்ளார்கள். இளம்பெண்களும் சமையல் கற்றுக்கொள்ள இந்த ஊரடங்கு துணை நின்றுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் ரேஷன்கடைகளுக்கு பெண்களே சென்று வந்தனர். இப்போது ஆண்களை காண முடிகிறது.

சிறுவர்களும் இளைஞர்களும் கேரம், சதுரங்கம், இறகு பந்து போன்றவற்றின் பக்கம் திரும்பியுள்ளனர். ஒரு சிலர் மறைவான பகுதியில் பதுங்கி பணம் வைக்காமல் சூதாடி பொழுது போக்குகின்றனர்.

மேலும் வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு பங்குனி பொங்கல் திருவிழாவுக்காக போனஸ் வழங்கப்படும். ஆனால் தற்போது உற்பத்தி முடங்கி விட்டதால் போனஸ் வர வாய்ப்பு இல்லை என்று கருதிய நிலையில் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக பட்டாசு ஆலை அதிபர்கள், தொழிலாளர்களின் வங்கி கணக்கு மூலமாக சராசரியாக ரூ.4 ஆயிரம் வரை போனஸ் வரவு வைத்துள்ளனர். அத்தோடு அரசின் நிவாரணமாக ரூ.1000 கிடைத்திருப்பது அனைவருக்கும் புதிய தெம்பை தந்துள்ளது.

இந்த நிலையில் தாயில்பட்டி கடைவீதியில் நேற்று சமூக இடைவெளிஇல்லாமல் கடைகளில் கூட்டம் இருந்தது. நேற்று பிற்பகலில் ரோந்து வந்த போலீசார் அனைவரையும் எச்சரிக்கை செய்தனர். மேலும் சிலரது இரு சக்கர வாகனங்களில் சாவியை பறித்துச்சென்று விட்டனர். மாலைவரை அதனை வழங்காமல் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து அறிவுரை கூறி சாவியை திரும்ப கொடுத்தார்கள்.

மேலும் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களையும் கண்டித்து அஜாக்கிரதையாக இருக்க கூடாது என்று கூறி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நேற்று வெம்பக்கோட்டை போலீசாரால் 15 இரு சக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சாலையில் தேவையின்றி சுற்றித்திரிந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மீனாட்சிபுரம், விஜயகரிசல்குளம் பகுதியில் ஊராட்சி மூலம் தீயணைப்பு வாகனம் மற்றும் தனியார் வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் நிதி நிலை தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்க ஒத்துழைக்கவில்லை. இதனால் இந்த கிராமத்தினரே மஞ்சள், வேப்பிலை பொடி கலந்த தண்ணீரை தெருவெங்கும் தெளிக்கின்றனர். காலையில் வீடுகளின் முன்பு விளக்கேற்றி வைக்கவும் தவறுவதில்லை. வேப்பிலை தோரணமும் கட்டியுள்ளனர்.

தாயில்பட்டியில் பல இடங்களில் தெருக்களில் இளைஞர்கள் விழிப்புணர்வூட்டும் வகையில் கோலம் வரைகின்றனர். மேலும் துரைசாமியாபுரம் கிராமத்துக்குள் வெளியில் இருந்து ஆட்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad