Type Here to Get Search Results !

கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் மாதிரி எடுக்கும் மையத்தை பயன்படுத்த வேண்டும் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன்

கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் மாதிரி எடுக்கும் மையத்தை பயன்படுத்துமாறு மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தாக்கம் 3-ம் கட்டத்துக்கு செல்லாமல் கட்டுப்படுத்தும் பொருட்டு முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி அரசு ஆஸ்பத்திரிகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் காரணமாக நோய் பாதிப்புள்ளவர்களை சமுதாயத்தில் இருந்து எளிதில் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தனிமைப்படுத்துவதால் சமுதாயத்தில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது. தற்போது கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட நோய் அறிகுறி உள்ளவர்களும், கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளவர்களும் மேற்குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகளில் அரசின் இலவசமாக மாதிரி எடுக்கும் மையத்தை பயன்படுத்த வேண்டும்.

மாதிரி எடுக்கும் மையம்

கொரோனா அறிகுறிகள் இல்லாமல் கூட நோய் தொற்று இருக்க வாய்ப்புள்ளது. மேலும் அவ்வாறு நோய் தொற்று உள்ளவர்கள் பிறருக்கு நோயை பரப்ப வாய்ப்புள்ளது. கொரோனா பரிசோதனை செய்ய வரும் நபர்கள் அனைவருக்குமே நோய் தொற்று இருப்பதில்லை. எனவே 3-ம் கட்ட பரவலை தடுக்க ஒரே வழி நோய் அறிகுறிகள் உடைய அல்லது நோய் தொற்று இருப்பவர்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் பரிசோதனை செய்வதே. எனவே பொதுமக்கள் மாதிரி எடுக்கும் மையத்தை பயன்படுத்தி தங்களையும், சமுதாயத்தையும் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 04633 290548 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நெல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 17,672 வீடுகள் தீவிர கண்காணிப்பு
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 17,672 வீடுகள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மாவட்டம் தோறும் சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் சிறப்பு அலுவலர்களாக கருணாகரன் ஐ.ஏ.எஸ், மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று காலை நெல்லை வந்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. கருணாகரன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு பிறகு சிறப்பு அலுவலர் கருணாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தேன். நடைபெற்று வரும் பணிகள் குறித்து விரிவாக கூறினார்கள்.

கலெக்டர், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 55 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் வீடு திரும்பி இருக்கிறார். அவர், 14 நாட்கள் தனிமையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளார். அவரையும் மருத்துவத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். நெல்லை மாவட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். கொரோனா பரிசோதனை செய்யும் கருவி விரைவில் நெல்லைக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-

அரசியல் பிரமுகர்கள் கொரோனா நிவாரண உதவி செய்ய வேண்டாம் என கூறவில்லை. மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கினால், முறையாக பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ஆதரவற்றவர்களுக்கு காப்பகம் திறக்கப்பட்டு, அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஆதரவற்ற இல்லங்கள், நிவாரண உதவிகள் வழங்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவு கொடுக்கும்போது சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களுக்கு உணவு வழங்குவார்கள்.

17,672 வீடுகள்

வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வெளியே வர வேண்டும் என்ற 3 நிற அட்டை மேலப்பாளையத்தில் மட்டும் வழங் கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த கிழமைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவார்கள். நெல்லை மாவட்டத்தை மேலப்பாளையம், நெல்லை டவுன், கோடீஸ்வரன் நகர், பேட்டை, பாளையங்கோட்டை, பத்தமடை, களக்காடு, வள்ளியூர் என 8 கொரோனா மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த மண்டலங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 672 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வீடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சில தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தனிமை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 200 படுக்கைகள் தயாராக உள்ளது. தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்வோம். அரிசி, பருப்பு, மைதா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரசவ வார்டு

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு தனியாக அமைக்கப்பட்டு உள்ளது. கார்ப்பிணி பெண்கள் எந்நேரத்திலும் ஆஸ்பத்திரியில் சேரலாம். அவர்களுக்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள் தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர், மாவட்ட சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad