Type Here to Get Search Results !

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு இல்லை - அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு தொடரும்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படமாட்டாது என்றும், அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததால், கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவுவது சமூகத் தொற்று நிலைக்கு உயர்ந்துவிடாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த 21 நாள் ஊரடங்கு கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அன்று காலை 10 மணிக்கு தொலைக் காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை மே மாதம் 3-ந் தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தார். மேலும், 20-ந் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இயங்கலாம் என்பது தொடர்பாக, மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், 15-ந் தேதி வெளியான மத்திய அரசின் அறிவிப்பில், 20-ந் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்து அறிவிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள நிலைமையை ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக வல்லுநர் குழு ஒன்றை தமிழக அரசு நியமித்தது.

இந்த வல்லுநர் குழு நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.

அதன்பிறகு, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், வல்லுநர் குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமைச் செயலாளர் க.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்தபடி, மே மாதம் 3-ந் தேதிவரை தமிழகத்தில் ஊரடங்கையும், அதையொட்டி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் தளர்த்தாமல், நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

பின்னர் இதுதொடர்பாக, தமிழக அரசின் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

15.4.2020 அன்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில், 20.4.2020-க்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.

டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா, மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்கள், தற்போதுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலினை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவெடுத்து உள்ளன.

தமிழக அரசு முடிவு

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்வு செய்வது குறித்து ஆராய, 16.4.2020 அன்று ஒரு வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்து ஆணையிட்டு இருந்தது. அக்குழு, முதல் கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் 20.4.2020 அன்று (நேற்று) சமர்ப்பித்தது. இந்த குழுவின் ஆலோசனைகள் கவனமாக ஆராயப்பட்டன.

அதன் அடிப்படையில், நோய்த் தொற்று மேலும் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், மாநில பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படி, தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ள 3.5.2020-ம் தேதிவரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.

அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். நோய்த் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, நோய்த் தொற்று குறைந்தால், வல்லுநர் குழுவின் ஆலோசனையினை பெற்று, நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்.

பரபரப்பாக இயங்கிய இடம் வெறிச்சோடியது: பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறப்பு; மக்கள் யாரும் வராததால் ஊழியர்கள் ஏமாற்றம்
பத்திரப்பதிவு அலுவலகங்கள் நேற்று திறக்கப்பட்டன. மக்கள் யாரும் வராததால் ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழகம் முழுவதும் 578 பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. வீடு, நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் பணிகளும், ஆவணங்களை மற்றொருவர் பெயரில் பரிமாற்றம் செய்யும் பணிகளும் இங்கு நடைபெற்று வருகின்றன. பத்திரப்பதிவுத்துறை ஆவணப்பதிவுகள் மூலம் நடப்பு ஆண்டில் ரூ.14 ஆயிரத்து 500 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்ற இலக்குடன் பயணத்தை தொடங்கியது.

இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பத்திரப்பதிவுத்துறை அலுவலங்களையும் மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் பத்திரப்பதிவு துறை ரூ.600 கோடி வரை வருவாய் இழப்பை சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்தநிலையில் அரசு அலுவலகங்களில் 20-ந்தேதி முதல் தேவையான ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு அலுவலர்களும், ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்கள் 33 சதவீதம் பேர் பணியாற்றலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்கும் என்று அந்த துறையின் தலைவர் ஜோதி நிர்மலாசாமி அறிவித்தார்.

இதையடுத்து 27 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் நேற்று மீண்டும் இயங்க தொடங்கின. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் முககவசம் அணிய வேண்டும். ஆவணப்பதிவுக்கு வருவோர்கள் கைகளை கழுவிய பின்னரே அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி அறிவுறுத்தி இருந்தார். அவருடைய அறிவுரையை ஏற்று சார்-பதிவாளர்களும், ஊழியர்களும் நேற்று பணியில் ஈடுபட்டனர்.

பொதுவாக பத்திரப்பதிவு அலுவலகங்கள் மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக இயங்கும். ஒரு நாளைக்கு 200 டோக்கன் வழங்கி ஆவணப்பதிவுகள் நடைபெறும். ஆனால் நேற்று ஒரு மணி நேரத்துக்கு 4 டோக்கன்கள் வீதம் 25 டோக்கன்கள் மட்டுமே வழங்கி ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்று பத்திரப்பதிவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. எனினும் ஆவணப்பதிவுக்கு யாரும் வரவில்லை. குறிப்பாக குன்றத்தூர், கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் காற்று வாங்கியது. சார்பதிவாளர்களும், ஊழியர்களும் யாராவது ஆவணப்பதிவுக்கு வருவார்களா? என்று வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர். ஆனால் ஒருவர் கூட வராததால் அவர்கள் ஏமாற்றமும், தவிப்பும் அடைந்தனர்.

இந்தநிலையில் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவித்து உள்ளது. எனவே பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்குமா அல்லது இயங்காதா? என்பது குறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமியின் உத்தரவுக்காக சார்-பதிவாளர்களும், ஊழியர்களும் காத்து இருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad