Type Here to Get Search Results !

மனைவிகளால் கொடுமைப்படுத்தப்படும் ஆண்களை பாதுகாக்க ஒரு ‘ஹெல்ப் லைன்’ வேண்டும் - முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் இருக்கும் ஆண்களை மனைவிகள் கொடுமை செய்வதாகவும், ஆண்களை பாதுகாக்க தனியாக ஒரு ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண் சேவையை உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் வக்கீல் டி.அருள்துமிலன். இவர், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா என்ற கொடிய வைரசுக்கு பயந்து மரண பீதியில் உலக மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். இதனால், வீட்டில் அடைபட்டு கிடக்கும் ஆண்களின் நிலை பரிதாபமாக உள்ளது. குடும்ப வன்முறை உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் ஆண்களை ஆட்டிப்படைக்கிறது. பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை காட்டி, ஆண்கள் பலர் தங்களது மனைவிகளால் மிரட்டப்படுகின்றனர். அடிமைப்படுத்தப்படுகின்றனர்.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று கூடுதல் டி.ஜி.பி., ரவி வெளியிட்டுள்ள அறிக்கை ஆண்களுக்கு கடுமையான வேதனைகளை தருகிறது. சொந்த வீட்டில் உணவுக்காக ஆண்கள் கையேந்தும் நிலையில் உள்ளனர்.

பலர் மனதளவில் மனைவிகளால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். நிராயுதபாணியாகவும், குடும்ப வன்முறை குறித்து புகார் கொடுக்க முடியாமலும், பல ஆண்கள் வெளியில் சொல்லமுடியாத இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

பாதுகாக்க வேண்டும்

ஆனால், தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஆகியவை இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளன. ஆண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறைகளை முறையிடவே இடமில்லாத சூழலில், இந்த அறிக்கை ஒருதலைபட்சமானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும். எனவே கொரோனா எனும் கொடும் வைரசைவிட, குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படும் ஆண்களை பாதுகாத்திடவேண்டும். குறைந்தபட்சம் ஆண்களின் பிரச்சினைகளைத் தெரிவிக்க, ஒரு ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண் சேவையை அரசு உடனடியாக தொடங்கவேண்டும். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். ஆண்களை பாதுகாக்க ஆண்கள் ஆணையமும் உருவாக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, வங்காளதேசம் நாடுகளுக்கு சென்னையில் இருந்து 4 சிறப்பு விமானங்கள் - 485 பேருடன் புறப்பட்டு சென்றன
சென்னையில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, வங்காளதேசம் நாடுகளுக்கு 4 சிறப்பு விமானங்களில் 485 பேர் புறப்பட்டு சென்றனர்.

இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் சுற்றி வந்தனர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பயணிகள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர். அந்தந்த நாட்டு தூதர அதிகாரிகள் உதவியுடன் மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று கடந்த சில தினங்களாக சென்னையில் இருந்து அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூடான் உள்பட பல நாட்டு சுற்றுலா பயணிகள் திருப்பி அழைத்து செல்லப்பட்டனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் தங்கியிருந்த வங்காளதேசம், அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களை 4 சிறப்பு விமானங்களில் அழைத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு டெல்லி வழியாக 2 விமானங்கள் சென்றன. இதில் 3 குழந்தைகள், 77 பெண்கள் உள்பட 157 பேர் சோதனைகளை முடித்துக் கொண்டு சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.

அதேபோல் சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு சென்ற சிறப்பு விமானத்தில் 71 பெண்கள் உள்பட 164 பேரும், இங்கிலாந்து சென்ற சிறப்பு விமானத்தில் 13 குழந்தைகள், 69 பெண்கள் உள்பட 164 பேரும் பயணம் செய்தனர்.

ஒரே நாளில் 4 சிறப்பு விமானங்களில் 485 பேர் புறப்பட்டு சென்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad