Type Here to Get Search Results !

மதுரை ஐகோர்ட்டில் நாளை முதல் அவசர வழக்குகள் விசாரணை

மதுரை ஐகோர்ட்டில் நாளை முதல் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. மிக அவசர வழக்குகள் சிலவற்றை மட்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதிகள் விசாரித்தனர்.

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் வருகிற 20-ந்தேதி (அதாவது நாளை) முதல் அவசர வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் (நீதித்துறை) தமிழ்செல்வி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது அறிக்கையில் கூறியிருந்ததாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐகோர்ட்டில் வழக்குகள் விசாரணை நடைபெறவில்லை. தற்போது தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலின்படி, வருகிற 20-ந்தேதி முதல் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் அவசரமான மனுக்கள், ரிட் மனுக்கள், ரிட் அப்பீல் மனுக்கள், ஆட்கொணர்வு மனுக்கள் விசாரிக்கப்படும்.

அதன்பின் போலீசாருக்கு உத்தரவிடக்கோரும் அவசரம் மற்றும் கிரிமினல் மனுக்களை நீதிபதி பி.என்.பிரகாஷ் தனியாக விசாரிக்கிறார்.

ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை நீதிபதி வேல்முருகன் விசாரிக்கிறார். அவசர மனுக்கள் மற்றும் அனைத்து ரிட் மனுக்களை நீதிபதி கார்த்திகேயன் விசாரிக்கிறார்.அதேபோல மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு விசாரணைக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காரைக்குடியில் நிவாரண பொருட்கள் வாங்க திரண்டவர்களால் பரபரப்பு - போலீசாரிடம் வாக்குவாதம்
காரைக்குடியில் நிவாரண பொருட்கள் வாங்க திரண்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கலைந்து போகும்படி கூறியதால் அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் அரசு சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று புதுவயல், சாக்கோட்டை பகுதியை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் சார்பில் 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் ஏழை, எளிய மக்கள் மற்றும் அரிசி ஆலை தொழிலாளர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காரைக்குடி, சாக்கோட்டை, கல்லூர், புதுவயல் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காரைக்குடியில் ஒரு மேல்நிலைப்பள்ளி முன்பு குவிந்தனர். நிவாரண பொருட்களை வாங்குவதற்காக அதிகாலை முதலே மக்கள் குவியத் தொடங்கியதால் அவர்களை போலீசார் நீண்ட வரிசையில் நிற்கும்படி அறிவுறுத்தினர். நேரம் செல்லச்செல்ல இந்த கூட்டம் அதிகரித்தது.

மேலும் நீண்ட வரிசையில் நின்றவர்கள் போதிய சமூக இடைவெளி இல்லாமல் நின்றதால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் திகைத்தனர்.

இதையடுத்து மதியம் 12.30 மணிக்கு அங்கு வந்த காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மைக் மூலம் பொதுமக்களை அங்கிருந்து கலைந்து போக அறிவுறுத்தினார். வீட்டிற்கே வந்து நிவாரண பொருட்கள் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

அப்போது, “நாங்கள் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் பல மணி நேரமாக வரிசையில் நிற்கிறோம், இந்த நிலையில் கலைந்து போகச்சொன்னால் எப்படி?” என துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து அங்கு கூட்டமாக நின்றவர்களை கலைந்து போக செய்தனர்.

பின்னர் ஆங்காங்கே நின்ற பொதுமக்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தின் அடியில் அமர வைக்கப்பட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட நபர்கள் வந்தவுடன் அந்த பள்ளி வளாகத்திலேயே மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.

காரைக்குடியில் நேற்று காலை ஆயிரக்கணக்கானோர் நிவாரண பொருட்கள் வாங்க திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் நேரத்தில் புதிய பணி நியமனமா? தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம்
கொரோனா அச்சுறுத்தல் நேரத்தில் புதிய பணி நியமன உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் நாளை தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்துகிறார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் நேரத்தில் புதிய பணி நியமன உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் நாளை தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்துகிறார்கள். இதனால், விவசாயிகளுக்கு உரம் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 4,400 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 150 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் இந்த கூட்டுறவு சங்கங்களின் மூலம் நகை கடன், விவசாயிகளுக்கு உரம் வழங்குவது, ரேஷன் கடைகள் நடத்துவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

வைப்புத்தொகை சேகரிப்பு மற்றும் நிலுவையில் உள்ள இருப்பு தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்துக்கும் மேலாண்மை இயக்குனர் என்ற ஒரு புதிய பணி இடத்தை நியமித்து அவர்களுக்கான சம்பளத்தையும் அந்தந்த கூட்டுறவு சங்கங்களே வழங்கவேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் கோவிந்தராஜ் அனைத்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்களுக்கும் அனுப்பி உள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 3 கட்டவேலை நிறுத்த போராட்டம் நடத்த இருப்பதாகவும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி, பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூட்டுறவு உணவு மற்றும் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலாளருக்கு அனுப்பி உள்ள ஒரு கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் மக்கள் மடிந்து வரும் நிலையை கருத்தில் கொண்டு இந்திய அரசும், தமிழக அரசும் மக்களை பாதுகாக்க சீரிய முறையில் செயலாற்றி வருகின்றன. இந்த இக்கட்டான நேரத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் மேலாண்மை இயக்குனர் நியமனம் செய்யப்படவேண்டும் என்ற பதிவாளரின் உத்தரவு நிர்வாக ரீதியாக பல குழப்பங்களையும், நிதி இழப்பையும் ஏற்படுத்தி விடும் என்பதால் பதிவாளரின் உத்தரவை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை(திங்கட்கிழமை) அனைத்து பணியாளர்களும் கலந்து கொள்ளும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது, மே 1-ந் தேதி முதல் மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகத்துக்கு புள்ளி விவரம் அனுப்புவதை புறக்கணிப்பது, அதன் பின்னரும் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் ஜூன் மாதம் 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும் கிராமப்புறங்களில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு நகை கடன் வழங்குவது, வேளாண் பணிகளுக்கு தேவையான உரம் வினியோகம் செய்வது போன்ற பணிகளை தங்கு தடையின்றி செய்து வருகின்றன. தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பினால் இந்த பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது: தஞ்சையில், அடையாள அட்டை இல்லாமல் வந்தவர்களுக்கு அபராதம்
தஞ்சை மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் அடையாள அட்டை இல்லாமல் வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் அடையாள அட்டை இல்லாமல் வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக காய்கறி, மளிகை, மருந்து பொருட்கள் வாங்க மட்டும் வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்காக பச்சை, நீலம் மற்றும் பிங்க் ஆகிய வண்ணங்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை வைத்து இருப்பவர்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வெளியே வந்து பொருட்கள் வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை கடந்த 16-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் அடையாள அட்டை இல்லாமலும், அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதே போல் தஞ்சை மாநகரிலும் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அடையாள அட்டை இல்லாமல் வெளியே வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

அதன்படி தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து சோதனை நடத்தி வருகிறார்கள். தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று மதியம் வரை வாகனப் போக்குவரத்து அதிகமாகவே இருந்தது. எனவே, பல இடங்களில் அடையாள அட்டை இல்லாமல் வெளியே வந்தவர்களை போலீசார் நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பினர். பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள அண்ணாசிலை, ரெயிலடி பகுதியில் அடையாள அட்டை இல்லாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்து வசூலித்தனர்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதன்படி, இன்று (ஞாயிற்றுக் கிழமை) முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. எனவே, ஞாயிற்றுக்கிழமை மளிகை, காய்கனி, இறைச்சி உள்ளிட்ட கடைகளைத் திறக்கக் கூடாது என்றும், பால், மருந்து, குடிநீர் கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad