Type Here to Get Search Results !

நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளி

கும்மிடிப்பூண்டி அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் நள்ளிரவில் தூங்கும்போது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த கணவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த குருவராஜாகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி புஷ்பா (39). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர். மகன், ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். வீட்டில் ரமேஷ், புஷ்பா இருவர் மட்டும் வசித்து வந்தனர்.

புஷ்பாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரமேஷ், மனைவியை கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு புஷ்பா, கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீடான பெரியபாளையம் அடுத்த வெங்கல் அருகே உள்ள ஒட்டர்பாளையம் கிராமத்துக்கு சென்றுவிட்டார்.

கடந்த 13-ந்தேதிதான் புஷ்பா மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார்.
இந்தநிலையில் மீண்டும் அந்த கூலித்தொழிலாளி புஷ்பா வீட்டுக்கு சென்று அவருடன் பேசிக்கொண்டு இருந்தார். இதை ரமேஷ் நேரில் பார்த்துவிட்டார். உடனடியாக அந்த கூலித்தொழிலாளி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ரமேஷ், மீண்டும் மனைவியுடன் தகராறு செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு இது தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் வீட்டில் தூங்கி விட்டனர்.

அப்போது நள்ளிரவில் எழுந்த ரமேஷ், தனது மனைவி புஷ்பாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் கவரைப்பேட்டை போலீஸ் நிலையம் சென்று நடந்த விவரங்களை கூறி போலீசில் சரண் அடைந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கவரைப்பேட்டை போலீசார், கொலையான புஷ்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்ய பயன் படுத்தப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா நிதி திரட்டுவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி - 3 பேர் கைது
ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா நிதி திரட்டுவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு பெருந்துறைரோட்டில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. அந்த ஆஸ்பத்திரியில் நிர்வாக அதிகாரியாக ஈரோடு சென்னிமலைரோடு காந்திநகரை சேர்ந்த சதீஸ்குமார் (வயது 31) உள்ளார். அவரது செல்போனுக்கு கடந்த 13-ந் தேதி ஒரு செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்று அவர் பேசியபோது எதிர்முனையில் பேசியவர் தன்னை ஓய்வுபெற்ற நீதிபதி என்றும், கொரோனா நிவாரண உதவி வழங்குவதற்காக நிதி திரட்டுவதாகவும் தெரிவித்தார். அதற்கு சதீஸ்குமார், ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனரிடம் கேட்டு தகவல் சொல்வதாக கூறியுள்ளார்.

அதன்பின்னர் 14-ந் தேதி மீண்டும் அதே செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது ஊழியர்களிடம் நிதி திரட்டி கொடுப்பதாக சதீஸ்குமார் தெரிவித்தார். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி பேசுவதாக கூறியவர் வெங்கடபதி என்பவரை நேரில் அனுப்பி பணத்தை பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்து உள்ளார். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு 3 பேர் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அதில் ஒருவர் தன்னை வெங்கடபதி என்று அறிமுகப்படுத்தி கொண்டு, ஓய்வுபெற்ற நீதிபதி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் இருந்து திரட்டப்பட்ட ரூ.50 ஆயிரம் மற்றும் ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனர் கொடுத்த ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்தை அவர்களிடம் சதீஸ்குமார் கொடுத்துள்ளார். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதியின் விவரத்தை பற்றி சதீஸ்குமார் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த சதீஸ்குமார் பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் 3 பேரும் சதீஸ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, பணத்துடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். உடனடியாக ஆஸ்பத்திரியின் ஊழியர்கள் அவர்கள் 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர். இதைத்தொடர்ந்து பிடிபட்டவர்களை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் ஈரோடு பெரியசடையம்பாளையத்தை சேர்ந்த வெங்கடபதி (வயது 56), கோபிசெட்டிபாளையம் புதுக்கரைப்புதூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (37), கோவை கணபதி பகுதியை சேர்ந்த கிரீஸ்குமார் (46) ஆகியோர் என்பதும், இவர்கள் அனைவரும் ஈரோட்டில் உள்ள ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், ஓய்வுபெற்ற நீதிபதி பேசுவதாக கூறி தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.1 லட்சத்தை மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

திருக்கழுக்குன்றத்தில் போலீசார் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டவர் கைது
திருக்கழுக்குன்றத்தில் போலீசார் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கழுக்குன்றம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார், ஊரடங்கு உத்தரவையொட்டி நேற்று காலை திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் செல்போனுக்கு ஒரு வீடியோ வந்தது. அதை பார்த்தபோது, திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் இருந்து வாலிபர் ஒருவரும், அவருக்கு பின்னால் 3 பேரும் வெளியே நடந்து வருவது போலவும், அதன் இருபுறமும் பெரிய அரிவாளுடன் அந்த வாலிபர் நிற்பது போன்ற புகைப்படமும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகி இருந்தது.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகரிடம் அவர் தகவல் தெரிவித்தார். பின்னர் அவரது உத்தரவின்பேரில் நடத்திய விசாரணையில் அந்த வீடியோவை வெளியிட்டது திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரவர்மா (வயது 22) என்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், எங்கள் மீது அடிக்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்வதால் அந்த வீடியோவை வெளியிட்டேன் என்றார். அவருக்கு உடந்தையாக 2 பேர் இருந்ததாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் மகேந்திரவர்மா மீது அவதூறான வீடியோ வெளியிட்டதாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad