Type Here to Get Search Results !

கொரோனாவால் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்காக சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழக விடுதிகள், முகாம்களாக மாற்றம் - மாநகராட்சி

கொரோனாவால் தனிமைப்படுத்தப்படுபவர்கள் தங்குவதற்கு சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழக விடுதியின் அறைகளை முகாம்களாக மாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னையில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

full-width இந்தநிலையில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறியும் ‘ராப்பிட் டெஸ்ட்’ ஆரம்பித்ததும், உடனுக்குடன் முடிவுகள் தெரியவரும். அந்த சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை உயரும்பட்சத்தில் அவர்களை தங்க வைப்பதற்கு தேவையான இடங்களை மாநகராட்சி முனைப்புடன் ஏற்பாடு செய்து வருகிறது.

குறிப்பாக, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதி அறைகளை தனிமைப்படுத்தப்படுபவர்கள் தங்குவதற்கான முகாம்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அடையாறில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த 2 கல்வி நிறுவனங்களும் மிகப்பெரிய நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்களில் ஏராளமான மாணவர்கள் தங்கும் விடுதி அறைகள் உள்ளன.

இந்த விடுதி அறைகளை முகாம்களாக மாற்றுவதற்கு ஏதுவாக, அதை ஒதுக்கித்தர மாநகராட்சி கேட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி., யில் தங்கி இருக்கும் மாணவர்கள் சிலரை அறைகளை காலி செய்யுமாறு நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. அந்த மாணவர்கள் தங்குவதற்காக மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தேவை இருக்கும்பட்சத்தில் இந்த கல்வி நிறுவன வளாகங்களில் உள்ள பிற கட்டிடங்களையும் முகாம் அமைக்க கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காஞ்சீபுரத்தில் பதப்படுத்தப்பட்ட 10 டன் கோழி இறைச்சிகள் பறிமுதல் - குடோனுக்கு அதிகாரிகள் ‘சீல்’
காஞ்சீபுரத்தில் பதப்படுத்தப்பட்ட 10 டன் கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள், அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் மெகபூப்பாஷா(வயது 43). இவர், அதே தெருவில் உள்ள முத்தீஸ்வரர் தோட்டத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பெரிய குடோன் வைத்து உள்ளார்.

கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை வாங்கி வந்து, இந்த குடோனில் பதப்படுத்தி காஞ்சீபுரத்தில் உள்ள இறைச்சி கடை மற்றும் ஓட்டல்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைப்பார்.


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு உள்ளன. மேலும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில் இறைச்சி கடைகளும் மூடப்பட்டு உள்ளன.

நேற்று முன்தினம் மாலையில் காஞ்சீபுரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இத னால் காஞ்சீபுரம் நகரில் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று இந்த இறைச்சி குடோனில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதுகுறித்து காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் ஆர்.மகேஸ்வரி, காஞ்சீபுரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அகிலாதேவி மற்றும் நகராட்சி சுகாதாரத்துறையினர் அந்த இறைச்சி குடோனுக்கு சென்று சோதனை செய்தனர்.

அதில் கலெக்டர் உத்தரவால் காஞ்சீபுரத்தில் உள்ள இறைச்சி கடைகள் மூடப்பட்டு உள்ளதால் விற்பனை செய்ய முடியாத 10 டன் கோழி இறைச்சிகளை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி, மூட்டை மூட்டையாக குளிர்சாதன பெட்டிக்குள் பதப்படுத்தப்பட்டு இருப்பதும், நேற்று முன்தினம் மின்தடை ஏற்பட்டதால் குளிர்சாதன பெட்டி செயல்படாமல் கோழி இறைச்சிகளில் இருந்து துர்நாற்றம் வீசியதும் தெரிந்தது.

இதையடுத்து குடோனில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட 10 டன் கோழி இறைச்சிகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த குடோனை பூட்டி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அத்துடன் கிருஷ்ணன் தெருவில் உள்ள மெகபூப்பாஷாவுக்கு சொந்தமான பிரியாணி கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெரு முழுவதும் நகராட்சி சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளித்தனர்.

இதுகுறித்து தனி தாசில்தார் அகிலாதேவி கூறும்போது, மெகபூப்பாஷா இந்த குடோனில் வெளி மாவட்டத்தில் இருந்து வாங்கி வந்த கோழி இறைச்சிகளை சுமார் 3 மாதங்களாக பதப்படுத்தி பதுக்கி வைத்து உள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள், காஞ்சீபுரம் நத்தப்பேட்டை குப்பை கிடங்குகளில் குழி தோண்டி புதைக்கப்படும். விசாரணைக்கு பிறகுதான் குடோன் உரிமையாளர் கைது செய்யப்படுவாரா? என்பது தெரியவரும் என்றார்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். கோவில்பட்டி அத்தைகொண்டான் கோமதி நகரில் சலவை தொழிலாளர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை ஒன்றிய கவுன்சிலர் நிர்மலா அழகர்சாமி வழங்கினார்.

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி செக்கடி தெருவில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் தவமணி ஏழைகளுக்கு இலவச காய்கறிகளை வழங்கினார்.

கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் பா.ஜனதாவினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். பின்னர் ஏழைகளுக்கு முககவசம், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் பாலாஜி, நகர தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில், மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி வழங்கினார்.

பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணைத்தலைவர் ஜெகதீஸ் ராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு பா.ஜனதாவினர் உணவு பொட்டலங்களை வழங்கினர். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செந்தூர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடன்குடியில் வணிகர்கள் சங்கம் சார்பில், தூய்மை பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருங்கை மகாராஜா வழங்கினார். வணிகர்கள் சங்க தலைவர் அம்புரோஸ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனி பிரிமின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினத்தில் ஆதரவற்றவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று, வார்டு உறுப்பினர் ஞானஈசுவரி சக்திவேல் உணவு பொட்டலம் வழங்கினார்.

குரும்பூர் அருகே கானம் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் 19 தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார். மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கேயத்தில் பொதுமக்களுக்கு அரிசி வினியோகம் - முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜ் வழங்கினார்
காங்கேயத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.என்.என்.நடராஜ் பொதுமக்களுக்கு 10 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதன் காரணமாக சாதாரண கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இழந்து அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.என்.என்.நடராஜ், ஆலாம்பாடி ஊராட்சியில் உள்ள நெய்க்காரன்பாளையம், கல்லெரி, சகாயபுரம், ஆண்டிமடக்காடு உள்ளிட்ட 1600 ரேஷன் கார்டு தாரர்களுக்கு 10 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், டீ தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போது ஒன்றிய கவுன்சிலர் மைனர்பழனிசாமி, என்.எஸ்.என்.தனபால், மாவட்ட பிரதிநிதி காமாட்சிபுரம் மணி, ஊராட்சி செயலாளர் என்.நடராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad