Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் மேலும் 56 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 56 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267-லிருந்து 1323-ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட அளவில், தஞ்சாவூரில், இன்று ஒரே நாளில், 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 228ஆக அதிகரித்திருப்பதோடு, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

தமிழகத்தின் 22 மாவட்டங்களை கொரோனா தொற்று அதிகம் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தேசிய அளவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம், நோயாளிகள், குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்டவைத் தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை, செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வியாழக்கிழமை நிலவரப்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை, 1 லட்சத்து 31 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 78,349 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பை நிறைவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 23 ஆயிரத்து 934 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாகவும், கொரோனா அறிகுறி இல்லையென்றாலும், தொற்றுநோய் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வழியே பயணித்தவர்கள் என்ற அடிப்படையில், 34 பேர் அரசின் தனிமை முகாம்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், 29,673 கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, 56 பேருக்கு, பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1323ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா அறிகுறி, பாதிப்பு உள்ளிட்டவற்றுடன், மருத்துவமனைகளின் தனி வார்டுகளில், 1,891 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்பு இன்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்திருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, தீவிர உயர் சிகிச்சைக்குப் பின், இன்று ஒரே நாளில், 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்மூலம், கொரோனா பாதிப்பிலிருந்து, பூரண நலம் பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, 283ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, கரூரில், 51 பேரும், திருச்சியில் 33 பேரும், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அடுத்த 14 நாட்களுக்கு, வீட்டில், தனிமை கண்காணிக்கப்பில் வைக்கப்பட்டிருப்பார்கள்.

பணக்காரர்களால்தான் கொரோனா தமிழ்நாட்டுக்கு வந்தது: இழப்பீடு குறித்த கேள்விக்கு முதல்வர் பதில்
கொரோனா வைரஸ் பணக்காரர்களால் தான் தமிழ்நாட்டுக்கு வந்தது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்போது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், கொரோனா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், இது பணக்காரர்களுக்கு வந்த நோய் தான். ஏழைக்கு எங்கு வந்தது. கொரோனா வைரஸ் வெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் இறக்கப்பட்ட நோய் தான் என பதிலளித்தார். தமிழகத்தில் இவர்களால் தானே நோய் வந்ததே தவிர தமிழகத்தில் உருவாகவில்லை என பதிலளித்தார்.

தமிழகத்தில் சிவப்பு மண்டல மாவட்டங்கள் எவை?
தமிழகத்தில் கொரோனா வைரஸூக்கு அதிகம் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்கள் பட்டியலை நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் அதில் இடம்பிடித்துள்ளன. மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகிய மாவட்டங்களும் இதில் இடம் பிடித்துள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad