இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மே 5 வரை 3 வாரம் ஊரடங்கு - மத்திய அமைச்சர் சூசகம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீள மேலும் 3 வாரம் ஊரடங்கு தேவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். கொரோனா தொற்று இதுவரை உலகளவில் 96,000 உயிர்களை பலி வாங்கியுள்ளது. மேலும் உலகம் முழுவதும் 16 லட்சம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதுவரை 6,124 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐ எட்டியுள்ளது. இதனிடையே ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் வரும் 14ம் தேதியோடு முடிவடைய உள்ளது. இன்று 17வது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ' கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை ஒழிப்பது மிகப்பெரிய சவால்.கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் தேவைப்படுவதாக மாநிலங்களிலிருந்து தகவல் வந்துள்ளது. ஊரடங்கு உத்தரவை 100% பின்பற்ற வேண்டும். இதனை மாநில அமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும்.100% ஊரடங்கை பின்பற்றாவிட்டால் கொரோனாவை எதிர்த்து போரிட முடியாது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் வீட்டிலேயே இருப்பது அவசியம்',என்றார். மேலும் இதில் தவறினால் கொரோனாவிற்கு எதிரான போரில் நமக்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிடும் என்றும்,  ஊரடங்கு என்பது சமூக ரீதியான தடுப்புமருந்து போன்றது என்றும் அவர் தெரிவித்தார்.
full-width
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url