Type Here to Get Search Results !

திண்டுக்கல் மாவட்டத்தில், பெண் உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண் உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் டெல்லி, வெளிமாநிலத்துக்கு சென்று வந்தவர்கள், அவர்களின் உறவினர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சிறுமி, பெண்கள், வாலிபர்கள், முதியவர்கள் என நேற்று முன்தினம் வரை மொத்தம் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் இதுவரை 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் முதியவர் ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதற்கிடையே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் திண்டுக்கல் மற்றும் பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்தவர் 55 வயது ஆண். இவர் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதிக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். உடனே அவருக்கு சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தேனிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதேபோல் பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தில் ஒரு பெண் மற்றும் வாலிபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் பக்கத்து வீட்டில் வசிக்கின்றனர். அவர் மூலம் இவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டத்தில்போலீஸ் ஏட்டு- சிறுவன் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டு-சிறுவன் உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கலெக்டர் சாந்தா தலைமையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் புதுடெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பி வந்த பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு முதன்முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பி தனிமையில் இருந்து வருகிறார்.

பாதிக்கப்பட்ட ஒருவரும் குணமடைந்ததால், கொரோனா பாதிப்பில்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாறி இருந்தது. இந்நிலையில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்த வி.களத்தூரை சேர்ந்தவரின், உறவினரான 24 வயதுடைய ஆணுக்கும், மேலும் அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய போலீஸ்காரர் ஒருவருக்கும், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் 4-வது வார்டு கீழவீதியை சேர்ந்த 4 வயது சிறுவனுக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால், அவர்கள் 3 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இதனால் அவர்கள் 3 பேரையும் சுகாதாரத்துறையினர் நேற்று முன்தினம் இரவே திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சுகள் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் பரிசோதனை முடிவில் அவர்கள் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதாக நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மேலும் பாளையத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் வெளிநாடான சார்ஜாவில் இருந்து திரும்பி வந்தார். ஆனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இந்நிலையில் சிறுவனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவனுடன் பழகியவர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வைத்து, அவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக அனுப்ப முடிவு செய்துள்ளனர். பாளையம் கிராமத்திற்குள் நுழையும் பகுதிகளில் போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி, தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் போலீஸ் ஏட்டுவுடன் வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சேலத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ பரிசோதனை தொடக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ பரிசோதனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று தொடங்கியது.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை முடிவுகள் வெளிவர 6 மணி நேரம் ஆகிறது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை எளிதாக கண்டறியக்கூடிய 24 ஆயிரம் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ பரிசோதனை கருவி சீனாவில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளது. இதில் 1000 ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவிகள் சேலம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை இந்த கருவி மூலம் சிலருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்களுக்கு ரத்தம் மூலம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்ற முடிவு ½ மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டார். அப்போது ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், மாநகர் நல அலுவலர் பார்த்திபன் உள்பட பலர் உடன் இருந்தன. பின்னர் இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் கூறியதாவது:-

‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற கருவி மூலம் கொரோனா நோய் தொற்று துரிதமாகவும், எளிமையாகவும் ½ மணி நேரத்தில் தெரிந்து கொள்ளலாம். குறுகிய காலத்தில் அதிக நபர்களுக்கு தொற்று ஏற்படுவதன் மூலம் உண்டான நோய் எதிர்ப்பு சக்தியை தெரிந்து கொள்ள இயலும். இந்த பரிசோதனை கொரோனா வைரஸ் அறிகுறியான காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்ட 7 நாட்களுக்கு பின் நடத்தப்பட வேண்டும்.

எனவே சேலத்தில் தொற்று பாதிப்புக்குள்ளான ‘ஹாட்ஸ் பாட்’ எனப்படும் பகுதிகளில் உள்ள நபர்களுக்கு வேகமாக பரிசோதனை நடத்தி அதன் முடிவுகளின் படி நோயை கட்டுக்குள் கொண்டு வர இயலும். ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் 2,260 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 896 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அனை வருக்கும் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்தது என்று அவர் கூறினார்.

சேலத்தில் கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்ய மறுப்பு: டாக்டர் மீது கலெக்டரிடம் புகார்
சேலத்தில் கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்த டாக்டர் மீது கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்தவர் ஜாவித். இவருடைய மனைவி சல்மா (வயது 23). 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவர், தாதகாப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். அதன்படி நேற்று கர்ப்பணி சல்மா சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்றபோது, அங்கு அவருக்கு முதலில் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர், அங்கிருந்த பெண் டாக்டரை அணுகி ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்கு அந்த டாக்டர், நீங்கள் டெல்லிக்கு ஏதேனும் சென்று வந்தீர்களா? என்று கேட்டதோடு, 2 மாதம் கழித்து வருமாறு கூறி சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த சல்மா, உடனடியாக அங்கிருந்து வெளியே வந்தார்.

இதனை தொடர்ந்து சல்மா தனது உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், கர்ப்பிணி என்றும் கூட பாராமல் சிகிச்சை அளிக்க மறுத்த பெண் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார்.

இதேபோல் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திலும் சல்மா தரப்பில் பெண் டாக்டர் மீது ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், முஸ்லிம் பெண் என்பதால் சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும், எனவே, அந்த டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad