Type Here to Get Search Results !

ஈரோட்டில் தடையை மீறி இறைச்சி-மீன் கடை நடத்திய 3 பேர் கைது

ஈரோட்டில் தடையை மீறி இறைச்சி மற்றும் மீன் கடை நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட கோழி, ஆட்டு இறைச்சி கடைகள் உள்ளன. மேலும் ஸ்டோனி பாலம், கருங்கல்பாளையம், பி.பி.அக்ரஹாரம் உள்பட 6 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட மீன் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டு உள்ள நிலையில், மீன் மற்றும் இறைச்சி கடைகளில் முறையாக சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை.

இதனால் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த 2 நாட்களிலும் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் நடைமுறைக்கு வந்த இந்த தடை, 144 தடை உத்தரவு முடியும் வரை அமலில் இருக்கும் என மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மற்றும் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி இல்லை. அதனால் மாநகர் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. எனினும் தடையை மீறி ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மீன் மற்றும் கோழி -இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீன் மற்றும் இறைச்சி கடைக்காரர்களை எச்சரித்து கடைகளை மூட உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்தும் கிருஷ்ணம்பாளையம் ஓங்காளியம்மன் கோவில் வீதியில் ஆட்டு இறைச்சி கடை நடத்திய நாடார் மேடு பகுதியை சேர்ந்த சம்சுதீன் (வயது 37), கமலா நகர் பகுதியில் மீன் கடை நடத்திய அதே பகுதியை சேர்ந்த அப்துல் லத்தீப் (20), வண்டியூரான் கோவில் வீதியில் கோழி இறைச்சி கடை நடத்திய அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ் (44) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 30 கிலோ மீன் மற்றும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் கொடுமுடியில் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள ஒரு மளிகை கடையில் அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் பேரூராட்சி செயல் அதிகாரி விஜயநாத் மற்றும் அதிகாரிகள் சம்பவ கடைக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அரசு நிர்ணயித்த நேரத்தையும் தாண்டி மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த மளிகை கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல் கொடுமுடி பைபாஸ் ரோட்டில் அரசின் உத்தரவை மீறி கடையை திறந்து இறைச்சி விற்பனை செய்த கடையையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

ஆற்காடு அருகே, தொழிலாளி அடித்துக் கொலை - போலீஸ் விசாரணை
ஆற்காடு அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், கண்ணமங்கலம் கூட்ரோட்டில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் இந்திராநகர் பகுதி உள்ளது. இங்கு நேற்று காலையில் முகம் சிதைந்த நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் தலை மற்றும் முகத்தில் வெட்டுக்காயங்கள் இருந்தன. கொலை செய்து உடலை சிறிது தூரம் இழுத்துச்சென்றுள்ளனர். அவருக்கு அருகில் ரத்தம் படிந்த ஸ்பேனர்கள் கிடந்தது. மேலும் சுமார் 100 அடி தூரத்தில் பழைய ஸ்கூட்டி நின்றது. அதில் ரத்தக்கரை படிந்திருந்தது. அதன் அருகே இரண்டு பழைய லாரி பேட்டரிகள், குடிநீர் பாட்டில் இருந்தன.

இதனையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் வேலூர் அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்த குமார் (வயது 46), தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad