Type Here to Get Search Results !

மதுரையில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியானது: பாதித்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது

திருமங்கலத்தை சேர்ந்த 3 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 41 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 10 பேர் குணமடைந்ததை தொடர்ந்து அவர்கள் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதுபோல் ஏற்கனவே பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு அறையில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று மதுரையைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 3 பேரும் மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் 3 பேரும் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் வயது முறையே 42, 17, 65 ஆகும். இவர்கள் 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமங்கலத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் திருமங்கலத்தில் மட்டும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் ஏற்கனவே 10 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டநிலையில் மேலூரை சேர்ந்த 3 பேர், எழுமலை பகுதியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 4 பேர் நேற்று தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு கொரோனா தொற்று குண மடைந்ததை தொடர்ந்து இவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் 15 நாட்களுக்கு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள், அவர்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் குணமடைந்து வீட்டுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

3 பேருக்கு கொரோனா உறுதி: தனிமைப்படுத்தப்பட்ட திருமங்கலம், வெளி ஆட்கள் உள்ளே வர தடை
திருமங்கலம் பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க வெளியூர் ஆட்கள் யாரும் உள்ளே வர முடியாதபடி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமங்கலத்தில் ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருமங்கலம் பகுதியில் சுமார் 13-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட முதற்கட்ட சோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து அவர்கள் 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர் கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இதைதொடர்ந்து காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வார்டுகள் தோறும் சென்று வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக திருமங்கலம் பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக நகராட்சி ஆணையர் சுருளிநாதன் அறிவித்து உள்ளார். இதனால் இரவு 8 மணிக்கு மேல் வெளியூர் ஆட்கள் யாரும் உள்ளே வரமுடியாதபடி ராஜபாளையம் ரோடு, சோழவந்தான் ரோடு, விடத்தகுளம் ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட இடங்களில் தகரம், கம்புகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதியை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற மேலும் 4 பேர் வீடு திரும்பினர்
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் நெல்லை மாவட்டத்திலும் பரவியது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 56 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனைவரும் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த சிலரும் இங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் நல்ல முறையில் குணமடைந்தவர்களுக்கு அடுத்தடுத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள், ஆஸ்பத்திரியில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

நேற்று மேலும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த 8–ந்தேதி சமூகரெங்கபுரத்தை சேர்ந்த ஒருவர் முதன் முதலாக கொரோனா நோயாளியாக சேர்ந்தவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 14–ந்தேதி 13 பேரும், நேற்று முன்தினம் 5 பேரும் வீடு திரும்பினர்.

இந்தநிலையில் நேற்று பாளையங்கோட்டை, பத்தமடையை சேர்ந்த 4 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து இதுவரை மொத்தம் 23 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad