Type Here to Get Search Results !

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 கர்ப்பிணிகள், போலீஸ்காரர் உள்பட 9 பேருக்கு கொரோனா

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஒரேநாளில் 2 கர்ப்பிணிகள், போலீஸ்காரர் உள்பட 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரேநாளில் 2 கர்ப்பிணிகள், போலீஸ்காரர் உள்பட 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தர்மபுரி மாவட்டத்தில் முதல் முறையாக லாரி டிரைவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலத்துக்கு இந்தோனேசியாவில் இருந்து வந்த 4 முஸ்லிம் மதபோதகர்கள், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் உள்பட 24 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 14 பேர் குணமடைந்ததால் அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் மேட்டூர் மற்றும் கிச்சிப்பாளையம் பகுதிகளை சேர்ந்த 2 கர்ப்பிணிகள், கருமந்துறையை சேர்ந்த ஒருவர் மற்றும் தாதகாப்பட்டியை சேர்ந்த தாய், மகன் என 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 51 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கரூர் மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 40 பேர் ஏற்கனவே குணமாகி வீடு திரும்பி விட்டனர். இந்த நிலையில் நேற்று கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உள்பட மேலும் 4 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மீதமுள்ள 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நேற்று புதிதாக போலீஸ்காரர் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு சுகாதாரத்துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நாமக்கல் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த 30 வயது பெண் இடம் பெற்று உள்ளார். இவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரின் மனைவி ஆவார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 62 வயது முதியவர் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரின் மாமனார் ஆவார்.

இதேபோல் மாணிக்கம்பாளையம் அருகே உள்ள நல்லிபாளையத்தை சேர்ந்த 26 வயது நிரம்பிய போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் சேலத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் நாமக்கல் அருகே உள்ள கோனூர் தாத்திபாளையத்தை சேர்ந்த 41 வயது லாரி டிரைவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 3 பேர் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், போலீஸ்காரர் கரூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 729 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் 11 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர வெளிமாநிலம் சென்று திரும்பிய 2,600 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள எலவடை கிராமத்தை சேர்ந்த 35 வயது லாரி டிரைவர் பல்வேறு ஊர்களுக்கு காய்கறி லாரி ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்ககிரியில் இருந்து எலவடைக்கு வந்த அவரை தனிமைப்படுத்தி ரத்தமாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மேலும் சில பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதன்முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மாவட்டங்கள் பட்டியலில் தர்மபுரியும் இணைந்தது.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட லாரி டிரைவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அந்த லாரி டிரைவரின் குடும்பத்தை சேர்ந்த 13 பேரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி ரத்த மாதிரிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். அவர்களில் யாருக்கேனும் கொரோனா தொற்று உள்ளதா? என்பது பரிசோதனை முடிவுகளின்போது தெரியவரும் என மருத்துவத்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

சேலத்தில் டாக்டர்கள், போலீசார் உள்பட 120 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அறிகுறி காரணமாக டாக்டர்கள், போலீசார் உள்பட 120 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காய்ச்சல், சளி காரணமாக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த வாலிபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட 30 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

கோவை புதூர் பட்டாலியனை சேர்ந்த போலீசார் சேலம் அன்னதானப்பட்டி காவலர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு பல்வேறு பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 27 வயதுடைய போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவருடன் தங்கியிருந்த இன்ஸ்பெக்டர் உள்பட 90 போலீசாரும் சேலம் குமாரசாமிப்பட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது.

இதற்கிடையில் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ள போலீஸ்காரரின் மனைவிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள இன்கு பேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் ஆஸ்பத்திரிக்கு பணி கேட்டு அங்கு சென்றார். இதனால் அவருடன் பணியாற்றிய போலீசாரையும் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர அந்த போலீஸ்காரர் பணியாற்றிய இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது அவருடன் நெருங்கி நின்று பேசியவர்கள் யார்? யார்? என்ற விவரங்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்டபம் அருகே செவிலியருக்கு கொரோனா உறுதி; ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது
உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிப்புளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதுவலசை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய ஒரு செவிலியர், உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

தொண்டியை சேர்ந்த இவர், தற்போது சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதியில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். அங்கிருந்து தினமும் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பணிக்கு வந்து செல்கிறார். மேலும் அவ்வப்போது கொரோனா நோய் குறித்த கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்ட அவர், பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த செவிலியருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குனர் அஜித் பிரபுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணியாற்றக்கூடிய அறைகள், நோயாளிகள் இருக்கும் இடங்கள், ஆம்புலன்ஸ் நிறுத்தப்படும் இடம் போன்ற பல்வேறு இடங்களை பார்வையிட்டு கிருமி நாசினி தெளிப்பதற்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் வராத அளவில் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. அந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 88 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிய வருகிறது.

இது உச்சிப்புளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்வு:சிகிச்சை முடிந்து கணவர் வீடு திரும்பிய நிலையில் மனைவிக்கு கொரோனா உறுதி
தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை முடிந்து கணவர் வீடு திரும்பிய நிலையில் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 356 பேர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

55 ஆக உயர்வு

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 60 வயது நபர் ஆவார். இவருடைய கணவர் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்.

இவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். குணம் அடைந்து நேற்று வீட்டுக்குத் திரும்பிய 3 பேரில் இவரும் ஒருவர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

356 பேர் முடிவுக்காக காத்திருப்பு

கொரோனா உறுதி செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் 128 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 108 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் 20 பேருக்கு பரிசோதனை முடிவு வர வேண்டி உள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த 526 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 422 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 104 பேருக்கு பரிசோதனை முடிவு வரவேண்டி இருக்கிறது.

சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகளுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 1,842 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 1,610 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை என தெரிய வந்தது. மேலும் 232 பேருக்கு பரிசோதனை முடிவு வர வேண்டியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 356 பேர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

வாணியம்பாடி தாலுகா பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா - காவல் நிலையத்துக்கு ‘சீல்’
வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 21-ந் தேதி 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் வாணியம்பாடியில் கடந்த 21-ந் தேதி சுகாதாரத்துறை சார்பில் காவல்துறையை சேர்ந்த 23 பேர் மற்றும் வருவாய்த்துறையினர் உள்பட 54 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 53 பேருக்கு தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டது. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மட்டும் கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் நேற்று வேலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அவர் பணிபுரிந்து வந்த வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையம் மற்றும் அவர் வசித்த குடியிருப்பு பகுதி முழுவதும் நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அவரது வீடு மற்றும் குடியிருப்பு பகுதிக்கும் பூட்டு போடப்பட்டது.

இன்ஸ்பெக்டருடன் பணிபுரிந்த 37 காவலர்களில் 30 பேர் வாணியம்பாடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும் 7 காவலர்கள் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணும் தனிமைப்படுத்தப்பட்டார்.

அத்துடன் இன்ஸ்பெக்டர் குடியிருந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் வாணியம்பாடிக்கு வந்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருக்கு ஆறுதல் தெரிவித்து பேசினார்.

இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் வாணியம்பாடி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் இன்ஸ்பெக்டர் கடந்த 19-ந் தேதி வாலாஜாவில் உள்ள தனது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று வாலாஜா நகராட்சி சார்பில், அவரது வீட்டின் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்பகுதியை தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்றது.

மேலும் மருத்துவ குழுவினர்கள் இன்ஸ்பெக்டர் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் கணவர் சிதம்பரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். தனது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்த அவர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இருப்பினும் அவருக்கு மறு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே துணை போலீஸ் சூப்பிரண்டு சபாநாயகர் தெருவில் உள்ள தனது வீட்டில் தங்கி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனிமைப்படுத்திக் கொண்டதால், அவருடன் பணியாற்றிய போலீசார் மற்றும் அதிகாரிகள் பீதியில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

உடுமலையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு - 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
உடுமலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இதில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு உடுமலையில் இருந்து சென்று வந்த 10 பேர் கடந்த 3-ந்தேதி உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் 3 பேரும் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், 3 பேரில் ஒருவருடைய மனைவி மற்றும் மகள் ஆகிய 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களும் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் உடுமலை அரசு மருத்துவமனை நர்சுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவர் கடந்த வாரம் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் உடுமலையில் இருந்து முதலில் கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த 3 பேரும் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினர். இருப்பினும் அவர்கள் 3 பேரும் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேரில் கொரோனா தொற்று இல்லாத நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

மற்றொருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளதாகக் கண்டறியப்பட்டதால் அவர் நேற்று முன்தினம் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் உடுமலையில் அவர் குடியிருந்து வந்த வீதி நேற்று அடைக்கப்பட்டு அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவரையும் சேர்த்து உடுமலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி கோவையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 3 ஆண்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நர்சு உள்பட 3 பெண்களும், ஒரு ஆணும் என 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடுமலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் குடியிருந்து வந்த பகுதிகள் அடைக்கப்பட்டு, அங்கு குடியிருப்பவர்கள் அந்த பகுதிக்குள்ளேயே இருக்கும்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு - குணமடைந்த 6 பேர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்த 6 பேர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இதுவரை 41 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 19 பேர் குணமடைந்தனர். மீதமுள்ள 20 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் நேற்று 133 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வரப்பெற்றது. இவர்களில் 47 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் திண்டிவனம் நகர பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

இதையடுத்து அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மற்ற 132 பேருக்கும் நோய் தொற்று இல்லை என தெரியவந்தது.

இதனிடையே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனாவினால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 6 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 2,078 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 42 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,967 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 69 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 1,550 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad