Type Here to Get Search Results !

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1½ வயது குழந்தை உள்பட 12 பேருக்கு கொரோனா உறுதி; நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 போலீசாருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1½ வயது குழந்தை உள்பட 12 பேருக்கு கொரோனா உறுதி
சென்னையை அடுத்த பரங்கிமலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட நசரத்புரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அதே தெருவில் மேலும் 3 ஆண்கள், 4 பெண்கள் உள்பட மொத்தம் 10 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் 1½ வயது பெண் குழந்தையும், போலீஸ்காரரின் மனைவியும் அடங்குவார்கள். அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 8 வயது சிறுவனுக்கும் கொரோனா வைரஸ் உறுதியானது. சிறுவன் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சிறுவன் சிகிச்சை பெற்று வந்த சேலையூர் கேம்ப் ரோட்டிலுள்ள பெதஸ்தா ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். மேலும் அந்த ஆஸ்பத்திரியில் தற்காலிகமாக யாருக்கும் சிகிச்சை அளிக்க கூடாது என தாசில்தார் சரவணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் உத்தரவின்பேரில் அங்கு மருத்துவ பணிகள் நிறுத்தப்பட்டது.

அதேபோல் கீழ்கட்டளையை சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவர், தாயின் மருத்துவ சிகிச்சைக்காக ஆட்டோவில் வடசென்னை பகுதிக்கு சென்று வந்தார். அதில் அவர் கொரோனா பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் தனியார் தொலைக்காட்சி ஊழியர் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தமாக காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் மாங்காட்டை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் உறுதியானது. அவர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும் அவரது கடைக்கு வந்து சென்றவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள 6 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டு மாங்காடு பேரூராட்சி சார்பில் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், கோயம்பேடு மற்றும் சென்னைக்கு சென்று வருபவர்களால்தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்பதால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் முக்கிய நுழைவுவாயில்களை மூடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி சென்னையில் இருந்து மாங்காடு மற்றும் குன்றத்தூர் வழியாக வரும் எல்லைகளான மாங்காடு, மவுலிவாக்கம், கெருகம்பாக்கம், குன்றத்தூர் நான்கு வழி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து சாலைகளை மூடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 53 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியநிலையில் நேற்றுமுன்தினம் மேலும் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 26 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 27 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 போலீசாருக்கு கொரோனா
சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டு உள்பட 2 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் கயிறுகளை கட்டி தடை ஏற்படுத்தப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தான் உதவி கமிஷனர் அலுவலகமும் உள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அதே காவல் நிலைய கட்டுப்பாட்டு பகுதியில் பணியாற்றி வரும் மாநில உளவுப்பிரிவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு நேற்று வழக்கம்போல பணிக்கு வந்த போலீசார்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசாருக்கு பரிசோதனை

இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு செல்ல பயந்த அவர்கள், போலீஸ் நிலையம் அருகே உள்ள பூட்டப்பட்டிருந்த கடைகளின் முன்பு உள்ள படிக்கட்டுகளில் ஆங்காங்கே தனித்தனியாக முககவசத்துடன் அணிந்தவாறு அமர்ந்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசாருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் 70-க்கும் மேற்பட்ட போலீசார்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன.

எனினும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான முடிவு இன்று(புதன்கிழமை) அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிகிறது.

இந்தநிலையில் ஒரு வார கால இடைவெளியில் அதே போலீஸ்நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கயிறு கட்டப்பட்டது

இதற்கிடையே நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கயிறுகள் கட்டப்பட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டது. அங்கு தொங்கவிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்த இடத்தை தாண்டி பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்றும், போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பள்ளிச் சாலையில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கனவே 3 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், மேலும் 2 பேர் என கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ஜி.பி. அலுவலகத்திலும் கொரோனா பீதி

மாநில உளவுப்பிரிவு தலைமை அலுவலகம் டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளான உளவுப்பிரிவு போலீசார், டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று தினந்தோறும் அதிகாரிகளை சந்திப்பது வழக்கம்.

இதனால் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும் கொரோனா பீதி தொற்றிக்கொண்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் போலீசாரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் அச்சத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் வீட்டுக்கு தப்பி ஓட்டம்
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர், அயனாவரம் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 24-ந் தேதி கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. உடனடியாக அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி, நடந்தே தனது வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கட்டிப்பிடித்து விடுவேன் என மிரட்டல்

இதையடுத்து பேசின்பிரிட்ஜ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அந்த நபர், போலீசாரை பார்த்து, என்னை பிடிக்க அருகில் வந்தால் கட்டிப் பிடித்து விடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டினர். இரவு முழுவதும் அவர் எங்கும் தப்பி விடாமல் அங்கேயே காவலுக்கு நின்றனர்.

நேற்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் போலீசார் பாதுகாப்பு கவச உடை அணிந்து வீட்டுக்குள் சென்று அவரை பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது ஈரோடு; சிகிச்சையில் இருந்த 4 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர்
சீனாவில் இருந்து உலகம் எங்கும் பரவி அனைவரையும் திகிலுக்கு உள்ளாக்கி இருக்கிறது கொரோனா வைரஸ் கோவிட்19. உலகில் உள்ள 210 நாடுகளில் கொரோனாவின் தாக்கம் உள்ளது. இந்தியாவும் இதற்கு விதி விலக்கு அல்ல. கேரள மாநிலத்தில் முதல் தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் குறுகிய காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் இந்த நோய் பரவியது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு என்று 3 மாவட்டங்களும் ஒரே நேரத்தில் கொரோனா கண்டறியப்பட்ட மாவட்டங்களாக இருந்தன. ஈரோட்டில் முதல் கொரோனா பாதிப்பு மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. தமிழகத்தில் முதன் முதலில் தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தது ஈரோடு. தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனது கணக்கை ஈரோட்டில் தொடங்கியது கொரோனா. அதில் இருந்து ஈரோடு மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். தாய்லாந்தை சேர்ந்த மேலும் ஒருவர், அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள், குடும்பத்தினர், புதுடெல்லி சென்று வந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என்று ஈரோட்டில் 64 பேர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஒருவர் உயிரிழப்பு

இதற்கிடையே ஈரோடு ரெயில்வே காலனி ரெயில்வே ஆஸ்பத்திரியில் பணியாற்றிய பெண் டாக்டர், அவரது குடும்பத்தினர் 4 பேர் கொரோனா பாதிப்பால் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட னர். சென்னிமலையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்படி 69 பேர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலும், கோவை மற்றும் திருச்சியிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

பெருந்துறையை சேர்ந்த முதியவர் ஒருவர் தீவிர காய்ச்சலால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு ஈரோடு மாவட்டத்தில் கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 70. ஒருவர் மட்டுமே உயிரிழந்தார்.

குணம் அடைந்தனர்

திருச்சியில் சிகிச்சை பெற்ற வாலிபர் வெற்றிகரமாக சிகிச்சையை முடித்து கொரோனாவை வென்று ஈரோடு திரும்பினார். ஈரோட்டில் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கில் முதன் முதலாக குணமாகி கணக்கை தொடங்கி வைத்தவர் இவர். அவரைத்தொடர்ந்து ஒவ்வொருவராக குணம் அடைய தொடங்கினார்கள். கோவையில் இருந்தவர்களும் குணம் அடைந்து வீட்டுக்கு சென்றனர். பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து குணம் அடைந்தவர்களை கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.

ஒட்டு மொத்தமாக 65 பேர் குணம் அடைந்து வீடு திருப்பிய பின்னர் 4 பேர் மட்டுமே தொடர் சிகிச்சையில் இருந்தனர். அவர்களும் முற்றிலும் குணம் அடைந்து விட்டதாக நேற்று முன்தினம் டாக்டர்கள் உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை அவர்களை வீட்டுக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

வழியனுப்பி வைப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, தோப்பு என்.டி.வெங்கடாசலம், இ.எம்.ஆர்.ராஜா, ஈஸ்வரன் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் மணி, ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், ஆர்.டி.ஓ. முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அடைந்த ஒருவர் தவிர அனைவரும் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்று தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். முதன் முதலாக கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட ஈரோடு முதன் முதலாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்திருக்கிறது. கடந்த 13 நாட்களாக வேறு யாருக்கும் புதிதாக தொற்று கண்டறியப்படவில்லை.

இது மிகப்பெரிய சாதனையாக உள்ளது. இதற்கு காரணம், அரசு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அறிவுரைகளை முழுமையாக செயல்படுத்திய கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் மற்றும் அதிகாரிகளாவர். அதிகாரிகள், களத்தில் நின்று போராடிய டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மின்சார வாரியத்தினர், ஊரக உள்ளாட்சி துறையினர் என்று அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக சாதித்து காட்டி இருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad