Type Here to Get Search Results !

'தில்லிவாசிகள் ஒவ்வொருவரும் புகைப்பிடிப்பதாகச் சொல்லலாம். எப்படி?'



டெல்லி மற்றும் டெல்லியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

ஆனால் நுரையீரல் மருத்துவர்களின் கருத்துப்படி, 'தில்லியில் மாசு அதிகரித்துவரும் நிலையில், தில்லியில் வசிப்பவர்கள் அனைவருமே புகைப்பிடிப்பவர்களாக கருத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

'சிகரெட் பிடிக்காதவர்களும், சிகரெட் பிடிப்பவர்களைப் போன்றே நுரையீரல் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடுகிறது' என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல்.

டெல்லியில் பிரபல மருத்துவமனையான, சர் கங்காராம் மருத்துவமனையின் நுரையீரல் அறுவை சிகிச்சைத் துறையில் பணிபுரியும் மருத்துவர் அர்விந்த் குமார் சொல்கிறார், 'தலைநகரில் உள்ள காற்று சுவாசிக்க தகுந்ததில்லை. தில்லியில் வசிக்கும் எவருமே, புகைபிடிப்பதால் ஏற்படும் தீயவிளைவுகளுக்குச் சமமான தீங்கைப் பெறுகிறார்கள்'.

'டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 360ஐ விட அதிகமாக உள்ளது. இதனால் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் சுவாசிக்கும் காற்று, நாளொன்றுக்கு 20 முதல் 25 சிகரெட் பிடிப்பதற்கு சமமான விளைவுகளை ஏற்படுத்தும்'.

காற்று மாசு பற்றி கூறும் மருத்துவர் அர்விந்த் குமார், 'நாம் நாளொன்றுக்கு சராசரியாக 25 ஆயிரம் முறை மூச்சை உள்ளே இழுத்துவிடுகிறோம். ஒரு முறை சுவாசிக்கும்போது 350 முதல் 400 மில்லிலிட்டர் காற்றை உள் இழுக்கிறோம் என்பதால் ஒரு நாளைக்கு மொத்தம் 10 ஆயிரம் லிட்டர் மாசடைந்த காற்றை சுவாசிக்கிறோம். காற்றில் கலந்துள்ள நச்சின் அளவு, தீபாவளியன்று பல மடங்கு அதிகரிக்கும்' என்று கூறுகிறார்.

பட்டாசு வெடிக்கும் நாளன்று மாசுபடும் காற்று அடுத்தநாள் புகைமூட்டம் விலகியதும் சரியாகிவிடும் என்று அனைவரும் கருதுகிறார்கள், ஆனால் இது தவறு என்று அர்விந்த் குமார் கூறுகிறார்.

"மாசடைந்த காற்றை ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மிக அதிக அளவில் உட்கிரகித்தாலும், சுவாசத்தை வெளிவிடும்போது அவை வெளியேறிவிடுவதில்லை. சுவாசிக்கும் காற்றில் உள்ள நச்சு நம் நுரையீரலில் படிந்துவிடும், இதன் பாதிப்பு வாழ்நாள் முழுவதும் தொடரும்."

நுரையீரலில் படியும் நச்சுப் பொருட்களை அகற்ற சிகிச்சையே கிடையாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

மாசுபட்டக் காற்றில் இருந்து பாதுகாக்க மருத்துவர் அர்விந்த் குமார் சில உபாயங்களை சொல்கிறார். இந்த உபாயங்களை பின்பற்றினால் நுரையீரலுக்கு ஏற்படும் அபாயங்களை தவிர்க்கலாம்.

உபாயங்கள்

புகை மற்றும் தூசி ஏற்படும் சாத்தியமுள்ள காரியங்களை தவிர்க்கலாம்.

மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் நெபுலைசர் மற்றும் இன்ஹேலர் போன்றவற்றை ஆஸ்துமா நோயாளிகள் எப்போதும் வைத்திருக்கவேண்டும்.

தூசுகளில் இருந்து பாதுகாக்க, என்-95 முகக்கவசத்தை அணியலாம்.

தண்ணீரால் நனைக்கப்பட்ட கைக்குட்டையை பயன்படுத்தலாம்.

கண் மற்றும் மூக்கு சிவந்துபோனால், குளிர்ந்த நீரால் கழுவவும்.

உதடுகளில் எரிச்சல் ஏற்பட்டால் குளிர்ந்த நீரால் கழுவவும்.

வானிலை மையத்தின் எச்சரிக்கை

இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கடந்த ஆண்டு விடுத்த கூட்டறிக்கையில், டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டு நிலவிய காற்று மாசு அளவு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

டெல்லியின் 25 இடங்களில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் நிலவிய மாசு அளவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

'தீபாவளியன்றும், அதற்கு அடுத்த நாளும் காலை 11 மணி முதல் இரவு 3 மணிவரை பி.எம்-10 மற்றும் பி.எம். 2.5 இன் அளவு உச்சத்தில் இருக்கும்'.
'கடந்த ஆண்டு வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் 50 சதவிகித அளவு குறைந்தாலும்கூட, டெல்லியில் காற்றின் தரம் மிகவும் குறைந்து மாசு உச்சகட்டத்தை அடைந்து மிகவும் மோசமான நிலையில் இருக்கும்'.
இந்த கூட்டறிக்கையில் மக்களின் பாதுகாப்புக்காக சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

பரிந்துரைகள்

காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதையும், மாலை நேரத்தில் வெளியில் செல்வதையும் தவிர்க்கவும்.

நீண்ட நேரம் கடுமையாக உழைப்பதை தவிர்க்கவும்.

நீண்ட நேரம் நடக்கவேண்டாம். நடக்கும்போது சற்று இளைப்பாறவும். இடைவெளிவிட்டு நடக்கலாம்.

சுவாசப் பிரச்சனை ஏற்பட்டால் உடனே உடல் உழைப்பை நிறுத்தவும்.

காற்றில் மாசு இருப்பதாக தோன்றினால் வீட்டின் கதவு ஜன்னல்களை மூடிவைக்கவும்.

ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, காகிதங்கள், மரப்பொருட்களை எரிப்பதை தவிர்க்கவும்.

வீட்டில் தண்ணீரை கொண்டு சுத்தம் செய்வதால், தூசி துகள்கள் குறையும்.
வெளியில் செல்லும்போது என்-95 மற்றும் பி-100 முகக்கவசம் பயன்படுத்தவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad