சென்னை : புரோ கபடி லீக் தொடரின் 5வது சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான பைனலில், குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி தொடங்கி நடந்து வரும் புரோ கபடி லீக் தொடரின் 5வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் மற்றும் பிளே ஆப் சுற்றுகளின் முடிவில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டியில் குஜராத் - பாட்னா அணிகள் களமிறங்குகின்றன. குவாலிபயர் 1 போட்டியில் 42-17 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் வீரர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளனர். அடுத்து நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 42-32 என்ற புள்ளிக் கணக்கில் கடுமையாகப் போராடி புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது.
இதைத் தொடர்ந்து, குவாலிபயர் 2 ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் 47-44 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்ற பாட்னா அணி பைனலுக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், குஜராத் - பாட்னா மோதும் இன்றைய இறுதிப் போட்டியை கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இரண்டு முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான பர்தீப் நர்வால் நடப்பு சீசனில் 25 போட்டிகளில் 350 புள்ளிகளைக் குவித்து முதலிடத்தில் உள்ளார். அவருடன் மோனு, விகாஸ், மனிஷ், ஜெய்தீப் ஆகியோரும் குஜராத் அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறார்கள். அதே சமயம், அறிமுக தொடரிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் சுகேஷ் ஹெக்டே தலைமையிலான பார்ச்சூன்ஜயன்ட்ஸ் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். லீக் ஆட்டத்தில் பாட்னாவை வீழ்த்தி இருப்பதும் அந்த அணியின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது. ஹாட்ரிக் சாம்பியனாக முத்திரை பதிக்க பாட்னா அணியும், முதல் முறையாக கோப்பையை வெல்ல குஜராத்தும் வரிந்துகட்டுகின்றன.
Post a Comment
0 Comments