கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பஞ்சாப் மாநிலம்: முதல்வர், அமைச்சர்களுக்கு ஊதியம் நிறுத்தம்
சண்டிகர்: கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு இம்மாதம் சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முழுவதும் அரசு அலுவலகங்களில் 4.50 லட்சம் ஊழியர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு இம்மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை நிறுத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்திற்கு பின்பு வசூலான வரிப் பணம் மாநில கருவூலத்திற்கு இன்னும் வந்துசேரவில்லை என்று தெரிவித்த மாநில நிதியமைச்சர், இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இன்னும் ஒருவாரத்தில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.