Type Here to Get Search Results !

உடல் எடையை குறைக்கும் பரட்டை கீரை







நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடல் எடையை குறைக்க கூடியதும், சர்க்கரை நோய்க்கு மருந்தாக விளங்குவதும், தோல்நோய்களை குணப்படுத்த கூடியதுமான பரட்டை கீரையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். மழைக்காலங்களில் நீர்நிலைகளில் கிடைக்க கூடியது பரட்டை கீரை.

இதற்கு எலிக்காதிலை என்ற பெயரும் உண்டு. இது, உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. பூஞ்சை காளான்கள், நோய் கிருமிகளை போக்குகிறது. வெள்ளைபோக்கு பிரச்னையை தீர்க்கிறது. உடல் வலி, நரம்பு வலிக்கு மருந்தாகிறது. பரட்டை கீரையை பயன்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க கூடியது, உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம்.

 தேவையான பொருட்கள்:

 பரட்டை கீரை, நல்லெண்ணெய், இஞ்சி, பூண்டு, உப்பு, மிளகு.

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விடவும். தட்டி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். நீர்விடாமல் அரைத்த பரட்டை கீரை ஒரு ஸ்பூன் சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். சிறிது உப்பு, கால் ஸ்பூன் மிளகுப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். கொழுப்பு சத்தை கரைக்கும். இதனால் உடல் பருமன் குறையும். புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை இது வெளியேற்றும்.

பரட்டை கீரை இலையை பயன்படுத்தி கை கால்கள், மூட்டுகளில் ஏற்படும் வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பரட்டை கீரை, மஞ்சள் பொடி, மிளகுப்பொடி, உப்பு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். சிறிது பரட்டை கீரை இலை போடவும். இதில், மஞ்சள் பொடி, மிளகுப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர கை, கால் மற்றும் மூட்டுக்களில் ஏற்படும் வலி சரியாகும். தசை வலி, நரம்பு வலி குணமாகும். உடல் உஷ்ணத்தை தணித்து குளிர்ச்சியை தருகிறது.

காய்ச்சலை தணிக்க கூடியதாக விளங்குகிறது. பரட்டை கீரை இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பரட்டை கீரை இலை, தேங்காய் எண்ணெய். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதில், அரைத்து வைத்திருக்கும் பரட்டை கீரையை சேர்க்கவும். சிறிது மஞ்சள் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இந்த தைலத்தை பயன்படுத்திவர புண்கள் ஆறும். தோல்நோய்கள் விலகிப்போகும். வெட்டுக்காயங்கள் ஆறி அடையாளம் தெரியாமல் மாறும்.

பரட்டை கீரையை அரைத்து மஞ்சள் சேர்த்து, முட்கள், இரும்பு, கண்ணாடி துகள் குத்திய இடத்தில் கட்டி வைத்தால் ஓரிரு நாட்களில் அவைகள் வெளியேறும். கால்சியம் குறைபாட்டினால் ஏற்படும் மூட்டு வலியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். அன்றாடம் ஒருபிடி முருங்கை கீரையை வதக்கியோ அல்லது தேனீராக்கியோ குடித்துவர மூட்டுகளுக்கு தேவையான கால்சியம், இரும்பு சத்து கிடைக்கிறது. இதனால் மூட்டுவலி விரைவில் குணமாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad