Type Here to Get Search Results !

ஐ.நாவின் புதிய தடை: 'அமெரிக்காவுக்கு மிகப்பெரிய வலி ஏற்படும்': வட கொரியா அச்சுறுத்தல்






ஐ.நா கவுன்சில் விதித்த புதியதடைகள் குறித்து கருத்து தெரிவித்த வட கொரியா, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அமெரிக்காவுக்கு மிகப்பெரிய வலி ஏற்படும் என்று அச்சுறுத்தியுள்ளது.

தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருக்கும் புதிய தடைகள் குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.-வுக்கான வட கொரிய தூதர், வட கொரியாவுடன் 'அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ மோதல்' ஏற்படுவதை அமெரிக்கா விரும்புகிறது என்று அந்நாட்டின் மீது குற்றம்சாட்டினார்.

வட கொரியாவை சமாளிப்பதற்கு அண்மையில் ஐ.நா கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தடை நடவடிக்கை ஆகியவை பெரிதாக ஒன்றுமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



தற்போது ஐ.நா. விதித்துள்ள புதிய தடைகள், தங்களின் அணு ஆயுத திட்டங்களுக்கு தேவைப்படும் எரிவாயு மற்றும் நிதி ஆகியவற்றை வட கொரியாவுக்கு கிடைக்கவிடாமல் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகும்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் தனது ஆறாவது அணு ஆயுத சோதனையை நடத்திய வட கொரியா நடத்திய சூழலில், இந்த புதிய தடைகள் அந்நாடு எண்ணெய் இறக்குமதி செய்வதையும், வட கொரியா ஆடைகள் ஏற்றுமதி செய்வதையும் தடுக்கும்.

தங்கள் நாட்டின் மீதான ஐ.நாவின் புதிய தடைகளை முற்றிலும் தான்புறந்தள்ளுவதாக குறிப்பிட்ட ஐ.நா.-வுக்கான வட கொரிய தூதரான ஹான் டே சோங், ஐ.நா. விதித்துள்ள புதிய தடை உத்தரவுகளை ஒரு சட்டவிரோதமான தீர்மானம் என்று வர்ணித்துள்ளார்.

அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட வரைவில் கூறப்பட்ட தீர்மானங்களின்படி நிலக்கரி, ஈயம் மற்றும் கடல் உணவு ஆகியற்றை வட கொரியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட கொரியா மீது ஒருமனதாக புதிய தடைகள் விதிக்கும் ஐ.நா. வாக்கெடுப்புக்கு ஆதரவாக சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த வாரத்தில் அமெரிக்கா முன்மொழிந்த சில கடுமையான தீர்மானங்களை அந்நாடு அகற்றிய பின்னர், இந்த புதிய தடைகளை ஐ.நா. கவுன்சிலில் நிறைவேற்ற கடந்த திங்கள்கிழமையன்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா முன்மொழிந்த கடுமையான தீர்மானங்களில் வட கொரியா மீது முழுமையான எண்ணெய் விலக்கு மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகள் ஆகியவை உள்ளடங்கும்.

அண்மையில், ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை தான்வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக வட கொரியாஅறிவித்தது.



மேலும், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் விதமாக தொடர்ந்து வடகொரியா அச்சுறுத்திய வண்ணம் உள்ளது.

ஐநா அமைப்பு விதித்துள்ள தடைகளையும், சர்வதேச அழுத்தத்தையும் மீறி அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ள வடகொரியா, அமெரிக்க பெருநிலப்பரப்பை சென்றடையக்கூடிய திறன் படைத்த ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.

முன்னதாக, செப்டம்பர் முதல் வாரத்தில் ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணைதான் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று வட கொரியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad