Type Here to Get Search Results !

தினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்!


`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ஒயிலாக வளர்ந்து நிற்கும் பேரீச்சம் பழ மரங்கள் அவற்றின் அழகுக்கும் தித்திப்பான பழங்களுக்கும் பேர்போனவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



பேரீச்சை... பனை வகையைச் சேர்ந்த இந்த மரத்தை அதன் இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. குறைந்த மூலதனத்தில் நிறைவான பலன் தரக்கூடிய இந்த பழத்தை சாப்பிடுவதற்கென நேரம் ஒதுக்கத் தேவையில்லை. ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுபோலச் சாப்பிடலாம். ஃப்ரெஷ்ஷாகவோ, உலர்த்தியோ எப்படிச் சாப்பிட்டாலும் ஏராளமான பலன்களை அள்ளித்தருகின்றது. உண்ணத்தகுந்தது மட்டுமல்ல பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியது.

மலச்சிக்கல் தீர்க்கும்!

'பேரீச்சை மலச்சிக்கலை உண்டாக்கும்' என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், உண்மையில் பேரீச்சை ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலைச் சரிசெய்ய, முதல்நாள் இரவே மூன்று பேரீச்சையை நீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் அவற்றின் சாற்றைக் குடிக்கலாம். பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது; கரையக்கூடியது. இது செரிமான மண்டலப் பாதையில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகும் இது செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.

இரும்புச்சத்து அதிகரிக்கும்!

பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத் தரும். ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.

இதயத்தை இதமாக்கும்!

இதில் நிறைந்துள்ள பொட்டாசியம், இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. பலவீனமான இதயத்துக்கு பலம் தரும். இதயத்துக்கு இம்சை தரக்கூடிய கெட்ட கொழுப்பைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

இன்ஸ்டன்ட் எனர்ஜி!

பேரீச்சையில் இயற்கையாகவே இனிப்பு அதிகம். சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் நிறைந்துள்ளன. மதிய நேரங்களில் ஏற்படும் மந்தநிலையை சீர்செய்து உடலுக்குத் தேவையான உடனடி எனர்ஜியைத் தரும். மேலும், இதில் நிறைந்துள்ள மாவுச்சத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.

எலும்பை வலுவாக்கும்!

இதில் உள்ள மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற நுண் சத்துகள் எலும்பை வலுவாக்கும். பேரீச்சையை உணவுடனும் சேர்த்துக் கொள்ளலாம். எலும்பின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோயில் இருந்து நம்மைக் காக்கிறது. குறிப்பாக, பெண்கள் பேரீச்சையை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.

நினைவாற்றல் பெருக்கும்!

இதில் உள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துகள் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. நரம்பு மண்டலச் செயல்பாட்டை அதிகரிக்கவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவும். ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது.

கூடுதல் பலன்கள்!

* தினமும் ஆறு பழங்களைச் சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும்.

* தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமடையும்.

* பேரீச்சையில் உள்ள கரிம சல்ஃபர், உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமையைச் சரிசெய்யும்.

* பெண்களுக்குச் சீரான மாதவிடாய்ச் சுழற்சியை ஏற்படுத்தும்.

* வயிற்றுப் புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது.


உண்ணும் முறை

* உலர்ந்ததாக அல்லது ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும், அவற்றை நன்குக் கழுவி சுத்தம் செய்து உண்ண வேண்டும்.

* உணவுகளுடனோ அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.

* பாதாம், வால்நட், உலர் திராட்சை, முந்திரி போன்றவற்றுடன் சேர்த்து ஜூஸாகவும் பருகலாம்.

* பேரீச்சை விதையை வறுத்துப் பொடி செய்து பனங்கற்கண்டுச் சேர்த்துக் காபியாகவும் குடிக்கலாம்.

* தினசரி இரண்டுவேளை பேரீச்சையை நட்ஸ்களுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad