Type Here to Get Search Results !

கத்தார் - ஐந்து முக்கிய தகவல்கள்



கத்தாருடன், அண்டை நாடுகள் தங்களது ராஜிய உறவுகளை துண்டித்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது.

ஆனால் பெரும்பாலும் கத்தார் பொதுவாக செய்திகளில் இடம்பெறுவதில்லை.
எனவே 2022 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது என்பதை தவிர அந்நாட்டை பற்றி உங்களுக்கு வேறென்ன தகவல்கள் தெரியும்?

எனவே இதோ கத்தாரை பற்றிய ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்

மக்கள் தொகையில் அதிகப்படியாக ஆண்கள்:


2.5 மில்லியன் மக்கள் இருக்கும் நாட்டில் வெறும் 7 லட்சம் பெண்கள் தான் உள்ளனர்.
இந்த அதிகபட்ச சமச்சீரின்மைக்கு காரணம், கத்தார் மக்கள் தொகையில் எழுந்த திடீர் எழுச்சியாகும். கத்தாரில் அதிகப்படியான குடியேறிகள், அதுவும் அதிகபட்சமாக இளம் ஆண்கள் உள்ளனர்.
கத்தாரில் வேலைவாய்ப்புகளில் உத்தரவாதம் இருப்பதால் சமீப வருடங்களாக மக்கள் அதிகமாக கத்தாருக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே 2003 ஆம் ஆண்டில் 7 லட்சமாக இருந்த மக்கள் தொகை 2016 ஆம் ஆண்டு 2.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

கத்தாரில் பெண் குடியேறிகளும் இருக்கிறார்கள்; ஆனால் 2022ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலக கோப்பை போட்டிகளுக்கான கட்டட வேலைகளில் ஈடுபடுவதற்காக அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் கத்தாருக்கு வந்துள்ளனர்.
அவர்கள் உலகமுழுவதிலிருந்து குறிப்பாக இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வருகிறார்கள். இஸ்லாம் மற்றும் கிறித்துவர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இந்துக்கள் உள்ளனர்.

வேலைக்கான உத்தரவாதம் மற்றும் நல்ல எதிர்காலம் இருப்பினும் வேலைக்காக வந்தவர்கள் மோசமான நிலைகளில் பணிபுரிய வற்புறுத்தப்படுவதாகவும் அதில் பாதிக்கும் அதிகமானோர் நாட்டைச் சுற்றியுள்ள தொழிலாளர் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கத்தார் தங்களது பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உறுதியளித்த போதிலும், பணியாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தலை சந்திப்பதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

லண்டனில் மிகப்பெரிய சொத்துகளின் உரிமையாளர்கள்?

கடந்த பத்து வருடங்களில், லண்டனில் இடங்கள் வாங்குவதில் கத்தார் அதிக கவனம் காட்டி வருகிறது.
லண்டனின் வானுயர்ந்த கட்டங்களான ஷராட், ஹாரட்ஸ், செல்சீ பராக்ஸ், ஒலிம்பிக் கிராமம் மற்றும் கேனரி வார்ஃப் ஆகிய கட்டங்கள் கத்தாருக்கு சொந்தமானதாக உள்ளது.

கத்தார், 35 பில்லியன் டாலரிலிருந்து 40 பில்லியன் டாலர் வரையில் பிரிட்டனில் முதலீடு செய்துள்ளதாக நாட்டின் நிதியமைச்சர் அல் ஷரீஃப் அல் எமாடி பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும் அடுத்த 3 அல்லது 5 வருடங்களில் மேலும் 5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவுள்ளதாகவும் எமாடி தெரிவித்தார்.

கலைகளுக்கு முக்கியத்துவம்

கத்தார் ஒரு பழமைவாத நாடாகக் கருதப்பட்டாலும் கடந்த சில வருடங்களாக பல கண்காட்சிகளுக்கு நிதி ஆதரவு வழங்கியுள்ளது. அதில் 2013ஆம் ஆண்டு மத்திய கிழக்கில் சர்ச்சைக்குரிய கலைஞரான டேமியன் ஹேர்ட்ஸின் பழைய கலைப் படைப்புகளின் முதல் கண்காட்சியை நடத்தியது.
அதே சமயத்தில் கத்தார் அரசரின் சகோதரி மற்றும் கத்தார் அருங்காட்சியகத்தின் தலைவருமான ஷேக்கா-அல் -மயசா -பிண்ட் -ஹமத் பின் -காலிஃபா -அல் -தனி `ஆர்ட் ரெவ்யூ` என்ற இதழ் வெளியிட்ட சக்தி வாயந்த 100 கலைப் பிரமுகர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றார்.
மேலும் இந்த கலைப் படைப்புகளை வாங்கி சேகரிக்க, அவர் 1 பில்லியன் டாலர் செலவிடுகிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு, டோஹாவில் இஸ்லாமிய கலைகளின் அருங்காட்சியகத்தை பெருமையுடன் திறந்து வைத்தது கத்தார்.
மூன்று கண்டங்கள் மற்றும் 1400 வருடங்கள் பழமையான, உலகில் உள்ள முக்கிய இஸ்லாமிய கலை பொருட்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

23 அடி வெண்கல கரடி பொம்மை ( டெட்டி பேர்)

கத்தாருக்கு கலையில் அதிக நாட்டமிருந்த போதிலும், அருங்காட்சியகத்தில் மட்டுமின்றி அது பொது இடங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
டோஹாவில் உள்ள ஹமத் சர்வதேச விமான நிலையத்தில், சென்ற எவரும் அங்கு விமான நிலையத்தின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் 23 அடி மஞ்சள் நிற டெட்டி பேரை ( கரடி பொம்மை) கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.

20 டன் எடையுள்ள வெண்கலத்தாலான அந்த பொம்மை ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த உர்ஸ் பிஷர் என்ற கலைஞரால் உருவாக்கப்பட்டது.
ஹமத் விமான நிலையத்தின் அதிகாரபூர்வ குறிப்புப்படி, அந்த கரடி பொம்மை விளையாட்டுத்தனத்தை சுட்டுக் காட்டுவதாகவும், அதை கண்டால் மனிதர்களுக்கு தங்களின் குழந்தைப்பருவம் அல்லது தங்களின் இல்லத்தில் உள்ள சிறப்பான பொருட்களின் நினைவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விளையாட்டு பொம்மை, 2011 ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஏலம் ஒன்றில் 6.8 மில்லியன் டாலர்கள் மதிப்பில் வாங்கப்பட்டது.

பணக்காரர்கள் வாழும் நாடு?

ஒரு சிறிய நாடு எவ்வாறு இவ்வளவு செலவுகளை செய்ய முடியும்?

அதற்கு காரணம் அதன் எண்ணெய், வாயு வளம் மற்றும் சில நல்ல முதலீடுகள் ஆகும்.
உலகிலேயே அதிகமான உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதத்தை கொண்ட நாடு கத்தாராகும்.
2016 ஆம் ஆண்டு கத்தாரின் உள்நாட்டு உற்பத்தி விகிதம், 1,29,700 டாலர்களாக இருந்தது என சி.ஐ.ஏவின் உலக நாடுகளின் குறிப்புகள் அடங்கிய தகவல் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சோமாலியாவின் தனி நபருக்கான உள்நாட்டு உற்பத்தி வெறும் 400 டாலர்களாக உள்ளது.
இருப்பினும் கத்தாரின் வளங்கள் சமத்துவமானதாக இல்லை. முன்னாள் அரசரான ஷேக்-ஹமத்-பின்-காலிஃபா-அல்-தனியின் சொத்து மதிப்பு 2.4 பில்லியன் டாலர்களாக இருந்த போதிலும் அங்கு குடிபெயர்ந்தர்களை பிபிசி நேர்காணல் செய்த போது அவர்கள் மாதம் வெறும் 350 டாலர்கள் மட்டுமே சம்பாதிப்பதாக தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad