பெங்களூரு: நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் அணியுடனான ஐபிஎல் 10வது சீசன் எலிமினேட்டரில், நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரை இறுதிக்கு (குவாலிபயர் 2) முன்னேறியது. பெங்களூரு, எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் கம்பீர், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் தொடக்க வீரர்கள் வார்னர், தவான் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 25 ரன் சேர்த்தனர். தவான் 11 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வார்னருடன் வில்லியம்சன் இணைந்தார். கொல்கத்தா வீரர்கள் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்க, ஐதராபாத் ஸ்கோர் மிக நிதானமாக உயர்ந்தது. வானிலை மற்றும் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் தடுமாறினர்.
வார்னர் - வில்லியம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்த நிலையில், அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிழந்தது பின்னடைவை கொடுத்தது. வார்னர் 37 ரன், வில்லியம்சன் 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த யுவராஜ் 9, விஜய் ஷங்கர் 22, நமன் ஓஜா 16 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்தது. இதைத் தொடர்ந்து, 129 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்க இருந்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது.
நீண்ட தாமதத்துக்கு பின்னர் ஆட்டம் தொடங்கிய நிலையில், கொல்கத்தா 6 ஓவரில் 48 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அந்த அணி 5.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 48 ரன் எடுத்து வென்று அரை இறுதிக்கு (குவாலிபயர் 2) முன்னேறியது. கேப்டன் கம்பீர் 19 பந்தில் 32 ரன் விளாசினார். நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஏமாற்றத்துடன் வெளியேறியது. குவாலிபயர் 2ல் நாளை மும்பை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
Post a Comment
0 Comments