புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஆலோனை நடத்தினார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிகிறது. இதையடுத்து விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவான வேட்பாளர் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள், பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார்.
இந்த சந்திப்புக்குப்பின் மம்தா அளித்த பேட்டியில், ‘‘ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பெயர்கள் குறித்து ஆலோசிக்கப்படவில்லை. ஆனால் இதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒருமனதான முடிவு எடுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஒருமித்த கருத்துடன் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை அரசும் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ப.சிதம்பரம் மற்றும் லாலு தொடர்பான இடங்களில் நடந்த சோதனை குறித்து பேசிய மம்தா, ‘‘இது திட்டமிட்ட மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்த சோதனை’’ என்றார்.
Post a Comment
0 Comments