ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனியை அகற்றுவதில் தனக்கு பங்கிருப்பதாக எழுந்த செய்திகளை ஸ்டீபன் பிளெமிங் கண்டிப்புடன் மறுத்துள்ளார்.
முன்னதாக தோனி கேப்டன்சியிலிருந்து அகற்றப்பட்ட போது, “2016 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளை மிகவும் நெருக்கமாக வந்து தோற்றோம். தோனியால் ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க இயலவில்லை, அதனால்தான் அவரை கேப்டன்சியிலிருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது” என்று பிளெமிங் கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால் பிளெமிங் தற்போது தான் கூறியதாக வெளிவந்த இந்த மேற்கோள் ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “இது மிகவும் முட்டாள்தனமான செய்தி. ஆட்டத்தின் மிகப்பெரிய பினிஷர் மீது அழுத்தம் ஏற்படுத்தக்கூடியதாகும், இது ஜோடிக்கப்பட்ட மேற்கோள்” என்றார்.
ஆனால் அனைத்து யூகங்களையும் முறியடிக்கும் விதமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், தனக்கு தோனி பலவிதங்களிலும் உதவிவருகிறார் என்று குறிப்பிட்டதும் நினைவுகூரத் தக்கது. ஆட்டத்தின் முக்கியக் கட்டங்களில் தோனி களவியூகம், பந்து வீச்சு மாற்றம் குறித்து ஸ்மித்துக்கு ஆலோசனை வழங்குவதும் அது உடனே செய்யப்பட்டு அதனால் புனே அணி சில வெற்றிகளைப் பெற்றதும் புனே போட்டிகளைப் பார்த்த ரசிகர்களுக்குப் புரிந்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments