உலக பவுலர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் 360 டிகிரி பேட்ஸ்மென் என்று அறியப்படும் ஏ.பி.டிவில்லியர்ஸ், தனக்கு இந்திய கிரிக்கெட் மேலும் மேலும் வலுவடைந்து வருவது பயமூட்டுவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
“நான் இந்திய கிரிக்கெட்டைப் பார்த்து பயப்படுகிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டினால் இந்திய கிரிக்கெட் மேலும் மேலும் வலுவடைந்து கொண்டே வருகிறது.
உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக ஏற்படக்கூடிய அழுத்தங்களை, நெருக்கடிகளை சவாலுடன் சந்திக்கும் இளம் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் மிகப்பெரிய அனுபவம் பெற்று வருகின்றனர்.
மற்றெந்த நாடுகளிலும் இது இல்லை. பிற நாடுகள் மெதுவாகவே முன்னேறி வருகின்றனர், அவர்களும் இந்தியாவை எட்டிப்பிடிப்பார்கள் ஆனால் இப்போதைக்கு இந்தியா உச்சத்தில் இருப்பதாகவே கருதுகிறேன்.
இந்தியாவில் நிறைய, பெரிய கிரிக்கெட் திறமைகள் உள்ளன, எப்போதும் சிறந்த இளம் வீரர்கள் வந்தவண்ணமாக உள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் இத்தகைய சிறந்த வீரர்கள் கையில் உள்ளது” என்றார்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், பவுலிங்கில் பேசில் தம்ப்பி, குருணால் பாண்டியா, மும்பையின் நிதிஷ் ரானா, ஹைதராபாத்தின் சித்தார்த் கவுல் என்று புதிய திறமைகள் அபாரமாக ஆடியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments