Type Here to Get Search Results !

சிரிப்பு, தூக்கம், பேச்சு, கோபம்... இவற்றை அதிகம் செய்பவரா நீங்கள்!?




``பத்து வருஷம் கழிச்சு இந்த உலகம் பேப்பர் ஃப்ரீ என்விரோன்மென்ட்டா மாறிடும்’’ என்று  ரயில் ஸ்நேகிதர் ஒருவர் ஒருமுறை சொல்லியிருந்தார். அது, முகநூலில் சில தத்துவங்களைப் படித்தபோது நினைவுக்கு வந்தது. கூடவே அவர், ``இப்போதான் எல்லாத் தகவல்களும் நெட்லயே உடனுக்குடன் வந்துருதே... அதுல இல்லாத தகவல்களே இல்லை’’ என்றும் சொல்லியிருந்தார். அவர் சொன்னது என்னமோ உண்மைதான். ஆனால், இப்போது யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்தியாக மாற்றி வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பரப்பிவிடலாம் என்கிற அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. அதே நேரத்தில், நாம் சரியான தகவல்களைத்தான் ஷேர் செய்கிறோமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அப்படிப்பட்ட தகவல்களில் இப்போது வலைத்தளங்களில் அதிகமாகப் பரவிவரும் உணர்ச்சிகள் தொடர்பான தத்துவங்களும் அடங்கும். இவை எந்த அளவுக்கு உண்மை? உதாரணமாக, ஐந்து தத்துவங்களை உளவியல்ரீதியாகப் பார்க்கலாம்...

சிரிப்பு

`அதிகம் சிரிப்பவர்கள், அதிகம் தனிமையில் வாடுபவர்கள்!’

`எண்டார்பின்’ (Endorphin) அப்படிங்கிற கெமிக்கல் அளவுக்கதிகமா சுரக்குறதுதான் சிரிப்புக்குக் காரணம். இந்த கெமிக்கலை 'ஸ்ட்ரெஸ் ஃபைட்டர்'னு (Stress fighter) சொல்லலாம். எப்போ நமக்கு ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கோ, அப்போ இந்த எண்டார்பின் அதிகமாச் சுரந்து, ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கும். இந்தச் செயல்முறையை 'ஆப்டிமிசம் பயாஸ்'னு (Optimism bias) சொல்றாங்க. மொக்க ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரிக்கிறது, நம்மைச் சுத்தி ஜோக்கடிக்க யாருமே இல்லாதப்போ, தன்னைத் தானே கலாய்ச்சு சிரிச்சுக்கிறது... இந்த மாதிரி நடந்துக்கிறவங்க கண்டிப்பா தனிமையில இருக்குறவங்கதான். அவங்களை நல்லபடியா கவனிச்சுக்கணும். ஏன்னா, அவங்க தவறான பாதையில போறதுக்கான வாய்ப்புகள் அதிகம். இயல்புக்கு மாறாக நடந்துகொள்கிறவர்களாக இருப்பாங்க.

தூக்கம்

`அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்!’

தூக்கம் சோகத்துல இருக்குறவங்களுக்கு மட்டும் இல்லை; மனநலக் குறைபாடு உள்ளவங்க எல்லாருக்கும் இந்தப் பிரச்னை கண்டிப்பாக இருக்கும். இரவுத் தூக்கம் மொத்தம் நாலு படிநிலைகள்ல நடக்கும். முதல் நிலை, மிதமான உறக்கம்; ரெண்டாவது நிலையில் மூளையின் இயக்கங்கள் கட்டுப்படுத்தப்படும்; மூணாவது நிலையில் டெல்டா அலைகள் தோன்றி, நம்மைக் கனவு உலகத்துக்கு அழைத்துச் செல்லும். 'எனக்கு கனவெல்லாம் வராது’னு யாராவது சொன்னா, இனி நம்பாதீங்க. நாம காலையில விழிக்கும்போது அந்தக் கனவை மறத்திருப்போம். அவ்வளவுதான். ஆக, நாம எல்லாருமே தினம் தினம் கனவு காணுறோம் அப்படிங்கிறதுதான் உளவியலின் நிதர்சன உண்மை. நாலாவது நிலைதான் ஆழமான தூக்கம். சோகத்துல இருக்குறவங்களுக்கு டெல்டா அலைகள் சும்மாவே அதிகமா சுரக்கும். அப்போ சோகத்துக்கும். தூக்கத்துக்கும் நீங்களே தொடர்புபடுத்திப் பாருங்க... உங்களுக்கே உண்மை புரியும்.

அதிகமாக பேசுபவர்கள்

`வேகமாக அதே நேரம் அதிகமாகப் பேசுபவர்கள், அதிக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்!’

`குறைகுடம் கூத்தாடும், நிறை குடத்தின் நீர் தளும்பாது’ன்ற கான்செப்ட்தான் இங்கே. அதிகமாகப் பேசுறவங்க, வெளிப்படையாக இருக்குறவங்க. அதாவது 'ஓப்பன்னெஸ் டு எக்ஸ்பீரியன்ஸ் பர்சனாலிட்டி' (Openness to experience personality). இதுல அதிகமாகச் சிக்குறது பெண்கள்தான். காலையில எழுந்த உடனே கம்ப்யூட்டர்ல லோடு ஆகுற மாதிரி, நாம அந்த நாளைக்குப் பேசப் போற வார்த்தைகள் மூளையில லோடு ஆகிடும். இந்த மாதிரி பெண்களுக்கு ஒரு நாளைக்கு 20,000 வார்த்தைகளும், ஆண்களுக்கு வெறும் 5,000 வார்த்தைகளும் லோடு ஆகும். ஸோ, அதிகமாகப் பேசுறவங்க கண்டிப்பா ஓட்டை வாய்தான். 'ரகசியம்' எல்லாம் இவங்ககிட்டே சான்ஸே இல்லை.

அழுகை

`அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்!’

``நீ பையன்... பொண்ணு மாதிரி அழக் கூடாது’’ அப்படினு சொல்லிச் சொல்லியே வளர்க்குறதால, பசங்க எல்லாரும் அழுகையை அடக்கிவைக்கப் பழகிட்டாங்க. சிக்மண்ட் ஃபிராய்டு, அழுகையை `டிஃபென்ஸ் மெக்கானிசம்’னு (Defence Mechanism) சொல்றாரு. அதாவது, இது நம்மை நாமே ஆறுதல்படுத்திக்குறதுக்கான ஒரு நல்ல ரிலாக்சேஷன் டெக்னிக். ஆக, பலமானவர்கள், பலவீனமானவர்கள் எல்லாருக்கும் அழுகை சர்வ சாதாரணமானதுதான். இதுக்கும் மன பலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கோபம்

`சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்!’

இன்டெர்மிட்டேன்ட் எக்ஸ்ப்லோஸிவ் டிஸ்ஆர்டர் (Intermittent explosive disorder) - இந்தப் பாதிப்பு இருக்குறவங்கதான் அளவுக்கு அதிகமா கோபப்படுவாங்க. இது அன்புக்காக ஏங்குறதெல்லாம் இல்லை. தான் செஞ்ச தவறுகளை மறைக்குறதுக்காகக் கோபம் தாறுமாறா வரும். அப்படி செஞ்ச தவறுகளை மறைக்க முடியாத பட்சத்துல அந்நியன் மாதிரி மாறிடுறாங்க. அன்பானவர்கள்கிட்ட செல்லமாகக் கோபப்படுறது வேணும்னா, அன்புக்காக ஏங்குறதா இருக்கலாம். அது தவிர இந்தத் தத்துவம் உளவியல்ல அதிகமாக விவாதிக்கவேண்டிய விஷயம்தான்.

இப்படி உணர்ச்சிகள் அனைத்தையும் ஒரு வரையறைக்குள் கொண்டு வர முடியாது என்பதுதான் உளவியலின் கருத்து. சரியான நேரத்தில், சரியான உணர்ச்சிகளை அந்தந்த இடத்துக்கு ஏற்ற மாதிரி வெளிப்படுத்துவதுதான் நம் ஆளுமைப் பண்பையும் திறம்பட மேம்படுத்தும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad