Type Here to Get Search Results !

இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்: மல்யுத்தம் முதல் ஆக்கிவரையில், விளையாட்டு ரீதியான உறவும் முடிந்தது

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் விளையாட்டு ரீதியிலான உறவும் முடிவுக்கு வந்தது.

புதுடெல்லி,



காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த இந்திய படையினர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 1–ந் தேதி தாக்குதல் நடத்தினர். அதில் பலியான 2 இந்திய வீரர்களின் உடல்களை அவர்கள் சிதைத்து விட்டு சென்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் விவகாரத்தில் தன்னுடைய கொள்கையில் நிலையாக இருக்கும் மத்திய அரசு பேச்சுவார்த்தையும், பயங்கரவாதமும் ஒன்றாக பயணிக்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆயுதமாக கொண்டு பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைத்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரும் வரையில் பேச்சுவார்த்தை என்பது கிடையாது என மோடி அரசு நிலையாக உள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளை இந்தியாவிற்கு ஊருவ செய்து மறைமுக போரில் ஈடுபடுவது காரணமாக இருநாடுகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை.

இந்நிலையில் பிற விளையாட்டு ரீதியிலான உறவும் முடியும் நிலைக்கு வந்துவிட்டது. டெல்லியில் நடைபெற உள்ள 22-வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துக்கொள்ள பாகிஸ்தான் மல்யுத்த வீரர்களுக்கு இந்தியா விசா வழங்கவில்லை என பாகிஸ்தான் குற்றம் சாட்டிஉள்ளது. மேலும் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன செயலாளர் ஷாபாஸ் அகமது, மலேசியாவில் இப்போது நடைபெற்று வரும் அஸ்லான் ஷா ஆக்கி போட்டிகளில் இந்தியாவின் நெருக்கடி காரணமாகவே பாகிஸ்தான் அணி விலக்கப்பட்டது என குற்றம் சாட்டினார்.

இந்திய விளையாட்டு துறை மந்திரி விஜய் கோயல் தகவல்படி இந்திய அரசு இருநாடுகள் இடையிலான விளையாட்டு ரீதியிலான உறவை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. “பயங்கரவாதம் மற்றும் விளையாட்டுக்கள் ஒன்றாக பயணிக்க முடியாது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விளையாட்டு ரீதியிலான உறவானது சுமூகமாகும் என்பது, பாகிஸ்தான் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கு உதவிசெய்வதை நிறுத்திய பின்னர்தான். இந்தியா இப்பிரச்சனையை மிகவும் முக்கியமானதாக எடுக்கிறது,” என விஜய் கோயல் கூறிஉள்ளார் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad