சென்னை : பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இந்த சட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி பினாமிகளின் பெயர்களில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை பரிமாற்றம் செய்வது கிரிமினல் குற்றமாகும். சட்டத்தை மீறுவோருக்கு சொத்துகளை பறிமுதல் செய்வதோடு அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க முடியும். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை வரை சுமார் ஆறு மாதத்தில் பண பரிமாற்றம், நிலம்,குடியிருப்பு, ஆபரணங்கள் என்று இதுவரை 400க்கும் மேற்பட்ட பினாமி சொத்துகள் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மொத்தம் 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது. அவற்றில் கொல்கத்தா,மும்பை, டெல்லி, குஜராத் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் மட்டும் ரூ.530 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சிக்கியுள்ளன.இதனிடையே பினாமி பெயர்களில் ரூ.1000 கோடி ரூபாய் சொத்துகளை சேர்த்ததாக எழுந்த புகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகளுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த வாரம் லாலு பிரசாத் யாதவின் மகன் மற்றும் மகள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து மகள் வீட்டில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments