Type Here to Get Search Results !

பாகுபலிக்கு முடிவில்லை!



இந்திய சினிமாவில் பிரம்மாண்டத் துக்கான பிராண்டாக ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது ‘பாகுபலி' திரைப்படம். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றி, 2-ம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்படப் பலர் நடித்திருக்கும் இப்படத்தைப் பற்றிய சிறப்பு முன்னோட்டம் இது.


> முதல் பாகத்தில் பாகுபலி, கட்டப்பா, சிவகாமி, அவந்திகா, தேவசேனா போன்ற கதாபாத்திரங்களை இயக்குநர் அறிமுகப்படுத்தியிருந்தார். அனுஷ்கா கதாபாத்திரத்தின் பின்னணி என்ன, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு `பாகுபலி 2'-ல் விடை கூற இருக்கிறார்.

> இப்படத்துக்காக 120 நாட்கள் ஒரு போர்க்களக் காட்சியைப் படம்பிடித்திருக்கிறார்கள். அதில் படப்பிடிப்புக்கு இடையே 2 நாட்கள் மட்டுமே இடைவெளி விட்டுள்ளார்கள். இந்தக் காட்சிகளுக்குத்தான் கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தன.

> முதல் பாகத்தில் மகிழ்மதி சம்ராஜ்ஜியத்தைக் காட்டினார் ராஜமெளலி. இரண்டாம் பாகத்தில், அனுஷ்கா ராணியாக இருந்து ஆட்சி செய்யும் குந்தலா சாம்ராஜ்ஜியத்தைக் காட்டவிருக்கிறார்கள். 2-ம் பாகத்தின் ட்ரைலரில் கடலும் மலையும் சூழ்ந்த இடத்தில் மலையைச் செதுக்கி உருவாக்கப்பட்டதுபோல் தோற்றமளிக்கும் பிரம்மாண்ட யானை சிற்பம் கொண்ட நீர்வழி அரண்மனை நுழைவாயில் வழியே படகு செல்வது போன்ற காட்சி குந்தலா சம்ராஜ்யக் காட்சிதான்.

> முதல் பாகத்தில் அனுஷ்கா சம்மந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சமாகவும், தமன்னா சம்மந்தப்பட்ட காட்சிகள் அதிகமாகவும் இருந்தன. அவை அப்படியே மாறி இரண்டாம் பாகத்தில் உல்டாவாக இருக்கும் என்கிறது படக் குழு.

> படத்தின் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார். இவர் படத்தில் இடம்பெறும் போர் காட்சிகள் எப்படியெல்லாம் வர வேண்டும் என்பதை `பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’, `எக்ஸ் மேன்' போன்ற படங்களின் சண்டைக் காட்சிகளில் பணிபுரிந்த ஜான் கிரிஃபித்தைஐ வைத்து முன்னோட்டமாகச் செய்து பார்த்துள்ளார்.

> கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்விக்கான விடை `பாகுபலி 2'வில் தெரியவுள்ளது. அந்தக் காட்சி படத்தின் ஆரம்பக் காட்சியாக இருக்காது என்றும், படத்தின் மிக முக்கியமான இடத்தில் வரும் என்றும் இயக்குநர் தெரிவித்தார்.

> 2-ம் பாகத்தில் பிரபாஸ் - ராணா மோதும் காட்சிதான் பிரதானம் என்பதால் கிளைமேக்ஸ் காட்சியாகப் பிரம்மாண்டமான சண்டைக் காட்சியைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதில் இருவருமே பல்வேறு சாகசங்கள் செய்திருக்கிறார்கள். அந்த ஒரு காட்சியின் கிராஃபிக்ஸுக்காக மட்டும் சுமார் 6 மாதங்கள் பணியாற்றியிருக்கிறார்கள்.

> `பாகுபலி'யின் இரண்டு பாகங்களையும் மொத்தமாகப் படமாக்கிவிட்டு, முதல் பாகம் முடிந்தவுடன் 2-ம் பாகத்துக்கான இறுதிக் கட்டப் பணிகளைச் செய்யலாம் என்ற முன்முடிவுக்குப் பிறகே படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், பணப் பற்றாக்குறையால் முதல் பாகத்தை வெளியிட்டு, அதற்குப் பிறகு 2-ம் பாகத்துக்கான போர், சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். முதல் பாகத்தின் படப்பிடிப்பின்போதே சுமார் 40% சதவீதம் அளவுக்கு 2-ம் பாகத்துக்கான காட்சிகளைப் படம்பிடித்துவிட்டார்கள்.

> `பாகுபலி 2'-ல் போர்க்களக் காட்சிகள் போக, மீதமுள்ள காட்சிகள் அனைத்துமே செட்டில் எடுக்கப்பட்டவைதான். 'பாகுபலி' முதல் பாகம், இரண்டாம் பாகம் எனச் சேர்த்து மொத்தமாக 613 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.

> இப்படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் 30 ஸ்டூடியோக்களில் நடைபெற்றுவந்தன. படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு விட்டாலும், இன்னும் சில கிராஃபிக்ஸ் காட்சிகளின் வேலை நடந்துகொண்டேயிருக்கின்றன என்கிறது படக் குழு. அக்காட்சிகள் அனைத்தும் சேர்க்கப்பட்டபின்னரே தணிக்கைக்கு விண்ணப்பிக்க இருக்கிறார்கள்.

> இந்தியாவில் `தூம் 4' , `பேங் பேங்' ஆகிய படங்களைத் தொடர்ந்து `பாகுபலி 2' படத்தை ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

> இந்தியாவில் சுமார் 80 சதவிகித திரையரங்குகளில் `பாகுபலி 2' வெளியாகும் என்று படக் குழு தெரிவிக்கிறது.

> `பாகுபலி' கதையைத் தொடங்கும்போது என்ன எழுதினார்களோ அது `பாகுபலி 2' படத்தோடு முடிந்துவிடும். ஆனால், படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களுக்குப் பின்னணி தெரிய வேண்டும் என்று நிறைய எழுதியிருக்கிறார்கள். அக்கதைகள் அனைத்துமே மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதால் அவற்றை ரசிகர்களுக்குச் சொல்லத் தீர்மானித்துள்ளது படக்குழு. ஆனால் திரைப்படமாக இல்லாமல் தொலைக்காட்சித் தொடர்கள், அனிமேஷன் தொடர்கள், நாவல்கள் எனப் பல இவை வடிவில் வெளிவரயிருக்கின்றன.

> `பாகுபலி 2' ட்ரெய்லர் இந்தியாவில் உருவான வீடியோக்களில் அதிகமுறை பார்க்கப்பட்ட ஒன்றாகச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ட்ரெய்லர் வெளியான முதல் வாரத்திலேயே சுமார் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad