Type Here to Get Search Results !

கோலிக்கும் எனக்கும் போட்டி இருந்து வருகிறது சொல்கிறார் ருபெல் ஹொசைன்





இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும், நட்சத்திர வீரராகவும் திகழ்ந்து வருபவர் விராட் கோலி. தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் மொத்தம் 8 போட்டிகளில் விளையாடினார். இதில் ஒரு போட்டியைத் தவிர மற்ற ஏழு போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் குவித்தார். ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடியதால் இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. விராட் கோலி ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய பின்னர் இந்திய அணிக்கு அறிமுகமானார்.  இதேபோல் வங்காள தேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இருப்பவர் ருபெல் ஹொசைன். வங்களா தேச அணியில் முக்கிய பந்து வீச்சாளரான இருந்தாலும் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில்தான் கிரிக்கெட் உலகிற்கு தெரிய ஆரம்பித்தார்.  இங்கிலாந்தை வீழ்த்தி வங்காள தேசம் காலிறுதிக்கு முன்னேற முக்கிய பங்கு வகித்தார். மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதியில் இந்தியா- வங்காள தேசம் அணிகள் மோதின. இதில் விராட் கோலியை 3 ரன்னில் வீழ்த்தினார். அப்போது கோலி அமைதியாக வெளியேறினார். ஆனால், ருபெல் ஹொசைன் ஆக்ரோஷமாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரும் ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய பின்னர் வங்காள தேச அணிக்கு அறிமுகமானார்.  தற்போது விராட் கோலியை அவுட்டாக்கியது பற்றி ஹொசைன் கூறுகையில் அவரை நான் ஜூனியர் உலகக்கோப்பை தொடரில் இருந்தே வீழ்த்தி வருகிறேன் என்று கூறியுள்ளார்.  விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியது குறித்து ருபெல் ஹொசைன் கூறுகையில் ‘‘நாங்கள் இருவரும் நீண்ட வருடங்களாக நேருக்கு நேர் மோதி வருகிறோம். 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு முறை அவரை அவுட்டாக்கியுள்ளேன். அதன்பிறகு சர்வதேச போட்டியில் அவரை வீழ்த்தியுள்ளேன். அவரை சொல்லிவைத்து நான் அவுட்டாக்குவேன் என்று சொல்ல வரவில்லை. என்றாலும், அவருக்கு எதிரான கடும் நம்பிக்கையுடன் பந்து வீசுவேன்.  ஆடுகளத்தில் அவர் மிகப்பெரிய அளவில் ஆக்ரோஷமாக காணப்படுவார். ஆனால், மைதானத்திற்கு வெளியே கோலி சிறந்த மனிதர். நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வோம். உலகக்கோப்பை காலிறுதி போட்டி முடிந்த பின்னர் அவர் எங்கள் அறைக்கு வந்தார். அங்கு நாங்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவருக்கு எதிராக பந்து வீசும்போது மாறுபட்ட உணர்வை நான் பெறுவேன். எனது பந்தை அடித்து விளையாட நான் அனுமதிக்கமாட்டேன். மாறாக அவரது விக்கெட்டை வீழ்த்த விரும்புவேன். எதுவாக இருந்தாலும், கடந்த ஜூனியர் உலகக்கோப்பை தொடரில் இருந்து அவரை போட்டியில் சந்திக்கும்போது எனக்கு ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் எழுந்துள்ளது’’ என்றார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad