Type Here to Get Search Results !

"பாடி ஸ்பிரே"யரால் வரும் "எமன் " !




‘‘நறுமணப்பொருட்களை பூஞ்சை, பாக்டீரியா போன்றவற்றின் பாதிப்பிலிருந்து காப்பாற்றவும், அதிக காலத்துக்குக் கெட்டுப்  போகாமல் இருக்கவும், பயன்படுத்தியவுடன் கரைந்து விடாமல் நீடித்த நேரம் செயல்படவும், விதவிதமான நிறங்களுக்காகவும்  பல்வேறு விதமான ரசாயனங்கள் பயன் படுத்தப்படுகின்றன. சோப், ஷாம்பு, பவுடர், பாடி ஸ்பிரே, ரூம் ஸ்பிரே என அன்றாட  வாழ்க்கையில் நாம் பயன்படுத்துகிற நறுமணப் பொருட்களின் உற்பத்திக்காக 5 ஆயிரத்துக்கும் அதிக ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் 20 சதவிகித ரசாயனங்கள் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மிக அபாயகரமானவை என நிரூபிக்கப்பட்டவை. International nomenclature of cosmetic ingredients அமைப்பு  உலக அளவில் நறுமணப்பொருட்களில் உள்ள ரசாயனங்களுக்கு பொதுவான பெயரையே பயன்படுத்த வேண்டும் என  வலியுறுத்துகிறது. ஆனால், இதை எந்த நிறுவனங்களும் பின்பற்றுவதில்லை. மருந்து, மாத்திரைகளில் கூட அதை உற்பத்தி  செய்வதற்கென பயன்படுத்தப்பட்ட மூலக்கூறுகள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கும்.

எந்த ஒரு பொருளானாலும், அது எதிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை  நுகர்வோருக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் அனைத்து நிறுவனங்களும் தங்களது உற்பத்திப் பொருளின் மூலப் பொருட்களை வெளிப்படையாக அறிவிக்கின்றன. செயற்கை நறுமணப்பொருட்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. ‘ஒவ்வொரு  நிறுவனத்தின் தயாரிப்புகளும் அதற்கென தனித்துவமான வாசனையைக் கொண்டிருக்கும். அதனால் தங்களது தொழில்  ரகசியத்தை வெளியே சொல்ல முடியாது’ என்கிற அடிப்படையில் அவை தாங்கள் பயன்படுத்தும் ரசாயன மூலக்கூறுகளை  வெளியே அறிவிப்பதில்லை.

ஆரம்ப காலங்களில் Balsam of peru என்கிற தாவரத்திலிருந்தும், musk deer என்று சொல்லக்கூடிய கஸ்தூரிமான்,  புனுகுப்பூனை மற்றும் சில வகை எலி மற்றும் ஆமைகளிலிருந்து நறுமணப்பொருட்களுக்கான மூலக்கூறுகள் எடுக்கப்பட்டன.  இதன் காரணமாக தொடர்புடைய உயிரினங்களின் வேட்டை அதிகரித்து உயிரியல் சூழலை சிதைத்ததால் உலக அளவில் இந்த  வேட்டைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின் கஸ்தூரிமானிலிருந்து கிடைத்த musk மற்றும்  தாவர வகையான balsam of peru ஆகியவற்றின் மூலக்கூறை செயற்கையாக உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர்.

பலவிதமான muskகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அவற்றில் Aromatic nitromusk, Polycyclic musk  ஆகியவற்றால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிக அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நறுமணப்பொருட்களை  பதப்படுத்துவதற்காக paraben எனும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. மேலைநாடுகளில் இந்த ரசாயனத்துக்கு எதிரான  விழிப்புணர்வு பெருமளவில் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் paraben free பொருட்களுக்கென தனியொரு சந்தையே இருக்கிறது.  மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களை ஆய்வு செய்யும்போது paraben இருப்பது அறியப்பட்டுள்ளது.

செயற்கையாக நறுமணம் அளிக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் மூலம் இது போன்று பல விளைவுகளைச் சந்திக்க  நேரிடும். அதனால், வாசனையற்ற (Fragrance free) பொருட்களைப் பயன்படுத்தலாம். Unscented என்று  குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களில் கூட palsam of peru இருப்பதால், அதையும் தவிர்ப்பது நல்லது. அக்குள் பகுதியில்  வெள்ளையாக தேமல் போன்று இருப்பதாக ஒரு இளைஞர் என்னிடம் வந்தார். அவரிடம்  பேசிய பிறகு டியோடரன்ட் பயன்படுத்தியதற்கு பிறகுதான் இப்படி நிகழ்ந்தது என்றார்.

உடனே டியோடரன்ட் பயன்படுத்துவதை நிறுத்திவிடச் சொல்லி விட்டு சிகிச்சை அளித்தேன். டியோடரன்டுக்கு பதிலாக ஜவ்வாது  போன்ற இயற்கையாக நறுமணம் தரக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தும்போது இவ்வாறான பிரச்னைகளை எதிர்கொள்ளத்  தேவையில்லை. தினம் இரு முறை குளித்து, நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தாலே செயற்கை நறுமணப்  பொருட்களுக்கான தேவை இருக்காது’’ என்கிறார் வானதி  திருநாவுக்கரசு.

செயற்கை நறுமணப்பொருட்களால் ஏற்படும் சுவாச ரீதியிலான பாதிப்புகள் குறித்து விளக்குகிறார் சுவாச நோய் நிபுணர்  சீனிவாசன்... ‘‘ஒவ்வொரு மனிதரின் உடல்நிலையும் மாறுபட்டது. எல்லோருக்கும் சுவாசக் கோளாறுகள்  இருக்காது,  கோளாறு  இருப்பவர்களையும் கூட அதிக   கோளாறு, குறைவான கோளாறு உள்ளவர்கள்  என  இரு வகையாகப்   பிரிக்கலாம்.  ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களுக்கு வாசனைத் திரவியங்கள் (சென்ட், பாடி ஸ்பிரே, ரூம் ஃப்ரெஷ்னர்)  என்றில்லை, சின்ன தூசி கூட பாதிப்பு ஏற்படுத்தும். பெட்ஷீட்டில் இருக்கும் குறைந்தபட்ச தூசி கூட அவர்களுக்கு சுவாசப்  பிரச்னையை ஏற்படுத்தலாம். அது எந்த அளவு பிரச்னை ஏற்படுத்தும் என்பது அவரவர் உடல்நிலையை பொறுத்தது.

ஒரு சிலருக்கு வாசனை திரவியங்கள் பயன்படுத்தியவுடன் அதில் உள்ள ரசாயன மூலக்கூறுகள் மூக்கில் உள்ள nasal mucus  என்கிற பகுதியை தாக்கும் போது ஏற்படுகிற ஒவ்வாமையால் சில நிமிடங்களுக்கு தொடர் தும்மலும்  மூக்கொழுகுதலும்  ஏற்படும். ஒவ்வாமையின் அளவு அதிகம் உள்ளவர்களுக்கு நெஞ்சுப்பிடிப்பு  ஏற்படும். நறுமணப்பொருட்களிலிருந்து வெளியேறும்  ரசாயன மூலக்கூறுகள் 5 மில்லி அளவுக்கு குறைவாக இருக்கும்போது நுரையீரலின் அடிப்பாகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். 5  மில்லிக்கும் அதிகமாக வெளியாகும் நிலையில் நுரையீரலின் ஒரு பகுதியான bronchial mucosaவின் அடியில் உள்ள  மென்மையான திசுக்களில் சென்று ஒட்டிக்கொண்டு, அதனுள் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால் bronchial congestion எனப்படும் மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும்.  ஒவ்வாமை  மற்றும் ஆஸ்தக் கோளாறுகள் இருப்பவர்கள் பவுடர் உள்ளிட்ட ரசாயன நறுமணப் பொருட்களை அறவே  தவிர்க்க வேண்டும். சுவாசக்கோளாறுகள் இல்லாதவர்கள் கூட, அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும்போது சுவாசப்  பிரச்னைகளிலிருந்து காத்துக் கொள்ள முடியும்’’ என்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad