Type Here to Get Search Results !

ஆக்ரோஷ ஆட்டம் தொடரும்: கேப்டன் கோஹ்லி உறுதி !



‘‘இந்திய அணியின் ஆக்ரோஷ ஆட்டம் தொடரும். எங்களை பொறுத்தவரை டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்வது என்பது கடைசி விருப்பமாக தான் இருந்தது. வெற்றியை விட வீரர்களுக்கு வேறு எந்த வழியிலும் உற்சாகம் கிடைக்காது,’’ என, கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்தார்.
இந்திய அணி டெஸ்ட் அரங்கில் முதல் போட்டியில் வீழ்ந்து, பின் தொடரை கைப்பற்றியது. இது, 3வது முறையாக அரங்கேறியுள்ளது. இதற்கு கோஹ்லி வியத்தகு முறையில் வழிநடத்தியதே முக்கிய காரணம்.

இது குறித்து கோஹ்லி கூறியது:
இலங்கையில் 22 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளோம். இது, இளம் இந்திய வீரர்களுக்கு கிடைத்த கம்பீரமான வெற்றி. தவிர, இந்திய அணி முதல் டெஸ்டில் தோற்று, பின் தொடரை வென்று புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளோம். எனது டெஸ்ட் வாழ்வில் சந்தித்த சிறப்பான ஆட்டத்தில், புஜாராவின் செயல்பாடும் இடம்பிடித்துள்ளது. புவனேஷ்வர் லெவன் அணியில் இடம்பெறவில்லை. ஆரோன், ஹர்பஜன் கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. இருந்தாலும், இவர்களும் வெற்றிக்கு உதவி செய்தனர். கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறோம். வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆக்ரோஷத்துடன் செயல்பட்டார். இலங்கை வீரர்கள் இவரை இக்கட்டான நேரத்தில் கோபப்படுத்தினார். இது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்திய அணியின் ஆக்ரோஷ ஆட்டம் தொடரும். எங்களை பொறுத்தவரை டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்வது என்பது கடைசி விருப்பமாக தான் இருந்தது. வெற்றியை விட வீரர்களுக்கு வேறு எந்த வழியிலும் உற்சாகம் கிடைக்காது. தற்போது நடந்திருப்பது எதிர்காலத்தில் மற்ற அணிகளையும் வீழ்த்த ஊக்கமாக அமையும். கடந்த சில ஆண்டுகளாக டெஸ்டில் எப்படி செயல்பட வேண்டும் என கற்றுக் கொண்டோம். கடின பயிற்சியை விட வேறு எதுவும் வெற்றியை தராது.

  டெஸ்டில் களமிறங்கும் அணிகள் பெரும்பாலும் 4 முக்கிய பவுலர்கள் 6 பேட்ஸ்மேன்கள், 1 விக்கெட் கீப்பர் என்ற ரீதியில் தான் களமிறங்கும். தோனி கூட இப்படித் தான் செய்வார்.புதிய கேப்டன் கோஹ்லி, தாக்குதல் பாணியில் 5 பேட்ஸ்மேன்கள், 5 பவுலர்கள், 1 விக்கெட் கீப்பர் என்ற கணக்கில் களமிறங்கினார். காலே டெஸ்டில் இது காலை வாரி விட, பலத்த விமர்சனம் எழுந்தது. இருப்பினும், தனது முடிவில் உறுதியாக இருந்த கோஹ்லி, அடுத்த இரு டெஸ்டிலும் அதே திட்டத்துடன் களம் கண்டார்.
கடைசியில் இது நன்கு கைகொடுக்க, 22 ஆண்டுக்குப் பின் இலங்கை மண்ணில் தொடரை வென்று திரும்புகிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad