புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரை விமர்சனம்

              புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரை விமர்சனம்


ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி ஆகிய மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடித்த படம். 

ஆர்யா, மரண தண்டனை கைதி. ஷாம், ஆர்யாவை தூக்கில் போடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேஷ ஜெயில் அதிகாரி. விஜய் சேதுபதி, ஆர்யாவை தூக்கில் போடுகிற தொழிலாளி.

ஆர்யா, கம்யூனிச கொள்கையில் தீவிர பற்றுள்ள புரட்சிக்காரர். இந்திய ராணுவத்துக்கு எதிராக சதி செய்ததாக அவரை பலத்த பாதுகாப்புடன் கொண்டு வந்து சென்னையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கிறார், ஜெயில் அதிகாரி ஷாம்.

இந்த சமயத்தில், ஆர்யா சார்ந்துள்ள தீவிரவாத குழுவினர் சென்னைக்கு வருகிறார்கள். ஆர்யா ஜெயிலில் இருந்து தப்புவதற்கு அவர்கள் உதவ முன்வருகிறார்கள். தீவிரவாத குழுவின் தலைவியாக கார்த்திகா இருக்கிறார். தங்கள் திட்டத்துக்கு உதவும்படி, விஜய் சேதுபதியிடம் தீவிரவாத குழு கேட்கிறது. அவர்களுக்கு விஜய் சேதுபதியும் உதவ சம்மதிக்கிறார்.

ஆர்யா ஜெயிலில் இருந்து தப்பினாரா, இல்லையா? என்பது ‘கிளைமாக்ஸ்.’

தீவிர கம்யூனிசவாதியாக ஆர்யா. தாடி-மீசையுடன் கூடிய ஒப்பனை இல்லாத முகம். ஜெயில் உடை. மரணத்தின் விளிம்பில் கூட, கம்யூனிச தத்துவங்களை பேசுகிற துணிச்சலான தூக்கு தண்டனை கைதி. கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்து இருக்கிறார். கண்கள் வெறிக்க-வாய் பிளந்து கிடக்கும் அந்த கடைசி காட்சியில், அதிர்ச்சியில் உறைய வைக்கிறார்.

படத்தை தூக்கி நிறுத்தியிருப்பவர், ‘மெக்காலே’ என்ற ஜெயில் அதிகாரி கதாபாத்திரத்தில் வரும் ஷாம். அவருடைய ஒவ்வொரு அசைவிலும், பார்வையிலும், வசன உச்சரிப்பிலும் போலீஸ் வாசனை. நேர்மையும், கண்டிப்பும் மிகுந்த ஒரு இளம் ஜெயில் அதிகாரியை கண் முன் நிறுத்துகிறார். அவருடைய திடமான உடற்கட்டு அதற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. ‘‘தப்பு செய்கிறவனுக்கு தண்டனை கொடுக்கணும்... கை, கால்களை வெட்டணும்... அப்பதான் குற்றங்கள் குறையும்’’ என்று அவர் சொல்கிற காட்சியில், தியேட்டரில் கைதட்டுகிறார்கள். 

தூக்கில் போடுகிற வேலையை செய்யும் விஜய் சேதுபதி, சில இடங்களில் சிரிப்பு சேதுபதியாக மாறியிருக்கிறார். ‘‘நீதிபதி தீர்ப்பு சொல்லிவிட்டு பேனா நிப்பை உடைத்து விடுகிறார். போலீஸ் அதிகாரி தண்டனையை நிறைவேற்ற சொல்கிறார். தூக்கில் போடுவதற்கு ‘லிவர்’ஐ மட்டும் இழுக்கும் என்னை கொலைகாரன்னு சொல்கிறார்கள்’’ என்று புலம்பும் இடமும், ‘‘ஜனாதிபதியிடம் கருணை மனுக்கள் நிறைய வரும். அத்தனை மனுக்களையும் ஏற்றுக்கொண்டு தூக்கு தண்டனைகளை ரத்து செய்து விடலாம் என்பதற்காகத்தான் ஜனாதிபதி தேர்தலில் நிற்க மனு போட்டேன்’’ என்று சொல்கிற இடமும் உதாரண காட்சிகள்.

தீவிரவாத கும்பலுக்கு தலைமை ஏற்பவராக கார்த்திகா. பொருத்தமான தேர்வு.

ஒரு முழுமையான ஜெயிலையும், அதன் ஆழம், அகலம், மங்கலான வெளிச்சத்துடன் கூடிய அறைகள், சந்து பொந்துகள் எப்படி அமைந்திருக்கும்? என்பதையும் அரங்காக அமைத்திருக்கும் அபார திறனுக்காக ஆர்ட் டைரக்டர் செல்வகுமாரையும், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தையும் கைகுலுக்கி பாராட்டலாம். ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை, சில இடங்களில் ‘சஸ்பென்ஸ்’ படத்துக்குரிய திகில் ஏற்படுத்துகிறது.

ஜெயில், கைதிகள், அதிகாரிகள், அவர்களின் நடை-உடை-பாவனைகள், தூக்கு தண்டனை பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து, காட்சிப்படுத்தியது போன்ற ‘பக்கா’வான திரைக்கதை. படத்தின் முன் பகுதி, மெதுவாக நகர்கிறது. இடைவேளைக்குப்பின், யூகிக்க முடியாத காட்சிகளும், திருப்பங்களுமாக விறுவிறுப்பின் உச்சம். குறிப்பாக, ஆர்யா ஜெயிலில் இருந்து தப்பி செல்கிற இடம், பதற்றம் கூட்டுகிறது. ‘கிளைமாக்ஸ்,’ அதிர்ச்சி அடைய வைக்கிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please pay me only 1 billion @9789103040 in my account so i can disable all my ads ..I know you can't so disable the adblock !!.. : )