போட்டி சினிமா தொழிலாளர் சங்கம்: மன்சூர்அலிகான் தொடங்கினார்
நடிகர் மன்சூர்அலிகான் போட்டி சினிமா தொழிலாளர் சங்கத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கும் அதிரடி படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்காமல் வெளியேறினர். இதனால் கோர்ட்டு உத்தரவு பெற்று வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினார். இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட படைப்பாளிகளின் ஒருங்கிணைந்த இந்திய கூட்டமைப்பு (டாப்சி) என்ற பெயரில் புதிய சங்கத்தை துவக்கியுள்ளார்.
இந்த சங்கத்தில் நடிகர், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள், நடன கலைஞர்கள், ஸ்டன்ட் பயிற்சியாளர்கள், கலை இயக்குனர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ரூ.2 ஆயிரம் செலுத்தி உறுப்பினராகலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடக்க விழாவில் மன்சூர்அலிகான், ஜே.எம்.ஆரூண், பூவை ஜேம்ஸ், விடுதலை சிறுத்தைகள் வன்னியரசு, தயாரிப்பாளர்கள் சுரேஷ், காமாட்சி திருமலை, ராஜா, தங்கராஜ், கே.பி. குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இச்சங்கத்தின் தலைவராக மன்சூர்அலிகான், செயலாளராக சந்திரசேகர், துணைத் தலைவராக லயன் ஆர்.எம்.தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
வருடம் தோறும் நடிகர்களுக்கு நாடக போட்டிகளும், தொழிலாளர்களை கொண்டு மே தின ஊர் வலமும் நடத்தப்படும் என்றும் உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிகள், இன்சூரன்ஸ், இறக்க நேரிட்டால் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என்றும் மன்சூர்அலிகான் அறிவித்து உள்ளார்.