Type Here to Get Search Results !

மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம்...



மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு ரக மாதுளை பழங்களில் அதிக அளவு சக்தி உள்ளது. மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. புளிப்பு மாதுளை வயிற்று கடுப்பை நீக்குகிறது. ரத்த வயிற்றுப்போக்கிற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது.
பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய அனைத்து வகையான அல்சரையும் குணமாக்குகிறது. இதய நோய்கள், இதய பலகீனம் போன்றவை குணமாகும். ரத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்மையை அதிகரிக்கிறது.
புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாக சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2 அல்லது 5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும். மாதுளம் முத்துக்களில் சிறிதளவு மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால் அனைத்து வகையான பித்த நோய்களும் தீரும். மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு நீங்கும். உடல் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரம் போட்டு அதில் பாதாம் எண்ணெய் 15 மில்லி அளவு ஊற்றி ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்கு பிறகு தினமும் சாப்பிட்டால், ஒரு மாதத்தில் உடல் ஆரோக்கியம் பெறும். புதிய ரத்தம் உற்பத்தியாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே பூவின் பொடியை மூன்று தினங்களுக்கு கொடுத்தால் பலன் கிடைக்கும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, மயக்கம் போன்றவை தீரும். மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் தீரும். மாதுளம் மொட்டுக்களை காய வைத்து பொடித்துக்கொண்டு சிறிதளவு ஏலம், கசகசா ஆகியவற்றை பொடித்து கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் குணமாகும்.
உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்து கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தை கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சர்க்கரை சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களை தலையில் வைத்து கட்டிக் கொண்டால் தலைவலி தீரும்.
மாதுளம் பூக்களுடன் அருகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம் ஆகியவற்றை சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்து 30 மில்லி எடுத்துக்கொண்டு அதில் பசு வெண்ணெய் சேர்த்து கலக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும். அலர்ஜியை குணமாக்கும். மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் விலகும்.
மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றை சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பம் தொடர்பான நோய்கள் குணமாகும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் பற்கள் கெட்டிப்படும். ஈறுகளின் நோய் தீரும். பற்களின் வலி குறையும். தினமும் ஒரு கப் மாதுளம்பழச்சாறு குடித்து வர 15 நாட்களில் டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பின் அளவு அதிகரிக்கிறது. ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் தசை, எலும்பு நோய்கள், உடல்வலி, அட்ரீனலின் சுரப்பு கோளாறுகள், கருப்பை பிரச்னை போன்றவை குணமாக்குகிறது.
செக்ஸ் உணர்வு இல்லாதவர்களுக்கு மாதுளம்பழச்சாறு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத அருமருந்து என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு எனவும், ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு புற்று நோய் ஏற்படலாம் என ஆய்வுகள் கூறுகிறது. மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்பம் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad