Type Here to Get Search Results !

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது; மதுக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி இருக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் தளர்வு நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாளை முதல் அனுமதி

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 24-3-2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. கடந்த 2-5-2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும், பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) கீழ்க்காணும் பணிகள், 11-5-2020 (நாளை) முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

மளிகை கடைகள்

* அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் (அனைத்து தனி கடைகள்) காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

* அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் (அனைத்து தனி கடைகள்) காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

டீ கடைகள்

* சென்னை மாநகராட்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) தேனீர் கடைகள் (டீ கடைகள்) பார்சல் சேவைக்கு மட்டும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* தேனீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மேலும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். கடையில், வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைப்பிடிக்க தவறும் தேனீர் கடைகள் உடனடியாக மூடப்படும்.

* பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி செயல்படும்.

* பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் செயல்படும்.

தனியார் நிறுவனங்கள்

* பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

* பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

அரசால் அறிவுறுத்தப்பட்ட தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதையும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிப்பதையும், கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களும், மாநகராட்சி கமிஷனர்களும், காவல் துறையினரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒத்துழைப்பு

அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைப்பிடிக்கப்படும். கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அ.தி.மு.க. அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மதுக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
மது விற்பனையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அமல் படுத்தாததால், ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைளை திறப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தேவைப்பட்டால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு, வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் (‘டோர் டெலிவரி’) முறையை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனால் 2 நாள் விற்பனைக்கு பிறகு மதுக்கடைகளை தமிழக அரசு இழுத்து மூடியது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா நேற்று தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டதாவது:-

கடந்த 8-ந் தேதி மதுக்கடைகளை மூடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது மாநில அரசுகளின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்பதால் அந்த மனுவை விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்துள்ளது. மேலும் சென்னை ஐகோர்ட்டில் தாக்கலான சில மனுக்கள் இந்த சூழலை பயன்படுத்தி பெருமளவு லாபம் ஈட்டும் வணிக நலன் கொண்டதாக மாநில அரசு நம்புவதற்கான காரணங்கள் உள்ளன.

மதுவிற்பனையை எந்த வழிமுறையில் செய்ய வேண்டும் என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் ஐகோர்ட்டின் தற்போதைய உத்தரவு சட்டரீதியாக முகாந்திரம் கொண்டது அல்ல என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக விசாரிக்கவேண்டும் என்று பா.ம.க. வக்கீல் கே.பாலு, மக்கள் நீதி மையம் கட்சியின் அமைப்பு பொதுசெயலாளர் ஏ.ஜி.மவுரியா, மக்கள் அதிகாரம் அமைப்பின் ஜி.ராஜேஷ், மகாலஷ்மி மகளிர் ஆயம் லஷ்மி மணியரசன் ஆகியோரும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad