Type Here to Get Search Results !

சென்னை மாநகரில் மேலும் 14 பேருக்கு கொரோனா; திருவள்ளூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
சென்னை மாநகரில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை மாநகரில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் ஒரு காவலர்,  ராயப்பேட்டையில் குப்பை லாரி ஓட்டுனருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா - துணிக்கடை வியாபாரி குணமடைந்து வீடு திரும்பினார்
திருவள்ளூரை அடுத்த பெரிய எடப்பாளையத்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் சென்னை கோயம்பேட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.


இதைத்தொடர்ந்து பெரிய எடப்பாளையத்தை சேர்ந்த மேலும் இரண்டு பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல திருவள்ளூர் அடுத்த நேமம், கூடப்பாக்கம் போன்ற பகுதிகளில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வியாபாரி குணம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரிய எடப்பாளையம், நேமம், கூடப்பாக்கம் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க துணிக்கடை வியாபாரி ஒருவர் கடந்த மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து துணிக்கடை உரிமையாளர் தற்போது குணம் அடைந்து விட்ட காரணத்தால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அவருக்கு பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கும்மிடிப்பூண்டி தாலுகாவில்...

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை முடிந்து நேற்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் வீடு திரும்பினார். அவருக்கு ஆரம்பாக்கம் பகுதியில் தாசில்தார் குமார் தலைமையில் வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். வருவாய் துறை சார்பாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அந்தப் பெண்ணிற்கு புத்தகமும் போலீசார் சார்பாக இனிப்புகளும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் கும்மி டிப்பூண்டி தாலுகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருப்பதால், தற்போது கும்மிடிப்பூண்டி தாலுகா கொரோனா தொற்று இல்லாத பகுதியாக மாறி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கர்ப்பிணி உள்பட 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி
சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய தாம்பரம் பகுதியில் 76 வயது முதியவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். திருநீர்மலை லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி, இரும்புலியூர் பகுதியில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந் தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் செங்கல்பட்டு அரசு ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

செம்பாக்கம் நகராட்சி ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் ஆவடியில் பணிபுரிந்து வரும் 34 வயது போலீஸ்காரருக்கும், கீழ்கட்டளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் முதலில் பாதிக்கப்பட்ட வாலிபரின் 32 வயது சகோதரிக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதன் மூலம் ஒரே குடும்பத்தில் 7 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏர் இந்தியா ஊழியர்

ஊரப்பாக்கம் காரணை புதுச்சேரி மலையம்மன் நகரில் 32 வயதான 108 ஆம்புலன்ஸ் ஊழியருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் மூலம் இவருக்கு பரவியது தெரிந்தது. பரங்கிமலை கண்டோன்மென்ட் பகுதி நசரத்புரத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபருக்கு, அவரது வீட்டின் அருகே வசித்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் பரவி இருப்பது தெரிந்தது.

அதே நசரத்புரத்தை சேர்ந்த 42 வயதான ஏர் இந்தியா ஊழியர் ஒருவர் சர்க்கரை நோயால் வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் துப்புரவு உதவியாளராக வேலை பார்த்து வரும் பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியில் 26 வயதான வாலிபரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். நேற்று ஒரே நாளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.

முதியோர் இல்லத்தில் மூதாட்டி

போரூர் அடுத்த காரம்பாக்கம், செட்டியார் அகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான முதியோர் இல்லம் உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர் தங்கி உள்ளனர். இங்குள்ள 85 வயது மூதாட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு வயிற்று போக்கு ஏற்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் முதியோர் இல்லத்தில் வசிக்கும் மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்கு வசிக்கும் ஒரு மூதாட்டியை பார்க்க அவரது உறவினர்கள் வந்து சென்றதாகவும், அவர்கள் மூலமாக இந்த மூதாட்டிக்கு கொரோனா பரவியதா? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கோயம்பேடு மார்க்கெட்

மதுரவாயல், எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த 32 வயது வாலிபர், கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வெங்காய மண்டியில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவரது மண்டியில் வெங்காயம் வாங்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் சந்தேகத்தின் பேரில் இவர் தானாக முன்வந்து பரிசோதனை செய்தார். அதில் அவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

திருப்பூரைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடையாறில் உள்ள புற்றுநோய் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும் தனிமைப்படுத்திக் கொள்ளுபடி டாக்டர் கூறியதால் திருவேற்காடு அடுத்த புளியம்பேடு பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் மனைவியுடன் தனிமைப்படுத்தி இருந்தார். மீண்டும் அவருக்கு சளி, காய்ச்சல் வந்ததால் வளசரவாக்கத்தில் ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆயுதப்படை போலீஸ்காரர்

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஆயுதப்படை போலீஸ்காரர், சென்னை தண்டையார் பேட்டை போலீஸ் நிலையத்தில் ரோந்து வாகன டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அவருடைய மனைவி சொந்த ஊரில் வசிக்க இவர், மட்டும் இங்கு தனியாக வசித்து வருகிறார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. அவர் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அதேபோல் ஆவடி வசந்தம் நகரில் 52 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமைந்தகரையில் உள்ள ஒரு மருந்து கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அங்கு வேலை செய்யும் 40 பேருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் இவர் உள்பட 3 பேருக்கு கொரோனா உறுதியானதால் இவர், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அங்கேயே தங்கி இருந்தனர். அதில் 29 வயதான வாலிபருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் ஒரே இடத்தில் உள்ள இவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது எப்படி என தெரியவில்லை.

அரியலூர் மாவட்ட மோப்பநாய் பிரிவு போலீஸ்காரருக்கு கொரோனா
அரியலூர் மாவட்ட மோப்பநாய் பிரிவு போலீஸ்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று

அரியலூர் நகரில் பணியாற்றும் போலீசாருக்கு கடந்த திங்கட்கிழமை முதல் படிப்படியாக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் மோப்பநாய் பிரிவில் பணியாற்றும் 35 வயதுடைய போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் உடனடியாக திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.


மேலும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் மோப்பநாய் பிரிவில் பணியாற்றும் 8 போலீசாருக்கும் உடனடியாக சளி மற்றும் ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று அரியலூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பின்பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் உள்ள 150 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்படுகிறது.

கணக்கெடுக்கும் பணி

அப்பகுதிக்கு நகராட்சி தூய்மை பணியாளர்கள் 3 வாகனங்களில் சென்று வீடு மற்றும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்துள்ளனர். மேலும் அவர் பயிற்சி அளித்த மோப்பநாய்கள் வசிக்கும் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் நகர் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரியலூர் நகரம், எருதுக்காரன்பட்டி, வாலாஜாநகரம், தவுத்தாய்குளம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 20 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 75 ஆயிரம் பேரை சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை கொண்டு வீடுவீடாக சென்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் தலா ஒரு மருத்துவர், 2 சுகாதார செவிலியர் மற்றும் 4 அங்கன்வாடி பணியாளர்கள் என 50 பேர் கொண்ட குழு தலா 50 வீடுகளை கண்காணிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8 ஆக உயர்ந்துள்ளது

இந்த மருத்துவக்குழுவினர் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவு உள்ளதா? என்றும், சர்க்கரை நோயாளிகள் உள்ளனரா?, வயதான முதியவர்கள் மட்டும் வசிக்கின்றனரா?, சமீபத்தில் வெளியூரில் இருந்து யாராவது அரியலூருக்கு வந்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு குறிப்புகளை எடுத்து வருகின்றனர். கணக்கெடுப்பின்போது காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் போலீஸ்காரருடன் சேர்த்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. போலீஸ் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்தும், வாசலில் வேப்பிலை தோரணம் கட்டியும் வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad