Type Here to Get Search Results !

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் பருகலாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி; கொரோனா தொற்று; நாடு முழுவதும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தல்

கொரோனா நோய்க்கான சிகிச்சை அல்ல எனவும், பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட வழிமுறைகள் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது. 
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுர குடிநீரைப் பருகலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “கொரோனா வைரஸ் தொற்று நோயினைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல உத்திகளைக் கையாண்டு வருகிறது, இதன் ஒருபகுதியாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் கோவிட் -19 தொற்று நோயினை தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியது. அதில் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வழிகாட்டுதலை வழங்கியது.

தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 11 மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த மூத்த இந்திய மருத்துவர்களும், மூத்த அலோபதி மருத்துவர்களும் இடம்பெற்று, ஆலோசனை செய்து அரசுக்கு தங்களுடைய பரிந்துரைகளை வழங்கினார்கள்.

அதில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவமுறைகளில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆரோக்கியம் என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் வழிமுறைகளை வெளியிட பரிந்துரைகளை வழங்கினார்கள்.

தமிழக முதலமைச்சர் வல்லுநர்களின் பரிந்துரைகளை ஏற்று, தமிழ்நாட்டு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும், சிகிச்சை பெற்ற பின் உடல் நலத்தைப் பேணவும் இன்று ஆரோக்கியம் என்ற சிறப்புத் திட்டத்தினைத் தொடங்கி வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதற்கும், உடல் நலம் பேணுவதற்கும், பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் சூரணப் பொட்டலங்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து  இந்த விநியோகத்திலும் சம்பந்தப்பட்ட அலுவலர்களும், பயனாளிகளும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.இந்த சிறப்புத் திட்டத்தின் வழிமுறைகள், கொரோனா நோய்க்கான சிகிச்சை அல்ல எனவும், பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட வழிமுறைகள் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது” இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று; நாடு முழுவதும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தல்
இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 21,393 பேர்   கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 681 பேர் உயிரிழந்த நிலையில், 4257 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா  வைரஸ் பரவலை தடுப்பதற்காக அடுத்த மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா பரவல் சமூக தொற்றாக மாறுவதை தடுப்பதற்காக, மக்களிடம் அதிகளவில் பரிசோதனை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  ஊரடங்கை  தற்போதுள்ள நடைமுறைகளில் நடத்தப்படும் பரிசோதனைகளின் முடிவுகள் கிடைப்பதற்கு 3 நாட்கள் வரை ஆகின்றன. எனவே, பரிசோதனையை  விரைவாக நடத்துவதற்காக சீனாவிடம் இருந்து  ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ எனப்படும் விரைவு பரிசோதனை கருவிகளை வாங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த வாரம் முதலில் 6,5 லட்சம் கருவிகளும், அதைத் தொடர்ந்து 3 லட்சம் கருவிகளும் 2 கட்டங்களாக வாங்கப்பட்டன. இந்நிலையில், இந்த   கருவிகளை பயன்படுத்தி பல்வேறு மாநிலங்கள் சோதனை நடத்தி வருகின்றன. ஆனால், இந்த கருவியால் நடத்தப்படும் பரிசோதனைகளில் 95 சதவீதம் தவறான  முடிவுகளை காட்டுவதாக மாநில அரசுகள் குற்றம்சாட்டி உள்ளன. இதையடுத்து, இந்த கருவிகளை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என தடை   விதித்து அனைத்து நிலங்களுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டது.

இந்நிலையில், ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனைக்கு தடை விதித்தது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக  அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுக்கு ஐசிஎம்ஆர் எழுதிய கடிதத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு ANTIBODY எனப்படும் பிறபொருளெதிரி  உருவாவதை கண்டறியவே ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்தப்படுகிறது. கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம்;  கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை உறுதி செய்ய ஆர்.டி. கிட் (ரேபிட் டெஸ்ட் கிட்) எனப்படும் துரித பரிசோதனை உபகரணங்களை கொண்டு பரிசோதனைகள் செய்து கொரோனா பாதித்த நபரா? அல்லது இல்லையா என 45 நிமிடங்கள் முதல் 2 மணிநேரத்தில் உறுதி செய்ய முடியும்.

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், ரேபிட் கிட்டின் பரிசோதனை முடிவுகள் துல்லியமானதாக இல்லை எனக்கூறி ராஜஸ்தான் அரசு கடந்த இரு நாட்களுக்கு முன் நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில், அடுத்த இரு நாட்களுக்கு கொரோனாவை கண்டறிய ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ அராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்தது. ரேபிட் கிட் கருவிகள் மாறுபட்ட முடிவுகளை காட்டுவதாக வெளியான தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

"ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகளின் தரத்தினை பரிசோதித்து வருகிறோம், மீண்டும் இந்த கருவிகளை கொண்டு சோதனையை தொடங்குவது பற்றி விரைவில் அறிவுறுத்தல் வழங்கப்படும் " என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருந்தது.

இதன்படி, கொரோனா தொற்றை உறுதி செய்ய நாடு முழுவதும் பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad