Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனாவுக்கு 603 பேர் பலி; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியது; இந்தியாவில் ரேபிட் டெஸ்ட் கிட் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 44 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 603 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் தவிர மற்ற தொழில்கள் அனைத்தும் முடங்கி உள்ளதால் வேலையின்றி தவித்து வரும் நிலையில் கூட வெவ்வேறு மாநிலங்களில் குடியேறியவர்கள், சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். ஆனாலும் வைரசால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து எப்படியாவது கொரோனா நாட்டில் இருந்து ஒழிந்தால் போதும் என்ற மனநிலைக்கு இடம்பெயர்ந்த மக்கள் வந்துவிட்டார்கள். எனினும் கொரோனா தனது கோரப்பிடியை இன்னும் இறுக்கிக்கொண்டேதான் செல்கிறது. இதனால்தான் 20-ந்தேதி முதல் மாநிலங்கள் ஊரடங்கில் சில தளர்வுகளை கொண்டுவரலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு பல மாநிலங்களில் அமலுக்கு வராமலே போய்விட்டன.

கொரோனா வைரசின் பாதிப்பை பலர் உணர்ந்திருந்தாலும், தொடர்ந்து போதிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காததே வைரஸ் பரவலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ஒரே நாளில் 1,300-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,985 ஆக உள்ளது. இதில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3,200-க்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். ஈவு இரக்கமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வரும் கொரோனா, புதிதாக 44 பேரின் உயிரையும் பறித்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 603 ஆகிவிட்டது.

மராட்டியத்தில் புதிதாக 460-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,600-ஐ தாண்டி உள்ளது. டெல்லியில் இந்த வைரஸ் பாதிப்பால் 2,080-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் இந்த எண்ணிக்கை 2,000-ஐ கடந்துவிட்டது. ராஜஸ்தானில் 1,650-க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,596 ஆக அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 750-க்கும் அதிகமானோரையும், கர்நாடகாவில் 400-க்கும் மேற்பட்டோரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. கேரளாவில் புதிதாக 18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 426 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் மகாராஷ்டிரா மாநிலத்தில் 5,218 பேருக்கு பாதிப்பு: மத்திய அரசு
 கொரோனாவால் மகாராஷ்டிரா மாநிலத்தில் 5,218 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் 251 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 722 பேர் குணமடைந்துள்ளனர் என்று  மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரிசோதனைக்காக இந்தியாவில் ரேபிட் டெஸ்ட் கிட் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது
கொரோனா தொற்று பரிசோதனைக்காக இந்தியாவில் ரேபிட் டெஸ்ட் கிட் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது. ஹரியானா மனேசரில் உள்ள ஆலையில் தென்கொரியாவின் பயோசென்சார் நிறுவனம் பணியை தொடங்கியது. முதற்கட்டமாக வாரத்திற்கு 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தயாரிக்கப்பட உள்ளன. தேவைக்கேற்ப ரேபிட் கிட்டுகளின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என பயோசென்சார் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad