Type Here to Get Search Results !

மேச்சேரி அருகே, நர்சரி கார்டனில் திடீர் தீ - ரூ.2 லட்சம் பொருட்கள் நாசம்

மேச்சேரியில் நர்சரி கார்டனில் திடீரென தீப்பற்றி எரிந்ததில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்தன.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கோல்காரனூரில், எடப்பாடியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மனைவி ஜெயா நர்சரி கார்டன் நடத்தி வந்தார். இந்த நர்சரி கார்டனையொட்டி அலுவலகமும், விதை உள்ளிட்ட மூலப்பொருட்கள் வைக்கும் இடமும் கொட்டகையால் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு கண்காணிப்பு கேமராவும் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் அந்த கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நங்கவள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மேச்சேரி போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து நர்சரி கார்டன் கொட்டகையில் எப்படி தீப்பிடித்தது? என விசாரணை நடத்தினர். இதில் நர்சரி கார்டன் கொட்டகையையொட்டி ஒரு மின்சார டிரான்ஸ்பார்மரில் காகம் உட்கார்ந்துள்ளது. இதனால் தீப்பொறி ஏற்பட்டு, டிரான்ஸ்பார்மர் கீழே குவிக்கப்பட்டு இருந்த காய்ந்த சருகுகளில் விழுந்துள்ளது. இதில் அந்த சருகுகளில் தீப்பிடித்து அந்த தீ கொட்டகைக்கு பரவியது தெரியவந்தது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

பொங்கலூர் அருகே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது - 50 லிட்டர் ஊறல் பறிமுதல்
பொங்கலூர் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 4 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இதனை பயன்படுத்தி தற்போது ஒரு சில இடங்களில் சாராயம் மற்றும் தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்வது நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பொங்கலூரை அடுத்த கள்ளிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வலையபாளையத்தில் உள்ள செந்தில்குமார் என்பவரது வீட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனடியாக பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு பாப்பான் (வயது 45), ராமசாமி (35), வீட்டின் உரிமையாளரான செந்தில்குமார்(45) ஆகிய 3 பேர் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் 3 பேரையும் கைது செய்து அங்கு சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த ஊறல் 50 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 4 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் பல்லடத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் அருகே, முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக் கொலை - தலைமறைவான சகோதரர்களுக்கு வலைவீச்சு
திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தலைமறைவான சகோதரர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் காலனி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அசோக்குமார்(வயது 27). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும், கவுசிகா(3) என்ற மகளும், ரக்சித் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை அசோக்குமார் புன்னப்பாக்கம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் அவரது சகோதரரான சுரேந்திரன் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து அசோக்குமாரை சுற்றிவளைத்து பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.இதில் தலை மற்றும் முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய அசோக்குமாரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல், அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், கடந்த 2018-ம் ஆண்டு புன்னப்பாக்கம் காலனியைச் சேர்ந்த சுதாகர் என்பவர், தன் பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டியபோது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுதாகர், அசோக்குமார், அஜய், தமிழ்மணி, சுரேந்தர் உள்ளிட்ட 5 பேரும் சுரேஷ்குமார் தரப்பினரை கத்தியால் வெட்டியதாக தெரிகிறது. இதுபற்றி சுரேஷ்குமார் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மேற்கண்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று அசோக்குமார் புன்னப்பாக்கம் பகுதியில் இருந்த போது, முன்விரோதத்தில் அவரை சுற்றிவளைத்த சுரேஷ்குமார் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக புல்லரம்பாக்கம் போலீசார் தலைமறைவாக உள்ள சகோதரர்களான சுரேந்திரன் மற்றும் சுரேஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் 3-வது மாடி பால்கனி இடிந்து விழுந்தது 3 சிறுவர்கள் காயம்
சென்னை கோடம்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் 3-வது மாடி பால்கனி இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.

சென்னை கோடம்பாக்கம், தெற்கு சிவன் கோவில் தெருவில் புலியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. மிகவும் பழமையான இந்த கட்டிடத்தில் 428 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பின் ஈ பிளாக் 3-வது மாடியில் நிர்மல் என்பவர் வசித்து வருகிறார்.

நேற்று மாலை இவரது வீட்டின் பின்பகுதியில் உள்ள பால்கனியில் இவருடைய மகன் ஜீவா(வயது 10), பக்கத்து வீட்டில் வசிக்கும் பவித்ரன்(6) மற்றும் கவின்(9) ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென 3-வது மாடியின் பால்கனி இடிந்து 2-வது மாடியில் விழுந்தது. இதில் 2-வது மாடி பால்கனியும் இடிந்து முதல் மாடியில் உள்ள பால்கனியில் பலத்த சத்தத்துடன் விழுந்தது. 3-வது மற்றும் 2-வது மாடியில் உள்ள பால்கனிகள் முற்றிலும் இடிந்த நிலையில் முதல் மாடியில் உள்ள பால்கனியின் ஒரு பகுதி மட்டும் சேதமானது.

இதில் 3-வது மாடி பால்கனியில் நின்றிருந்த சிறுவர்கள் 3 பேரும் கீழே விழுந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சிறுவர்களின் பெற்றோர்கள் ஓடிவந்து 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் -சாராய வழக்கில் 13 பேர் கைது
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சாராயம் விற்றதாக முருகன் (வயது 37), மம்பட்டியான் (45), செல்லதுரை (34), மாதேஸ்வரன் (33), மூர்த்தி (34), பிரபு (30) உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 53 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொப்பூர் அருகே உள்ள கோம்பை பகுதியை சேர்ந்தவர் மன்னன் என்கிற மனோகரன்(53). இவர் தனது விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தொப்பூர் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு மனோகரன் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். குந்துகோட்டை அருகே ஏணிசந்திரம் வனப்பகுதியில் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த மாரப்பா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சொப்புகுட்டை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய அஜ்மத்கான் (52) என்பவரை போலீசார் கைது செய்தனர். 150 லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டது. முத்துராயன்கொட்டாய் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய பழனியப்பா (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் ஏரி சின்னகானம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மாதப்பன் (37) என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அவருடைய வீட்டில் சோதனை செய்தபோது 50 லிட்டர் சாராய ஊறல் மற்றும் ஒரு லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாதப்பனை போலீசார் கைது செய்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad